உள்ளே போன மது போதை என்னென்ன செய்ய சொல்லுது பாருங்க! இரயில் ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது எந்த அளவிற்கு தீங்கானது என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனம் ஒன்று சேதமடைந்து இருக்கும் நிலையில், சம்பவத்திற்கு காரணமானவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தில் அப்படி என்ன தான் நடந்தது? வாருங்கள் அதனை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் பலருக்கு மத்தியில் கவனத்தை பெற வேண்டும் என்பதில் நம்மில் நிறைய பேர் ஆர்வமாக உள்ளோம். இதற்காக சிலர் விசித்திரமான செயல்களில் கூட ஈடுப்படுவதை பார்த்திருப்பீர்கள். இந்த செயல்கள் சில சமயங்களில் ஆபத்தில் சென்று முடிகின்றன. அவ்வாறுதான், இங்கு ஒருவர் இணையத்தில் வைரலாக ஒரு காரியத்தை செய்துள்ளார்; அது கடைசியில் ஆபத்தில் சென்று முடிந்துள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்பூரில் மது போதையில் இருந்த மஹிந்திரா தார் வாகன ஓட்டி ஒருவர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, இரயில் தண்டவாளத்தை பார்த்ததும் உடனே அதில் வாகனத்தை ஓட்ட முயற்சித்துள்ளார். அதாவது, திரைப்படங்களில் காட்டுவதை போல தண்டவாளத்தின் ஒரு டிராக்கில் தார் வாகனத்தின் ஒருபக்க சக்கரங்களையும், மற்றொரு டிராக்கில் மறுப்பக்க சக்கரங்களையும் ஏற்றி ஓட்டி செல்ல முற்பட்டுள்ளார்.
இது திரைப்படங்களில்தான் சாத்தியம்; நிஜ வாழ்வில் சாத்தியமில்லை என்பதை அவரது மூளை ஏற்கவில்லை. காரணம், இந்த நபர் மது போதையில் இருந்துள்ளார். சாலைக்கு அருகே இருந்த தண்டவாளத்தை நோக்கி மஹிந்திரா தார் வாகனத்தை கொண்டு சென்றவர், அதே வேகத்தில் தண்டவாளத்தின் ஒரு டிராக்கில் வாகனத்தை ஏற்றி இறக்கிவிட்டார். ஆனால், மற்றொரு டிராக்கில் அவரால் ஏற்ற முடியவில்லை.

இதனால் வேறு வழியில்லாமல், தண்டவாளத்தில் இருந்து வாகனத்தை வெளியே கொண்டுவர முயற்சித்துள்ளார். அப்போதுதான், தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பது அவருக்கு புரிய ஆரம்பித்தது. ஏனெனில், தண்டவாள டிராக்குகள் குறிப்பிட்ட உயரம் கொண்டவைகளாக இருப்பதை பார்த்திருப்பீர்கள். வரும்போது எளிதாக அந்த உயரத்திற்கு வாகனத்தை ஏற்றி இறக்கியவருக்கு, அங்கிருந்து வெளியேறுவதற்காக ஏற்றி, இறக்க முடியவில்லை.
ஏனெனில், அந்த குறுகிய இடத்தில் போதுமான அளவிற்கு அவரால் வாகனத்தின் வேகத்தை கூட்ட முடியவில்லை. போதாக்குறைக்கு அளவு கடந்த மது வேறு அருந்தி இருந்தார். இந்த நபர் இவ்வாறு முயற்சி செய்துக் கொண்டிருந்த நேரத்தில், சரியாக அந்த வழியாக சரக்கு இரயில் ஒன்று வந்துள்ளது. ஹார்ன் சத்தத்துடன் இரயில் ஒன்று தன்னை நெருங்கி வருவதை பார்த்ததும், இவருக்கு அடித்த போதையே இறங்கிவிட்டது.

நல்லவேளையாக, சரக்கு இரயிலின் லோகோ பைலட் தண்டவாளத்தில் ஒரு வாகனம் நிற்பதை பார்த்ததும் வலுவாக பிரேக்கை கொடுத்து இரயிலை நிறுத்தி உள்ளார். அதன்பின் அதுகுறித்து அருகே உள்ள இரயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இரயில்வே போலீசாரும், உள்ளூர்வாசிகளும் வாகனத்தை தண்டவாளத்தில் இருந்து வெளியே கொண்டுவர உதவினர்.
அவர்கள் நினைத்ததை காட்டிலும் வாகனத்தை வெளியே கொண்டுவருவது கடினமானதாக இருந்துள்ளது. ஒருவழியாக, ரிவர்ஸில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கி, தண்டவாளத்தில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். அந்த சமயத்தில் எந்த அளவிற்கு ஆக்ஸலரேஷனை கொடுத்துள்ளனர் என்றால், தண்டவாளத்தில் இருந்து வெளியே வந்த பின்னரும் வாகனம் 20- 30 மீட்டர் தூரத்திற்கு நிற்காமல் ரிவர்ஸில் செல்வதை பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த செயலில் ஈடுப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மது போதையில் இருக்கும்போதுதான் இவ்வாறான யோசனை எல்லாம் பிறக்கும். அதனால்தான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தில், எதிரே சரக்கு இரயில் வந்ததினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதுவே அதிவேக விரைவு இரயில் வந்திருந்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் தார் வாகனத்தை தூக்கி எறிந்துவிட்டு சென்றிருக்கும். அல்லது, இரயிலும் தடம்புரள்வதற்கு வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









