வழியை அடைத்து நின்றதால் அதிரடி... மாருதி டிசையர் காரை அசால்டாக கையில் தூக்கி ஓரமாக வைத்த டிரைவர்...
வழியை அடைத்து நின்ற மாருதி டிசையர் காரை, மற்றொரு காரின் டிரைவர் அசால்டாக தூக்கி ஓரமாக வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த வாகன ஓட்டிகளிடம் ஏகப்பட்ட கெட்ட பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. இதில், தங்கள் வாகனங்களை கண்ட கண்ட இடங்களில் பார்க்கிங் செய்வதும் ஒன்று. தவறான இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதுதான், இந்தியாவில் டிராபிக் ஜாம் ஏற்பட மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

குறிப்பாக வாகன நெருக்கம் மிகுந்த குறுகலான நகர சாலைகளில், இதன் காரணமாக கடுமையான டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த பிரச்னையை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வதில்லை. தவறான இடங்களில் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்வதால், மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இந்த வகையில் மாருதி சுஸுகி டிசையர் கார் ஒன்று சமீபத்தில் சாலையோரமாக தவறான இடத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. போதாக்குறைக்கு அந்த சாலை குறுகலாக வேறு இருந்தது. அந்த சமயத்தில் மஹிந்திரா டியூவி300 கார் ஒன்று அவ்வழியாக வந்தது. மாருதி சுஸுகி டிசையர் கார் சாலையை அடைத்து கொண்டிருந்ததால், மஹிந்திரா டியூவி300 காரால் முன்னோக்கி செல்ல முடியவில்லை.

இதனால் மஹிந்திரா டியூவி300 காரின் உரிமையாளர் வெறுப்பானார். அந்த சமயத்தில் அவர்தான் தனது மஹிந்திரா டியூவி300 காரை ஓட்டி வந்திருந்தார். சிறிது நேரம் பார்த்த பின்பும், யாரும் வந்து மாருதி சுஸுகி டிசையர் காரை எடுக்காததால், அவர் உடனடியாக தனது மஹிந்திரா டியூவி300 காரில் இருந்து இறங்கினார். அதன்பின் அவர் செய்த காரியத்தை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சாலையை அடைத்து கொண்டு, தனக்கு வழி விடாமல் நின்று கொண்டிருந்த மாருதி சுஸுகி டிசையர் காரை அவர் அசால்டாக தூக்கி ஓரமாக நிறுத்தினார். அவர் தனது பலத்தை பயன்படுத்தி, மாருதி சுஸுகி டிசையர் காரை தூக்கி ஒரு சில அடிகள் நகர்த்தி வைத்தார். இதை கண்டதும் அங்கிருந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

மஹிந்திரா டியூவி300 கார் உரிமையாளரின் வலிமையை பார்த்த அங்கிருந்த ஒருவர் தனது கட்டை விரலை உயர்த்தி அவருக்கு தம்ப்ஸ் அப்பும் காட்டினார். இதன்பின் வழி கிடைத்ததன் காரணமாக மஹிந்திரா டியூவி300 கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அந்த இடத்தில் வழியை அடைத்து கொண்டு நின்று கொண்டிருந்தது பழைய தலைமுறை டிசையர் கார் ஆகும்.

இதை ஏன் இங்கே கூறுகிறோம் என்றால், புத்தம் புதிய மாருதி சுஸுகி டிசையர் கார் ஹார்ட்டெக் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கொஞ்சம் லைட்வெயிட்டாகதான் இருக்கும். ஆனால் பழைய தலைமுறை டிசையர் கார் ஹெவியானது. அதன் எடை குறைந்தபட்சம் 1,070 கிலோ இருக்க கூடும்.

இவ்வளவு எடை அதிகமான காரை தனி ஆளாகவும், அசால்ட்டாகவும் ஒருவர் தூக்கி சில அடிகள் நகர்த்தி வைத்திருப்பது என்பது உண்மையில் சாதாரணமான விஷயம் கிடையாது. ஆனால் மாருதி சுஸுகி டிசையர் காரை அசால்டாக தூக்கிய மஹிந்திரா டியூவி300 உரிமையாளர் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. ஆனால் அவர் தனது வலிமையின் ரகசியத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

பொது சாலைகளில் வாகனங்களை பார்க்கிங் செய்யும்போது அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மற்ற வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு உண்டாகும். இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற வாகனங்கள் சிக்கி கொண்டால், என்னாகும் என்பதை உணர்ந்து, உங்கள் வாகனங்களை கவனமாக பார்க்கிங் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








