புது காரை டெலிவரி கொடுக்கும் நாளில் டீலர் செய்த காரியம்! ஆசையா வாங்க போனவரு தலையில குண்டை போட்டுட்டாங்க!
பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) ஆகிய 2 எரிபொருட்களும் வெவ்வேறு பண்புகளை கொண்டவை. எனவே பெட்ரோல் இன்ஜின் கார்களில் பெட்ரோலையும், டீசல் இன்ஜின் கார்களில் டீசலையும்தான் நிரப்ப வேண்டும். தவறுதலாக மாற்றி நிரப்பி விட்டால், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கடந்த காலங்களில் பெட்ரோல் பங்க்குகளில் பல முறை எரிபொருள் மாற்றி நிரப்பப்பட்டுள்ளது. அதாவது பெட்ரோல் கார்களில் டீசலையும், டீசல் கார்களில் பெட்ரோலையும் நிரப்பியுள்ளனர். டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் கூட இது தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு வழங்கியிருந்தோம். ஆனால் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டேதான் உள்ளன.

இதன் உச்சகட்டமாக கார் டீலர்ஷிப்பிலேயே தற்போது தவறு செய்துள்ளனர். வாடிக்கையாளர் ஒருவர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரை சமீபத்தில் முன்பதிவு செய்திருந்தார். இந்த காருக்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. எனவே காத்திருப்பு காலம் (Waiting Period) மிகவும் அதிகமாக இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் அனைவரும் மீனுக்காக காத்திருக்கும் கொக்கை போல, பல மாதங்கள் பொறுமையாக காத்திருந்து, மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை டெலிவரி (Delivery) பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இங்கே நாம் பேசி கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கும் நீண்ட காத்திருப்பிற்கு பின்னர், டெலிவரி நாள் வந்தது.
இந்த வாடிக்கையாளர் முன்பதிவு செய்திருந்தது பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் ஆகும். ஆனால் டீலர்ஷிப் ஊழியர்கள் அந்த காரில் தவறுதலாக டீசலை நிரப்பி விட்டனர். ஆனால் இந்த தவறு தெரிய வந்ததும், அவர்கள் சுத்தம் செய்து விட்டனர். இதன் பின் வாடிக்கையாளரும் காரை டெலிவரி எடுத்து கொண்டார்.
மறுநாள் இந்த வாடிக்கையாளரும், அவரது மனைவியும் காரை எடுத்து கொண்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது எரிபொருள் கடுமையாக கசிந்துள்ளது. இது மோசமான செயல் என கூறியுள்ள அந்த வாடிக்கையாளர், தனக்கு காரை மாற்றி தர வேண்டும் என சமூக வலை தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்த பிரச்னையில் தலையிட்டுள்ளது.
ஆனால் அவருக்கு கார் மாற்றி தரப்படுமா? அல்லது பிரச்னையை மட்டும் சரி செய்து தருவார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப விலை 14.01 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 26.18 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய காரை டெலிவரி எடுப்பது என்பது, மிகவும் உற்சாகமான ஒரு அனுபவம். ஒரு புதிய உறுப்பினர் நம் குடும்பத்தில் இணைவதை போன்ற உற்சாகத்தை அது ஏற்படுத்தும். ஆனால் ஒரு சிலருக்கு புதிய காரை டெலிவரி எடுத்த முதல் நாளில் இருந்தே இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது துரதிருஷ்டவசமான ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








