சுக்ரன் உச்சத்தில் இருந்தால் மட்டுமே இதெல்லாம் நடக்கும்!! ஒரே வருடத்தில் பிக்பாஸ் பிரபலத்தின் 3வது லக்சரி கார்
மலையாள பிக்பாஸ் 5ஆம் சீசனின் வின்னரும், இயக்குனருமான அகில் மாரர் புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ்350 (Mercedes-Benz GLS350) காரை வாங்கியுள்ளார். காரை டெலிவிரி எடுக்கும்போது அகில் மாரர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ், இந்தி, தெலுங்கு என பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் பல்வேறு மொழிகளில் பிரபலமானதாக உள்ளது. அதேபோல், மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை இலட்சக்கணக்கிலான மக்கள் பார்க்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டாலே பிரபலமாகி விடலாம் என்கிற அளவுக்கு பிக்பாஸில் கலந்து கொள்பவர்களின் எதிர்காலம் அதன்பின் பெரிய அளவில் மாற்றமடைந்து விடுகிறது.

அவ்வாறு, மலையாள பிக்பாஸில் கலந்துக் கொண்டு இன்று புகழின் உச்சிக்கு சென்றிருப்பவர் அகில் மாரர். மலையாள திரைப்பட இயக்குனரான இவர், மலையாள பிக்பாஸ் சீசன்-5இன் வெற்றியாளர் ஆவார். அவ்வப்போது சர்ச்சை பேச்சுகளில் சிக்கினாலும், அகில் மாரரின் வாழ்வில் தற்சமயம் சுக்ரன் உச்சத்தில் இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
படங்களை இயக்குவது மட்டுமின்றி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் பிஸியாக உள்ள அகில் மாரர் சமூக வலைத்தள பதிவுகளின் மூலமாகவும் கணிசமான வருவாயை ஈட்டி வருகிறார். இதில் கிடைக்கும் பணத்தில் இவர் வால்வோ எஸ்90, மினி கூப்பர் என தான் வாங்க நினைக்கும் லக்சரி கார்களை ஒன்றன்பின் ஒன்றாக வாங்கி கொண்டிருக்கிறார்.

இந்த வரிசையில், அகில் மாரர் தற்போது தனது மற்றொரு கனவு வாகனமான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ்350 காரை வாங்கி உள்ளார். புதிய பென்ஸ் காரை வாங்கியிருப்பதை அகில் மாரர் இன்ஸ்டாகிராமில் படங்களுடன் தெரிவித்துள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் இன்னும் பலத்துடன் முன்னேறுவேன்... சாலையின் ராஜா பென்ஸ் ஜி.எல்.எஸ்350 இனி என் பாதையில் வரும் சிரமங்களை எளிதில் எதிர்கொள்ளும்... எல்லா சாதனைகளுக்கும் கடவுளுக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள்..." என குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவின் கொச்சியில் உள்ள அமானி மோட்டார்ஸ் என்கிற ஷோரூமுக்கு மனைவி மற்றும் குழந்தை உடன் சென்று இந்த பென்ஸ் காரை அகில் மரார் டெலிவிரி எடுத்துள்ளார். ஷோரூமில் இருந்து டெலிவிரி பெற்ற பின் காரை அகில் மாரர் தான் வீட்டிற்கு ஓட்டி சென்றார். மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ்350 காரை இவர் அப்சிடியன் கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளார்.

இந்தியாவில் 2016ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ்350 கார் 2020ஆம் ஆண்டு வரையில் விற்பனையில் இருந்தது. அப்படியென்றால், அகில் மாரர் எவ்வாறு இந்த காரை இப்போது வாங்கியுள்ளார்? என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். அகில் மாரர் வாங்கியிருப்பது 2017ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஓல்டு ஜென்ரேஷன் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ்350 காரை ஆகும்.
விற்பனையில் இருந்த சமயத்தில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.88.18 லட்சமாக இருந்தது. ஆனால், 2017 ஜி.எல்.எஸ்350 காரை இப்போது ரூ.63 லட்சத்தில் அகில் மாரர் வாங்கியுள்ளார். இந்த காரில் 3.0 லிட்டர், 6-சிலிண்டர் DOHC என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக 255 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலையாள பிக்பாஸ் 5வது சீசனில் நெகட்டீவ்வான இமேஜ் உடன் நுழைந்தவர் அகில் மாரர். ஆனால், வெற்றி பெற்று வீட்டில் இருந்து வெளியே வந்த போது கிண்டல் செய்தவர்கள் அனைவரும் அகில் மாரரின் ரசிகர்களாக மாறிவிட்டனர். அப்போதில் இருந்து அகில் மாரரின் வாழ்க்கையும் மாறிவிட்டது. கடந்த 1 வருடத்தில் இவர் வாங்கியிருப்பது இது 3வது சொகுசு கார் ஆகும்.


Click it and Unblock the Notifications









