சென்னையில் தயாரான சொகுசு காரை வாங்கிய மலையாள நடிகர்.. பிரம்மயுகம் படத்துல வந்தவரா இவரு? அடையாளமே தெரியல!
மலையாள நடிகரும், மலையாள நடிகர் ஹரிஸ்ரீ அசோகனின் மகனுமான அர்ஜுன் அசோகன், இந்தியாவில் மிக மிக விலை உயர்ந்த காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் கொள்முதலின் வாயிலாக தான் ஒரு மிகப் பெரிய சொகுசு கார் விரும்பி என்கிற முகத்தை அவர் இந்த உலகத்திற்கு காண்பித்திருக்கின்றார். அப்படி என்ன கார் மாடலை அவர் வாங்கியிருக்கின்றார் என நீங்கள் கேட்கலாம். அர்ஜுன் அசோகன், பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் அதிக ஆடம்பர அம்சங்கள் தாங்கிய எக்ஸ்5 எம் ஸ்போர்ட் (X5 M Sport) கார் மாடலையே வாங்கி இருக்கின்றார்.
நார்டோ கிரே (Nardo Grey) நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் எக்ஸ்5 எம் ஸ்போர்ட் சொகுசு காரையே அவர் வாங்கி உள்ளார். இந்தியாவிலேயே இந்த நிறத்தில் இந்த சொகுசு கார் மாடலை வாங்கும் முதல் நபர் அர்ஜுன் அசோகன்தான் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.

மலையாளத்தில் பல முன்னணி படங்களில் நடகிர் அர்ஜுன் அசோகன் நடித்திருக்கின்றார். மிக முக்கியமாக மம்மூட்டி நடிப்பில் வெளியாகி பிரம்மயுகம் படத்திலும் இவர் முக்கிய ரோலை ஆற்றியிருப்பார் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, இவருடைய நடிப்பில் தயாராகி இருக்கும் நான்சி ராணி, என்னிட்டு அவசனம், ப்ரோமேன்ஸ் ஆகிய படங்களும் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.
இந்த நிலையிலேயே பிஎம்டபிள்யூ பிராண்டின் ஆடம்பர காரை வாங்கி, அதுவும், தனித்துவமான நிறம் கொண்ட வாகனத்தை வாங்கி அனைவரையும் அவர் ஆச்சரியத்தில் மூழ்க செய்துவிட்டார். இந்தியாவில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்-டிரைவ் 40ஐ மற்றும் எக்ஸ்-டிரைவ் 30டி ஆகியவையே அவை ஆகும்.
மேலும், இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் தமிழகத்தின் சென்னை ஆலையில் வைத்தே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இங்கிருந்தே இந்தியா முழுவதிற்கும் இந்த கார் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. சென்ற ஆண்டில் ரூ. 93 லட்சத்திற்கு விற்கப்பட்டு வந்த இந்த கார் மாடல் தற்போது ரூ. 97 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
பல்வேறு பிரீமியம் மற்றும் சொகுசு அம்சங்களை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காரின் விலை இவ்வளவு அதிகமாக இருக்கின்றது. மிக முக்கியமாக ஒளிரும் திறன் கொண்ட கிட்னி கிரில், நீல நிற அக்செண்டுகளைக் கொண்ட மேட்ரிக்ஸ் அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட், பனோரமிக் சன்ரூஃப், மிகவும் கம்ஃபோர்ட்டான இருக்கை (செயற்கையான லெதரால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்), கலர் ஹெட்-அப் திரை என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, ஸ்மார்ட் பார்க்கிங் வசதி, செல்போனையே சாவியாக பயன்படுத்தும் வசதி, இணைப்பு வசதிக் கொண்ட 14.9 அங்குல வளைவான திரை, செல்ஃப் லெவலிங் வசதிக் கொண்ட 2 ஆக்ஸில் ஏர் சஸ்பென்ஷன் ஆகிய அம்சங்களையும் இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய அதிக சிறப்புகளைத் தாங்கிய சொகுசு காரையே அர்ஜுன் அசோகன் தற்போது வாங்கி இருக்கின்றார். மேலும், பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த கார் மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களிலும் 48V திறன் கொண்ட மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தை வழங்கி இருக்கின்றது.
எரிபொருள் சிக்கனத்தை செய்து அதிக மைலேஜ்-க்கு வழிவகுக்கும். 381 எச்பி பவரையும், 520 என்எம் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்ட 3.0 லிட்டர், 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 286 எச்பி மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட 3.0 லிட்டர், 6 சிலிண்டர், டர்போசார்ஜட் டீசல் மோட்டார் ஆகிய இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களிலேயே பிஎம்டபிள்யூ எக்ஸ்5 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தயாரிக்கப்படும் மிக முக்கியமான கார் மாடல்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5-ம் ஒன்றாகும். இது ஓர் அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த சொகுசு கார் மாடல் ஆகும். இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த கார் மாடலுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இதன் உற்பத்தியை பிஎம்டபிள்யூ அதன் சென்னை ஆலையில் தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications








