யார் என்னனு பாக்காம சாட்டையை வீசிய அதிகாரிகள்! சட்டத்து மேல பெரிய நம்பிக்கையே வந்துருச்சு! பாராட்டும் மக்கள்!
திரைப்படங்களில் நீதி, நேர்மை, நியாயம், சட்டம் என பக்கம் பக்கமாக வசனம் பேசும் ஒரு சில நடிகர்கள், நிஜத்தில் அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்கின்றனர். இதை உண்மை என நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று கேரளா (Kerala) மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ளது.
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் ஒருவர் சூரஜ் வென்ஜரமூடு (Suraj Venjaramoodu). இவர் டிரைவிங் லைசென்ஸ் (Driving License) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிட்சயமான பிருத்விராஜ் சுகுமாறன் (Prithviraj Sukumaran) உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக சூரஜ் வென்ஜரமூடு நடித்திருப்பார். ஒரு காட்சியில் நடிகர் ஒருவரை பார்த்து, ''சட்டம் அனைவருக்கும் சமம். அது நடிகராக இருந்தாலும் சரி. சாதாரண மக்களாக இருந்தாலும் சரி'' என்ற ரீதியில் வசனம் பேசுவார். இது தற்போது சூரஜ் வென்ஜரமூடின் நிஜ வாழ்க்கையில் நடைபெற்றுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு கொச்சியில் (Kochi) கார் ஓட்டி சென்ற சூரஜ் வென்ஜரமூடு, மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் மீது மோதினார். இந்த சாலை விபத்தில் (Road Accident), பைக்கில் வந்த நபர் காயமடைந்தார். இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சூரஜ் வென்ஜரமூடிற்கு இதுவரை 3 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவை எதற்கும் சூரஜ் வென்ஜரமூடு பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக சூரஜ் வென்ஜரமூடின் டிரைவிங் லைசென்ஸை, கேரள மாநிலத்தின் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் தற்போது அதிரடியாக சஸ்பெண்ட் (Suspend) செய்துள்ளனர்.
அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால், சூரஜ் வென்ஜரமூடு அடுத்த 3 மாதத்திற்கு வாகனம் ஓட்டும் தகுதியை இழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகழ்பெற்ற ஒரு நடிகர் மீது கேரள மோட்டார் வாகன துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுத்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தவறு செய்திருக்கும்பட்சத்தில் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் நிலை இந்தியாவில் வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. இதற்கு முன்னுதாரணமான காரியத்தை கேரள மாநிலத்தின் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் தற்போது செய்து காட்டியுள்ளனர்.
சாலையில் வாகனங்களை இயக்கும்போது கவனமாக இருக்க வேண்டும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற 2 முக்கியமான பாடங்களை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. இதற்கு முன்பு இந்தியாவின் பல்வேறு இடங்களில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக, புகழ்பெற்ற நடிகர், நடிகைகளுக்கு அபராதம் (Fine) விதிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








