ஆபத்து ஏற்படாம இருக்கதான் டிராஃபிக் சைன் போர்டே.. அதுக்கே இந்தியால இவ்ளோ ஆபத்திருக்கா! கொஞ்சம் பாத்து போங்க!
வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. அதிகரித்து வரும் வாகனங்கள் நாட்டில் உள்ள சாலைகளின் எண்ணிக்கையை பலமடங்கு அதிகரிக்கச் செய்திருக்கின்றது. ஆனால், அந்த சாலைகளின் தரம் சற்றே மோசமானதாக இருக்கின்றது. குறிப்பாக, முக்கிய நகரங்கள் சிலவற்றில் உள்ள சாலைகள் பயணிக்க சற்றும் உகந்ததல்லாத நிலையில் இருக்கின்றன.
சாலைகளின் தரம் மட்டுமில்லைங்க, வாகன ஓட்டிகளுக்கு தகவல் அளிக்கும் விதமாக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் சமிக்ஞை போர்டுகளிலும்(Road Sign Board) பிரச்னை இருப்பதை நம்மால் காண முடிகின்றது. "இதெல்லாம் சைன் போர்டை பார்த்து வண்டிய ஓட்டுறவங்களுக்குதான், எங்களுக்கு எல்லாம் அது கிடையாதுனு சொல்பவரா நீங்க"..

அப்படி நினைக்காதீங்க டிராஃபிக் சைன் போர்டுகள் மிகவும் முக்கியமானவை. இந்த விஷயத்தில் இந்தியாவில் நிலவும் மூன்று மிக முக்கியமான பிரச்னைகளை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாக இருக்கின்றது. அந்த பிரச்னைகள் என்ன என்பதையே இந்த பதிவில் பார்க்க தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
காலாவதி ஆன சைன் போர்டுகள்: என்னது சைன் போர்டு காலாவதி ஆகுமா என ஆச்சரியமா கேக்காதீங்க.. வெயில், மழை மற்றும் குளிர் என பலவகையான காலநிலையை இந்த சைன் போர்டுகள் பார்க்கும் என்பதால் அவற்றின் தெரிவு நிலையில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால், வாகன ஓட்டிக்கு கிடைக்க வேண்டிய தகவல் சரியாக கிடைக்காமல் போய்விடுகின்றது. இதன் விளைவு வழிதவறுதல் அல்லது விபத்தைச் சந்தித்தல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வாகன ஓட்டிகள் ஆளாகின்றனர்.

டிராஃபிக் சைன்களுக்கு காற்றாலும், மரங்களாலும் சில நேரங்களில் ஆபத்து ஏற்படுவதுண்டு. கடினமான காற்றின் காரணமாக டிராஃபிக் சைன்கள் பெயர்ந்துகொண்டு போயிருப்பதை நாமே பார்த்திருப்போம். இதுமட்டுமா, மரக் கிளைகளால் அவை முறிந்துபோகவும் செய்கின்றன. சில நேரங்களில் மரக் கிளைகள், செடிகள் அவற்றை மறைத்திருப்பதையும் நாம் காணலாம். இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகின்றது.
டிராஃபிக் சைன்களே இருக்காது: இயற்கையால் டிராஃபிக் சைன்கள் பாதிப்புக்கு ஆளாகின்றது என்றால், மறுபக்கம் சாலை போக்குவரத்துத்துறை அந்த சைன் போர்டுகளை வைக்காமல் அலட்சியம் காட்டுகின்றன. ஆமாங்க, இந்தியாவின் அனைத்து சாலைகளிலும் சைன் போர்டுகள் நிலை நிறுத்தப்படுவதில்லை. குறிப்பிட்ட சாலைகளில் அவை வைக்கப்படுவதே இல்லை.

குறிப்பாக, பள்ளிக்கூட சைன் போர்டு, ஸ்பீடு பிரேக்கர் சைன், வளைவுகள் குறித்து தெரிவிக்கும் சைன் ஆகியவற்றை போக்குவரத்துத் துறை குறிப்பிட்ட பகுதிகளில் நிலை நிறுத்தாமல் இருப்பதை நாமே பார்த்திருப்போம். குறிப்பாக, அடிநிலை கிராமப்புறங்களிலேயே சைன் போர்டு இல்லாத நிலையை நம்மால் பார்க்க முடிகின்றது. இதேபோல், புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளிலும் டிராஃபிக் சைன்கள் இல்லாமல் இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.
டிராஃபிக் சைன் கட்டாயம் தேவை: நம்மில் பலர் இந்த சைன் போர்டுகளை பார்த்து பயணிப்பது இல்லை என்றாலும், இப்போது விற்பனையில் உள்ள ஒரு சில கார்களுக்கு இந்த அம்சம் கட்டாயம் தேவைப்படுகின்றது. நவீன கார்களில் அடாஸ் எனப்படும் செயற்கை தொழில்நுட்ப அம்சம் வழங்கப்படுகின்றது. இந்த அம்சம் சாலையில் உள்ள சைன் போர்டுகளை சென்சார் செய்து அதற்கேற்ப வாகனங்களைக் கட்டுப்படுத்தி விபத்தில் இருந்து பாதுகாக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிராஃபிக் சைன் போர்டுகள் மிகவும் முக்கியமானவை. விபத்தில்லாமல் வாகனங்கள் பயணிக்க அவை கட்டாயம் தேவைப்படுகின்றது. ஷார்ப்பான வளைவுகள், ஸ்பீடு பிரேக்குகள், விபத்து பகுதி உள்ளிட்டவற்றை வெளிச்சம் போட்டு காட்ட இந்த சைன் போர்டுகள் உதவுகின்றன. ஆனால், இந்த விஷயத்தில் சில நேரங்களில் அரசு கவனக் குறைவாக செயல்படுவது வேதனை அளிக்கும் வகையில் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications
