காஷ்மீரில் மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்: செய்வதறியாமல் உறைந்துபோன போலீஸார்...!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த சம்பவத்தால், அம்மாநில போலீஸார் செய்வதறியமால் திகைத்துப்போய் உள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் கத்துவான பகுதியில், ஒரே பதிவெண்ணைக் கொண்ட இரு கார்களை அம்மாநில போலீஸார் அண்மையில் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தின் அதிர்வலை இன்னும் ஓயாத நிலையில், மீண்டும் அதேபோன்று, ஒரே பதிவெண்ணைக் கொண்ட மஹிந்திரா எஸ்யூவி500 மாடலை ஜம்மு காஷ்மீர் மாநில போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள, மஹிந்திரா நிறுவனத்தின் இந்த இரு எக்ஸ்யூவி 500 கார்களும், முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட ஹூண்டாய் வெர்னாவைப் போன்றே, ஒரே பதிவெண், ஒரே நிறம், ஒரே மாடலைக் கொண்டதாக இருக்கின்றன. இதுகுறித்த செய்தியை ஜம்மு லிங்க்ஸ் எனும் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், ஆர்டிஓ அலுவலகம் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இங்கு பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு பிரத்யேக பதிவெண் வழங்கப்படுகிறது. அவ்வாறு, வழங்கப்பட்டும் பதிவெண் தனித்துவம் கொண்டதாக, வாகனத்திற்கு வாகனம் மாறுப்பட்டு காணப்படும்.

ஆகையால், இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் முழுவதிலும் ஒரே பதிவெண் கொண்ட வாகனங்களைக் காண்பது என்பது இயலாத ஒன்று.
வாகனத்தின் உரிமையாளர் ஒருவர், தனது பழைய வாகனத்தின் பதிவெண்ணை, புதிய வாகனத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், ஆர்டிஓ அலுவலகம் மூலம் பழைய வாகனத்திற்கு ஓர் புதிய எண்ணை வாங்கிய பின்னரே, புதிய வாகனத்திற்கு பழைய வாகனத்தின் பதிவெண்ணை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனாலும், ஒரே எண்ணை இரு வாகனங்களுக்கு பயன்படுத்த ஆர்டிஓ அலுவலகம் அனுமதிக்காது.

இவ்வாறு, வாகன பதிவெண் விவகாரத்தில் கடும் கெடுபிடி காட்டி வரும்நிலையில், ஒரே பதிவெண்ணைக் கொண்ட (JK01 T 7347), ஒரே மாதிரியான கார்கள், ஒரே பகுதியில் சுற்றித் திரிந்து வந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இரட்டையர்களைப் போன்று காட்சியளிக்கும் இந்த கார்களுக்கு, ஹெட்லேம்ப் மட்டுமே வித்தியாசமாக உள்ளன. அவ்வாறு, ஒரு காரில் மட்டும் ஹெட்லேம்ப் மாற்றம் செய்யப்ட்டுள்ளது. மற்றொன்றில் ஒரிஜினல் ஹெட்லேம்ப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸார் பறிமுதல் செய்திருக்கும் இரண்டு மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார்களும், சாய்னிக் காலனி எனும் பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தற்போது தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்த போலீஸார் தரப்பில் கூறியதாவது, "இரண்டில் ஓர் காருக்கு போலியான சான்று மற்றும் நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், உண்மையான பதிவெண்ணைக் கொண்டு இயங்கும் கார், எது என்ற சந்தேகம், இரு கார்களின் உரிமையாளர்களுக்கே உள்ளது. ஆகையால், இவர்கள் கார்களை வாங்கிய நபரிடம் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றோம். எனவே, இதுகுறித்த விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில், அண்மையில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட் திட்டம், கடந்த மே மாதம் 15ம் தேதியே அமலுக்கு வந்துவிட்டது. இது புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு மட்டும் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பழைய வாகனங்களுக்கும் இந்த புதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு, இந்த புதிய விதிமுறையை, பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கும் கொண்டுவந்தால், இதுபோன்ற எத்தனை போலி பதிவெண்களைக் கொண்டு இயங்கும் வாகனங்கள் சிக்குமே என்ற அச்சம் கலந்த சூழ்நிலை அம்மாநிலத்தில் தற்போது நிலவி வருகின்றது.

இதற்கு சான்றாக அண்மையில் சிக்கிய ஹூண்டாய் வெர்னா செடான் ரக காரும், தற்போது சிக்கியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரும் சான்றாக இருக்கின்றன. போலி நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்கும் சம்பவம் போலீஸுக்கு புதிதல்ல. இருப்பினும், ஒரே பதிவெண்ணில், ஒரே மாடல், ஒரே கலர் உள்ளிட்டவற்றை கொண்ட இரு வாகனங்கள் தொடர்ச்சியாக சிக்குவது இதுவே முதல் முறையாகும்.

ஆகையால், இந்த சம்பவம் காஷ்மீர் மாநில போலீஸாருக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் கடும் கெடுபிடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இத்துடன், சாலையில் செல்லும் வாகனங்களை, கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடுவதைப்போன்று போலிஸார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும், இதுபோன்ற கார்களைப் பார்க்கும் மக்கள் புகார் தெரிவக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாகனங்களில் மேற்கொள்ளப்படும், இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க வேண்டுமானால், வாகங்களை வாங்கும்போது அதிக கவனத்துடன், அல்லது, வாகனங்கள் குறித்து நன்கு அறிந்த மெக்கானிக் அல்லது நண்பரிடம் கலந்தாலோசித்து வாங்குவது அவசியம்.

மேலும், செகண்ட் ஹேண்டாக வாகனங்களை வாங்கும்போது, கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அவ்வாறு, வாகனத்தை வாங்கும்போது, பதிவெண் சான்றிதழ், சேஸிஸ் எண், விஐஎன் உள்ளிட்டவை சரியாக இருக்கின்றதா என தீவிரமாக பரிசோதித்து வாங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications