மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...!
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பணிக்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட மஹிந்திரா தார் எஸ்யூவி மாடலில் சென்றபோதும், மக்களின் கூட்டத்தால் சரியான நேரத்தில் மனுத்தாக்கல் செய்ய முடியாமல் திரும்பி வந்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இனி பார்ப்போம்.

தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் சூடுப்பிடித்துள்ளது. அதன்படி இன்று (ஜனவரி 20) ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும் தற்போதைய டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்ய மிக பெரிய தொண்டர்கள் கூட்டத்துடன் தேர்தல் ஆணையர் அலுவலத்திற்கு விரைந்தார்.

இடையில் வாக்குகளையும் சேகரித்த அவர், இந்த பயணத்தை மிகவும் மெதுவாக பேரணி போன்றே மேற்கொண்டார். இதனால் அவர் சென்ற சாலைகள் அனைத்தும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. இந்த பயணத்திற்காக அவர் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட மஹிந்திரா தார் எஸ்யூவி மாடலை பயன்படுத்தினார்.

மனுத்தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைவதற்கு பல மணிநேரங்கள் முன்கூட்டியே சென்றிருப்பினும் கெஜ்ரிவாலால் மாலை 3 மணிக்கு முன்பாக செல்ல முடியவில்லை. இதனால் அவர் மனுத்தாக்கல் செய்யாமலேயே திரும்பியுள்ளார். 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய இன்னும் ஒருநாள் அவகாசம் உள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மனுத்தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. கடந்த 2015ல் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இந்த மனுத்தாக்கல் பயணத்திற்கு பயன்படுத்திய மஹிந்திரா தார் எஸ்யூவி மாடலை பற்றி கூறவேண்டுமென்றால், ஆப்-ரோட்டிற்கு ஏற்ற எஸ்யூவி கார்களின் பிரிவில் தார் எஸ்யூவி மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் பெற்று வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் தனது தயாரிப்பு கார்களை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டு வருகின்ற தார் மாடல், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த 2020 எஸ்யூவியின் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

வெளியாகிவரும் இதன் சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் இந்த எஸ்யூவி மாடலில் பிஎஸ்6 அப்டேட்டால் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது 7-ஸ்லாட் க்ரில், வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்தில் முன்புற பம்பர் உள்ளிட்ட புதிய டிசைன்கள் தார் பிஎஸ்6 மாடலில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த புதிய டிசைன்களால் காரின் பரிமாண அளவும் அதிகரித்துள்ளது. புதிய 2020 தார் எஸ்யூவி தற்போதைய மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும். உட்புறத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் இணைக்கக்கூடிய வசதி கொண்ட புதிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் பயன்படுத்தியுள்ள மஹிந்திரா தார், ஆம் ஆத்மி கட்சியின் மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களில் பெயிண்ட் அமைப்பை பெற்றிருந்தது. இந்த தேர்தலில் இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துடைப்பம் சின்னம் காரின் முன்புற க்ரில்-லிலும், ஆம் ஆத்மி என்கிற என்கிற எழுத்து முன்புற பொனெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஓட்டுனருக்கு அருகே நின்று வாக்கு சேகரித்த அரவிந்த் கெஜ்ரிவாலை பாதுகாக்கும் விதமாக அவரை சுற்றி நான்கு புறங்களிலும் தடுப்புகள் மற்றும் கண்ணாடி ஷீல்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் பணிக்கு தார் எஸ்யூவி மிகவும் ஏற்ற வாகனமாக உள்ளதாலும் கஸ்டமைஸ்ட் செய்வதற்கு அதிகளவில் வசதிகளை கொண்டுள்ளதாலும் கெஜ்ரிவால் இந்த வாகனத்தை வாக்கு சேகரிக்க பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறு கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட வாகனத்தை பயன்படுத்தியும் கெஜ்ரிவாலால் மனுத்தாக்கலை சரியான நேரத்தில் செய்ய முடியாமல் போனது சிறு வருத்தமே. டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் பிப்ரவரி 11ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications








