பெட்ரோல் பங்க் ஊழியர் செய்த காரியத்தால் நடுவழியில் தவித்த குடும்பம்! கடவுளாய் வந்து காப்பாற்றிய மஹிந்திரா!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கார்கள் பெட்ரோல் (Petrol) அல்லது டீசல் (Diesel) மூலம் இயங்க கூடியவையாக உள்ளன. இந்த சூழலில், பெட்ரோல் கார்களில் டீசலையோ அல்லது டீசல் கார்களில் பெட்ரோலையோ தவறுதலாக நிரப்பி விட்டால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
பெட்ரோல் பங்க்குகளில் வேலை செய்யும் ஊழியர்களின் அலட்சியம் காரணமாக, கார் உரிமையாளர்கள் சில சமயங்களில் இந்த பிரச்னைகளில் சிக்கி கொள்கின்றனர். இதுபோன்றதொரு சம்பவம் ஒடிசா மாநிலத்தில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றுள்ளது. அங்கு ஒரு பெட்ரோல் பங்க்கில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காருக்கு, பெட்ரோலுக்கு பதிலாக டீசலை நிரப்பியுள்ளனர். நடந்த சம்பவங்களை எல்லாம் அந்த காரின் உரிமையாளர், சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார்.

நடந்தது இதுதான்!
MIshra RAnjan R N என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், இந்த சம்பவம் பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜனவரி 17ம் தேதி நடைபெற்றுள்ளது. அப்போது சம்பந்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் உரிமையாளரும், அவரது குடும்பத்தினரும் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் இருந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். காரில் 7 பெரியவர்கள் மற்றும் 1 குழந்தை என மொத்தம் 8 பேர் இருந்தனர். இரவு 9.35 மணியளவில், அந்த கார் பாத்ரக் பகுதியை அடைந்தது.
அப்போது எரிபொருள் நிரப்பலாம் என அங்கிருந்த ஒரு பெட்ரோல் பங்க்கிற்குள் உரிமையாளர் காரை விட்டார். அந்த சமயத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர், பெட்ரோலுக்கு பதில் தவறுதலாக காரில் டீசலை நிரப்பி விட்டார். நாங்கள் ஏற்கனவே கூறியபடி காரில் தவறான எரிபொருள் நிரப்பப்பட்டால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். ஒருவேளை தவறான எரிபொருள் நிரப்பியது உங்களுக்கு தெரியவந்தால், காரை ஆஃப் செய்து விட வேண்டும். மேற்கொண்டு ஓட்ட கூடாது.

அதன் பிறகு, உங்கள் காரை தயாரித்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவிக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். தவறான எரிபொருள் உள்ளே செல்லாமல் இருக்கும் வகையில், இன்ஜினில் இருந்து மெயின் எரிபொருள் லைனை அவர்கள் துண்டிப்பார்கள். எனவே அவசரப்பட்டு காரை ஓட்டினால், தவறான எரிபொருள் உள்ளே சென்று நீங்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டியது வரலாம். ஒடிசா மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவத்தில், காரின் உரிமையாளர் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து வைத்துள்ளார்.
கை கொடுத்த மஹிந்திரா!
ஏனெனில் தவறான எரிபொருள் நிரப்பப்பட்டது தெரிந்தவுடன், அவர் காரை ஓட்டவில்லை. அத்துடன் சர்வீஸ் சென்டரில் அவர் உதவி கோரினார். இதன்பிறகு மஹிந்திராவின் ரோடுசைடு அஸிஸ்டன்ஸ் (Mahindra Roadside Assistance) குழு அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் உதவி செய்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப்பெற்ற வெறும் 90 நிமிடங்களில், மஹிந்திரா ரோடுசைடு அஸிஸ்டன்ஸ் குழு அவர்களுக்கு உதவி செய்து விட்டது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து அவர்கள் சென்று சேர வேண்டிய இடம் சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.
அவர்கள் பாதுகாப்பாக சென்று சேருவதற்கு, மஹிந்திரா ரோடுசைடு அஸிஸ்டன்ஸ் குழு, வேறு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. அத்துடன் தவறான எரிபொருள் நிரப்பப்பட்டதால், மேற்கொண்டு பிரச்னைகள் எதுவும் நடந்து விடாமல் இருப்பதற்கான முயற்சிகளையும் அவர்கள் உடனடியாக எடுத்துள்ளனர். உடனடியாக உதவி செய்த காரணத்திற்காக மஹிந்திரா நிறுவனத்திற்கு அந்த குடும்பம் நன்றி தெரிவித்துள்ளது. இதுபோன்ற பிரச்னைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், உங்கள் காருக்கு எரிபொருள் நிரப்பும்போது கவனமாக இருங்கள்.
மத்த நிறுவனங்களிலும் இந்த சேவை இருக்கு!
மஹிந்திரா மட்டுமல்லாது, மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா (Tata) மற்றும் ஹூண்டாய் (Hyundai) போன்ற நிறுவனங்களும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ரோடுசைடு அஸிஸ்டன்ஸ் சேவையை வழங்கி வருகின்றன. காரில் திடீரென ஏற்பட்ட ஏதாவது பிரச்னை காரணமாக நடுவழியில் நீங்கள் தவிக்க நேரிட்டால், இந்த வசதியை தயங்காமல் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சேவை அனைத்து நேரங்களிலும் வழங்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








