கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் நேரா பழைய இரும்பு கடைக்கு தான்! எல்லாரும் வேண்டாம்னு சொல்லியும் போன தார் டிரைவர்!
மஹிந்திரா தார் (Mahindra Thar), இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம். கரடு முரடான பாதையிலும், ஏற்ற இறக்கமான மலைப்பாதைகளிலும் வாகனம் ஓட்ட விரும்புபவர்கள் முதலாவதாக வாங்குவது மஹிந்திரா தார் வாகனத்தை ஆகும். குறிப்பாக, மலைப்பிரதேச மாநிலங்களான கேரளா (Kerala) போன்றவற்றில் தார் வாகனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அவ்வாறு கேரளாவில் பயன்படுத்தப்படும் தார் வாகனம் ஒன்று சாலையில் மார்பளவு தேங்கி கிடந்த மழைநீரில் அசால்ட்டாக சென்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
நாடு முழுவதும் நிறைய இடங்களில் கோடை காலம் நிறைவடைந்து பருவ மழை காலம் துவங்கிவிட்டது. பெங்களூருவில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது கனமழை வெளுத்து வாங்கி வருவதை பார்த்து வருகிறோம். அதேபோல், கேரளாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. ஒவ்வொரு வருடத்திலும் முதலாவதாக வரும் தென்மேற்கு பருவ மழை வழக்கம்போல் கேரளாவில் துவங்கிவிட்டது.

ஆனால் அதற்குள்ளாகவே, கேரளாவின் கோட்டயத்தில் கனமழையினால் பல பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. குறிப்பாக, கோட்டயத்தின் பலா நகரத்தில் குறிப்பிட்ட ஒரு தாழ்வான சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கும் அளவிற்கு சாரசரி மனிதனின் மார்பளவுக்கு மழைநீர் தேங்கி கிடக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட சாலையில் தார் வாகன ஓட்டி ஒருவர் மட்டும் தைரியமாக தனது வாகனத்தை கொண்டு சென்றுள்ளார்.
அந்த தார் வாகனமும் உரிமையாளரின் நம்பிக்கைக்கு ஏற்ப மழைநீரை கடந்து வெற்றிக்கரமாக வெளியே வந்துள்ளது. சுற்றியிருந்த மற்ற வாகன ஓட்டிகள் வேண்டாம் என தடுக்க முயன்ற போதிலும், இந்த தார் டிரைவர் மட்டும் தனது வாகனத்தின் செயல்திறன் மீது நம்பிக்கை வைத்து குளத்தில் இறக்குவதுபோல் வாகனத்தை இறக்கி வெற்றிக்கரமாக மறுமுனையில் வெளியேற்றி உள்ளார்.

மழைநீர் மார்பளவுக்கு உள்ளதால், ஒரு கட்டத்தில் வாகனத்தின் பொனெட் முழுவதையும் மழைநீர் மூழ்கடித்துள்ளது. இதனால், வாகனத்திற்குள் நீர் கசிந்து இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், நீருக்கு வெளியே இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டுமின்றி, வாகனத்திற்கு உள்ளே இருந்து டேஸ்போர்டு கேமரா மூலமாக எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
வெள்ளை நிறத்திலான இந்த தார் வாகனத்தை ஓட்டியவர் மெதுவாகவே நீரில் வாகனத்தை ஓட்டியுள்ளார். முக்கியமாக, எந்த இடத்திலும் வாகனத்தை நிறுத்தவில்லை; அதேபோல் எந்த இடத்திலும் வாகனத்தின் வேகத்தை குறைக்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், சில இடங்களில் வாகனத்தின் வேகத்தை அதிகரித்து பெரிய நீர் அலைகளை டிரைவர் உருவாக்கியுள்ளதை பார்க்கலாம்.
எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த நீர் அலைகளை அவர் வேண்டுமென்றே ஏற்படுத்தி இருக்கலாம். ஏனெனில், இவ்வாறு பொனெட்டை மூழ்கடிக்கக்கூடிய நீரில் செல்லும்போது, என்ஜினிற்கான காற்று கிடைக்காமல் போகும். ஆதலால் அலைகளை உருவாக்கி, வாகனத்திற்கு முன் இருக்கும் நீரின் அளவை குறைத்து சில வினாடிகளுக்கு என்ஜினிற்கு காற்று கிடைக்கும்படி செய்துள்ளார்.
இவ்வாறு நீரில் பலமுறை வாகனம் ஓட்டிய அனுபவம் உள்ளவர் போன்று அசால்ட்டாக இந்த மஹிந்திரா தார் வாகனத்தை ஓட்டி அசத்தி உள்ளார். 3-கதவு கொண்ட மஹிந்திரா தார் மற்றும் 5-கதவு கொண்ட தார் ராக்ஸ் என இரு வாகனங்களையும் அதிகப்பட்சமாக 650மிமீ (0.65மீ) ஆழம் கொண்ட நீரில் ஓட்டி செல்ல முடியும். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பது 3-கதவு கொண்ட தார் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவத்தில், மஹிந்திரா தாரின் செயல்திறன் மற்றும் டிரைவரின் திறமை என இரண்டும் ஒரு சேர இதனை நிகழ்த்தி காட்டி உள்ளது. உண்மையில் நன்கு ஆழமான நீரில்தான் இந்த மஹிந்திரா தார் வாகனம் இயக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாகனத்தின் டேஸ்போர்டு காட்சிகள் பார்ப்பதற்கு பயங்கரமாக உள்ளது. கொஞ்சம் மழை பெய்தாலே மழைநீர் தேங்கிவிட கூடிய நம்ம ஊர் சாலைகளுக்கு மஹிந்திரா தார் போன்ற வாகனங்களே ஏற்றவை என்பது இந்த நிகழ்வு மூலமாக நம்மால் அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








