வேண்டுமென்றே விபத்தை நேரில் சந்திக்க துணிந்த எக்ஸ்யூவி700 கார் ஓட்டுனர்!! எதுக்குனு தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க!
இந்திய சந்தையில் தற்சமயம் உள்ள பிரபலமான 7-இருக்கை எஸ்யூவி கார்களுள் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஒன்று என்றால் அது மிகையில்லை. ஏனெனில் மஹிந்திரா நிறுவனம் தனது முழு திறமையையும் பயன்படுத்தி, தற்கால மாடர்ன் ட்ரெண்ட்டிற்கு ஏற்ப உருவாக்கிய எஸ்யூவி கார் தான் எக்ஸ்யூவி700 ஆகும்.

குறிப்பாக, எக்ஸ்யூவி700-இன் தொழிற்நுட்ப அம்சங்களில் மொத்த மஹிந்திரா & மஹிந்திரா குழுமமும் கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளது. இதன் விளைவாக, பிரிவிலேயே முதல் மாடலாக எக்ஸ்யூவி700-க்கு அதிநவீன ஓட்டுனர் உதவி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டுனரின் எளிமையான டிரைவிங்கிற்காக வழங்கப்பட்டுள்ள இந்த தொகுப்பில் தானியங்கி அவசரகால பிரேக்கிங் அமைப்பும் ஒன்றாகும். இது, வாகனம் மோதலுக்கு உள்ளாகும் நேரங்களில் தன்னிச்சையாக பிரேக்கை கொடுத்து விபத்தை தவிர்க்க பயன்படுகிறது. அதாவது, கவனக்குறைவாலோ அல்லது ஓட்டுனர் துரிதமாக செயல்பட முடியாமல் போனாலோ இந்த தொழிற்நுட்பம் உடனடியாக பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

காற்றுப்பைகளை போலவே, இந்த தானியங்கி அவசரகால பிரேக்கிங் வசதியையும் வாழ்நாளில் ஒருமுறை கூட பயன்படுத்த வேண்டிய சூழல் வரக்கூடாது என்றே எந்தவொரு வாகன ஓட்டியும் விரும்புவர். அதிலிலும், கிட்டத்தட்ட கதை முடிந்துவிட்டது என ஒரு கணம் தோன்றிய பிறகு, இந்த தொழிற்நுட்பம் செயல்படும்போது, ஒரு நொடியில் போன உயிர் மீண்டும் கிடைத்தது போன்று இருக்கும்.

இத்தகைய சூழ்நிலையை எவரொருவரும் சந்திக்க கூடாது என்றே விரும்புவர். மஹிந்திரா நிறுவனம் இந்த தொழிற்நுட்பத்தை பல்வேறு டம்மிகளை கொண்டு மூடிய பரப்பிற்குள் சோதனை செய்து பார்க்கிறது. ஆனால் இங்கு ஒருவர் வேண்டுமென்றே விபத்தை நேரில் எதிர்க்கொண்டு தனது எக்ஸ்யூவி700 காரின் தானியங்கி அவசரகால பிரேக்கிங் வசதியினை சோதித்து பார்த்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்வப்னில் பவர் என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த ஸ்வப்னில் பவர் தான் இந்த வீடியோவினை தனது காரின் உட்புற கேமிராவின் மூலமாக காட்சிப்படுத்தி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

இந்த வீடியோவில், சம்மந்தப்பட்ட நேரத்தில் இந்த எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் நெடுஞ்சாலை ஒன்றில் இயக்கப்பட்டு கொண்டிருந்ததை அறிய முடிகிறது. நெடுஞ்சாலை என்றாலே கனரக வாகனங்கள் அதி வேகத்தில் சென்று கொண்டிருக்கும் என்பது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். இந்த குறிப்பிட்ட நெடுஞ்சாலையில் வாகனங்கள் அவ்வளவாக இல்லை, காரின் அதே பாதையில் தூரத்தில் ஒரு லாரி மட்டுமே சென்று கொண்டிருந்துள்ளது.

அந்த லாரியினை வேகமாக சென்று விரட்டிப்பிடித்த இந்த எக்ஸ்யூவி700 கார் ஓட்டுனர், பிறகு அந்த லாரியின் பின்பக்கத்தில் அதே வேகத்தில் சென்று மோத முயற்சி செய்துள்ளார். வீடியோவில், காரின் உட்புற டேஸ்போர்டையும், அதில் காரின் வேகத்தையும் காண முடிகிறது. வீடியோ துவங்கும்போது மணிக்கு 89கிமீ வேகத்தில் கார் பயணித்து கொண்டிருக்கிறது. கார் இயங்கும் பாதைக்கு வலதுப்பக்க பாதை காலியாக இருப்பினும், கார் டிரைவர் எந்த பக்கமும் திரும்பவில்லை.

எக்ஸ்யூவி700 கார் லாரியை நெருங்க, நெருங்க வாகனம் முன்பக்கமாக மோதலுக்கு உள்ளாக உள்ளதை பற்றிய எச்சரிக்கைகள் ரேடார் மூலமாக ஓட்டுனருக்கு தெரிய வருவதை வீடியோவின் வாயிலாக நாமும் அறிய முடிகிறது. கடைசி வரையில் கார் ஓட்டுனர் பிரேக்கை கொடுக்கவில்லை. லாரியை கார் மிகவும் நெருக்கமாக நெருங்கிவிட்டதை உணர்ந்த தானியங்கி அவசரகால பிரேக்கிங் தொழிற்நுட்பம் தன்னிச்சையாக பிரேக்கை கொடுக்கிறது

இதன் மூலமாக கார் சற்று குலுங்குவதை வீடியோவில் தெளிவாக காண முடிகிறது. அத்துடன், தானியங்கி அவசரகால பிரேக் அமைப்பின் சத்தத்தை கூட கேட்க முடிகிறது. இந்த பிரேக்கிங் தொழிற்நுட்பமானது காரை முற்றிலுமாக நிறுத்திவிடுவதில்லை. விபத்தை தவிர்க்கும் வகையில் காரின் வேகத்தை சற்று குறைத்துவிடுகிறது. இந்த தொழிற்நுட்பம் இந்த குறிப்பிட்ட எக்ஸ்யூவி700 காரில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு வேகம் 59kmph என குறைந்துள்ளதை உட்புற இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் பார்க்க முடிகிறது.

ஆனால் கார் இதனை காட்டிலும் லாரியை நெருங்கி இருந்தால், கார் முற்றிலுமாக நின்றுபோய் இருக்கலாம். இந்த வீடியோ எக்ஸ்யூவி700 காரில் எத்தகைய அருமையான அம்சத்தை மஹிந்திரா வழங்கியுள்ளது என்பதை நமக்கு வெளிக்காட்டுகிறது. ஆனால் உண்மையில் இதனை வேண்டுமென்றே, பொது சாலையில் சோதித்து பார்த்தது தவறாகும். ஏனெனில் தொழிற்நுட்பங்கள் எந்த நேரத்திலும் பழுதாகி போகலாம்.


Click it and Unblock the Notifications








