ஹை ஸ்பீடில் போகும் கார்... டிரைவர் சீட்டில் ஆள் இல்லை!! மஹிந்திரா காரில் எல்லாமே சாத்தியம்தான்!
மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700) காரின் அடாஸ் (ADAS) தொகுப்பை டிரைவர் ஒருவர் தவறாக பயன்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோவையும், இவ்வாறான செயல்கள் எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை பற்றியும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சமீப காலத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட தரமான கார்களுள் மஹிந்திரா எக்ஸ்யூவி700 மாடலை ஒன்றாக சொல்லலாம். 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி700, வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானதாக இருப்பதற்கு முக்கிய காரணம், இந்த காரில் வழங்கப்படும் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் ஆகும்.

மார்க்கெட்டில், எக்ஸ்யூவி700 எந்த அளவிற்கு பிரபலமானதாக உள்ளது என்றால், 2021, 22ஆம் ஆண்டுகளில் இந்த காரை புக் செய்த வாடிக்கையாளர்கள் டெலிவிரி எடுக்க வருடக்கணக்கில் காத்திருந்தனர். எக்ஸ்யூவி700 காரின் முக்கிய தொழிற்நுட்ப அம்சங்களுள் ஒன்று, அடாஸ் ஆகும். இந்த மஹிந்திரா எஸ்யூவி காரில் லெவல்-2 அடாஸ் வழங்கப்படுகிறது.
அடாஸ் என்பதன் முழு விரிவாக்கம், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆகும். டிரைவர்களின் டிரைவிங்கை சவுகரியமாக்கும் விதமாக அடாஸ் இன்றைய கால மாடர்ன் கார்களில் வழங்கப்படுகிறது. ஆனால், அடாஸை கார்களில் டிரைவர்களும், பயணிகளும் தவறாக பயன்படுத்துவதாக கடந்த சில வருடங்களாகவே அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன.
அந்த வகையில் தற்போது, டிரைவர் ஒருவர் நெடுஞ்சாலையில் தனது எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் அடாஸை தவறாக பயன்படுத்தி உள்ளார். அடாஸை பயன்படுத்தி எக்ஸ்யூவி700 காரை நெடுஞ்சாலைகளில் தானாக இயங்க வைக்க முடியும். ஆனால், இந்த வசதி ஆனது ஆபத்தான நேரங்களில் கார் தானாக இயங்கி பயணிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக வழங்கப்படுகிறது.
ஆனால், இந்த எக்ஸ்யூவி700 கார் டிரைவர் அடாஸை ஆக்டிவேட் செய்துவிட்டு, காரின் 3வது வரிசை இருக்கையில் சவுகரியமாக படுத்துக் கொண்டு மொபைல் போனில் பேசியப்படி பயணம் செய்துள்ளார். எக்ஸ்யூவி 700 காரில் 2வது வரிசை இருக்கைகளை மடக்கினால், அது 3வது வரிசை இருக்கைகளுடன் சேர்ந்து ஓர் படுக்கை போன்ற அமைப்பை உருவாக்கும்.

இதுதொடர்பாக ஆட்டோ ஜோர்னல் இந்தியா என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், டிரைவர் காரின் 3வது இருக்கையில் அமர்ந்திருக்கும் சமயத்தில் டிரைவர் இருக்கையில் யாரும் இல்லாததை காண முடிகிறது. இந்த சம்பவம் இந்தியாவில் எந்த பகுதியில் நடைபெற்றது என்பது தெரியவில்லை. நெடுஞ்சாலை ஒன்றில் கார் சென்றுக் கொண்டிருந்த போது இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
இருப்பினும், அடாஸின் உதவியில் கார் எவ்வளவு வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது என்பதை வீடியோவை வைத்து அறிய முடியவில்லை. லேன் கீப் அசிஸ்ட் என்ற சாலையில் பாதை மாறாமல் காரை இயங்க வைக்கும் வசதியை கொண்டு இந்த டிரைவர் இவ்வாறு தன்னிச்சையாக இயங்க வைத்துள்ளார். அத்துடன், காரின் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியும் சம்பவத்தின்போது டிரைவரால் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடாஸ் போன்ற அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்களை கண்டுப்பிடிப்பது ஆபத்து நேரும் சமயங்களில் காரையும், பயணிகளையும் காப்பாற்றவே ஆகும். ஆனால், அதனை இவ்வாறு தவறாக பயன்படுத்துவது தவறான முன் உதாரணம் என்பது மட்டுமின்றி, இத்தகைய செயல்கள் ஆபத்தில் சென்று முடியவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









