விஐபி, நீதிபதிகளின் வாகனங்களுக்கு டோல்கேட்களில் சிறப்பு பாதை.. காரணம் கேட்டா கோவப்படுவீங்க..
நாடு முழுவதும் உள்ள டோல்கேட்களில், விஐபிக்கள், நீதிபதிகளின் வாகனங்கள் கடப்பதற்கு என தனியாக சிறப்பு பாதை ஏற்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள டோல்கேட்களில், விஐபிக்கள், நீதிபதிகளின் வாகனங்கள் கடப்பதற்கு என தனியாக சிறப்பு பாதை ஏற்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டோல்கேட்களில் அதிக கட்டணம், நெரிசல் என சாதாரண பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலைகளை தேர்வு செய்கின்றனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ததன் மூலம் மிச்சம் பிடிக்கப்பட்ட நேரத்தில் பெரும்பகுதியை டோல்கேட்களிலேயே, வாகன ஓட்டிகள் இழந்து விடுகின்றனர்.

ஏனெனில், டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி செல்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவும் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்கள் என்றால், சொல்லவே வேண்டாம்.

கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட வழக்கமான சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, டோல்கேட்டை கடப்பதற்குள்ளாகவே போதும் போதுமென்றாகி விடும். ஏனெனில் டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

பொதுமக்கள் படும் இந்த துயரம், விஐபிக்கள், நீதிபதிகளுக்கு ஏற்படக்கூடாது என சென்னை ஐகோர்ட் கருதுகிறது. ஆம், நாடு முழுவதும் உள்ள டோல்கேட்களில், விஐபிக்கள், சிட்டிங் நீதிபதிகளுக்கு என தனியாக பாதை (lane) ஏற்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வுதான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. விஐபிக்கள் மற்றும் சிட்டிங் நீதிபதிகளின் வாகனங்கள், டோல்கேட்களில் நீண்ட வரிசையில் நிற்பதை காண்பது வருத்தமாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சில சமயங்களில், 10-15 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாம். எனவே விஐபிக்களும், சிட்டிங் நீதிபதிகளும், விரைவாக செல்வதற்கு ஏதுவாகதான், நாடு முழுவதும் உள்ள டோல்கேட்களில், அவர்களின் வாகனங்கள் கடப்பதற்கு என தனியாக பாதை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறினால், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது (National Highways Authority of India-NHAI), நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் எனவும், சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது.

விஐபிக்கள் மற்றும் சிட்டிங் நீதிபதிகளுக்கு என தனியாக பாதை ஏற்படுத்தி தரும்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து டோல்கேட்களுக்கும், சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பாதைகளில், வேறு எந்த வாகனத்தையும் அனுமதிக்க கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே விஐபிக்கள், சிட்டிங் நீதிபதிகளுக்கு என சிறப்பு பாதைகள் ஏற்படுத்துவதற்காக, நாடு முழுவதும் உள்ள டோல்கேட்களை சற்றே மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக டோல்கேட்களில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே நாடு முழுவதும் உள்ள டோல்கேட்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை முன் நிறுத்தி, அவ்வப்போது வலுவான போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய அரசு எதற்கும் செவி சாய்க்கவில்லை. இது போதாதென்று, டோல்கேட்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டிய சிரமமும் ஏற்பட்டு வருகிறது.

இந்த சூழலில், நாடு முழுவதும் உள்ள டோல்கேட்களில், விஐபிக்கள் மற்றும் சிட்டிங் நீதிபதிகளுக்கு என மட்டும் தனியாக சிறப்பு பாதை ஏற்படுத்தும்படி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள சம்பவம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications