லாரியே விழுந்தும் ஒன்னும் ஆகல! மாருதி காரில் சென்றவர்களை கடவுள் மாதிரி வந்து காப்பாற்றிய மஹிந்திரா கார்!
இந்தியாவை சேர்ந்த டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) ஆகிய 2 நிறுவனங்களும், பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) போன்ற அமைப்புகளின் மோதல் சோதனைகளில், டாடா மற்றும் மஹிந்திரா கார்கள் சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்று கொண்டுள்ளன.
அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுவதால், மிக கொடூரமான சாலை விபத்துக்களில் இருந்து கூட, டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார்கள், பயணிகளின் உயிரை காப்பாற்றுகின்றன. டாடா மற்றும் மஹிந்திரா நிறுவன கார்கள், சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய செய்திகளை கடந்த காலங்களில் நாம் பலமுறை படித்திருப்போம்.

இந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 500 (Mahindra XUV 500) கார், அதன் உரிமையாளரை மட்டுமல்லாது, பின்னால் வந்து கொண்டிருந்த மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் பயணிகளின் உயிரையும் காப்பாற்றியுள்ளது. இதனால் நெகிழ்ந்து போன மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் உரிமையாளர், மஹிந்திரா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் உரிமையாளரான ஆஷிஸ் சின்ஹா என்பவர், எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த மாதம் 14ம் தேதி (ஆகஸ்ட் 14), மிக கொடூரமான சாலை விபத்து ஒன்றை நான் சந்தித்தேன். எனது மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார், லாரி ஒன்றின் காரணமாக, மிக கடுமையாக சேதமடைந்தது (பெங்களூர்-சென்னை நெடுஞ்சாலையில்).

எனது கார் அவ்வளவுதான். அது போய் விட்டது. ஆனால் நான் உயிருடன் வெளியே வந்து விட்டேன். இதற்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின், மிக வலிமையான கட்டமைப்பே முக்கியமான காரணம். (ஆனால் உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் உரிமையாளர் உயிரிழந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது).
உதவிக்காக காத்திருந்த சமயத்தில், பின்வரும் விஷயங்களை எல்லாம் நான் யோசித்தேன். நான் 2 வினாடிகள் வேகமாக முன்னோக்கி சென்றிருந்தால், லாரியை தவிர்த்திருக்கலாம். ஆனால் எனக்கு பின்னால் மாருதி சுஸுகி எர்டிகா காரில் வந்து கொண்டிருந்த குடும்பத்தினர் (தம்பதி + குழந்தை) 100 சதவீதம் உயிரிழந்திருப்பார்கள்.
நல்ல வேளையாக எனது மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார், லாரியின் எடையை தாங்கி கொண்டதால், அவர்கள் உயிர் தப்பி விட்டனர். எனவே ஆனந்த் மஹிந்திராவிற்கும் (Anand Mahindra), மஹிந்திரா நிறுவனத்தின் இன்ஜினியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஆஷிஸ் சின்ஹா தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
அத்துடன் அந்த பதிவின் கமெண்ட் செக்ஸனில், லாரி ஓவர்லோடு உடன் இருந்ததாகவும், அதன் டிரைவர் மது அருந்தியிருந்ததாகவும், இது போன்ற ஒரு சமயத்தில் ஓவர்டேக் செய்ய போய் திடீரென பிரேக் பிடித்ததுதான் இந்த விபத்திற்கு காரணம் எனவும் ஆஸிஸ் சின்ஹா தெரிவித்துள்ளார். நல்ல வேளையாக இந்த சாலை விபத்தில், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா கார்களில் பயணம் செய்தவர்களுக்கு எதுவும் ஆகவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சாலைகளில் எப்போது எது நடக்கும்? என்றே கணிக்க முடியாது. எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக பயணம் செய்தாலும் கூட, ஒரு சில சமயங்களில், மற்றவர்கள் செய்யும் தவறுகளால், தவறே செய்யாதவர்கள் இது போன்ற விபத்துக்களில் சிக்கி கொள்ள வேண்டியதாகி விடுகிறது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என்பது நல்ல விஷயம். புதிய கார்களை வாங்கும்போது, பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதை இந்த சாலை விபத்து சம்பவம் மீண்டும் ஒரு முறை நம் அனைவருக்கும் மிகவும் தெளிவாக உணர்த்தி விட்டது.


Click it and Unblock the Notifications








