ரயில்வே டிக்கெட்டில் இப்படி ஒரு ஏமாற்று வேலையா? நீங்க கரெக்டான டிக்கெட்டை எப்படி எடுக்கனும் தெரியுமா?
சென்னையில் போலியான ரயில்வே டிக்கெட்டை விற்பனை செய்த ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். ரயில்வே டிக்கெட்டை வாங்கும்போது நாம் எதையெல்லாம் செட் செய்ய வேண்டும் உண்மையான ரயில்வே டிக்கெட்டை யாரிடம் இருந்து வாங்கலாம்? ஒரிஜினல் டிக்கெட்டை கண்டுபிடிப்பது எப்படி? விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் டிக்கெட் கட்டாயம் எடுக்க வேண்டும். பஸ்களைப் போல பஸ்களில் ஏறிய பின்பு டிக்கெட் எடுக்க முடியாது. ரயில்களில் டிக்கெட் எடுத்த பின்பு தான் ரயிலில் ஏற முடியும். இதனால் இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை பகுதியில் மர்ம ஆசாமி ஒருவர் போலி ரயில் டிக்கெட்களை விற்பனை செய்து வருவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இப்படியான போலி டிக்கெட்களை விற்பனை செய்த ஜிதேந்திர ஷா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் எப்படி போலியான டிக்கெட்களை விற்பனை செய்தார் என்ற செய்தி தான் மிகவும் சுவாரசியமானது. இவர் சென்னை போன்ற பெருநகரங்களில் கூட்டம் அதிகமாக உள்ள ரயில்வே நிலையங்களைத் தேர்வு செய்து அங்கு தான் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார். அங்கு டிப்டாப்பாக ஒரு ரயில்வே அதிகாரி போல சென்றுவிடுவார்.

குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் இவர் ஒரு நோட்டு, ரப்பர் ஸ்டாம்பு போன்ற விஷயங்களை எடுத்துக் கொண்டு பிளாட்பாரத்தில் யாரை ஏமாற்றலாம் எனக் காத்துக் கொண்டிருப்பார். அப்பொழுது ஸ்டேஷன்களில் நிற்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போய் எப்படி டிக்கெட் எடுப்பது எனத் தவிப்பில் இருக்கும் நபர்களை நோட்டமிடுவார்.
அவர்களிடம் தன்னை ரயில்வே உயர் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களிடம் பேசி தனக்கு ரயில்வேவில் பணியாற்றும் டிடிஆர்கள் எல்லாம் தெரியும் எனக் கூறி அவர்களிடம் பணத்தைப் பெற்று ஒரு பேப்பரில் டிக்கெட் குறித்த விபரம் எனப் பயணிக்கும் நபர்கள், கட்டணம் உள்ளிட்டவற்றை எழுதி அவர் வைத்திருக்கும் போலி ரப்பர் ஸ்டாம்பில் சீல் வைத்து கையெழுத்திட்டுக் கொடுத்து விடுவார்.

இப்படியாகப் போலி டிக்கெட்டை பெறும் நபர்களிடம் இந்த பேப்பரை குறிப்பிட்ட ரயிலில் ஏறி டிடிஆரிடம் காண்பித்தால் அவர்கள் இவருக்காக ஒதுக்கப்பட்ட சீட்டை இந்த பேப்பரை கொண்டு வரும் நபர்களிடம் வழங்குவார்கள், அதில் அவர்கள் செல்லும் இடம் வரை பயணம் செய்து கொள்ளலாம் எனச் சொல்லி ஏமாற்றி விடுவார்.
இதை நம்பி பலர் ரயில்களில் ஏறி விடுவார்கள். அவர்கள் டிடிஆரிடம் சென்று இந்த பேப்பரை காண்பிக்கும் போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதையே உணர்வார்கள்.பின்பு இவர்கள் அடுத்த ரயில் நிலையத்திலேயே இறக்கி விடப்படுவார்கள். பின் அங்கிருந்து வேறு டிக்கெட் எடுத்து இவர்கள் பயணம் செய்ய வேண்டியது இருக்கும்.
இப்படியாகப் போலி டிக்கெட்களை வாங்கி வந்து பலர் நடுவழியில் சிக்கித் தவித்து வரும் சம்பவம் அதிகம் நடந்துள்ளது. இதைக் கவனித்த ரயில்வே போலீசார் தான் இதை யார் செய்கிறார்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்துக் குறிப்பிட்ட நபரை நோட் செய்து அவரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
பொதுமக்களிடையே ரயில்வே டிக்கெட் எடுப்பது குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இன்னும் எழவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ரயில்வே டிக்கெட்களை ஆன்லைன் மூலமும், நேரடியாகக் கவுண்டர் மூலமும் மட்டுமே எடுக்க முடியும். ஆன்லைன் மூலம் எடுப்பதற்குத் தனி நபர்கள் நேரடியாக டிக்கெட் எடுக்கலாம் அல்லது ஐஆர்சிடிசி அங்கீகாரம் பெற்ற ஏஜென்ட்கள் மூலமாக டிக்கெட் எடுக்கலாம்.
இப்படியாக நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை எடுக்கும்போது அதில் கட்டாயம் பிஎன்ஆர் என்ற எண் இருக்கும் அந்த எண் இல்லாத டிக்கெட் ரயில்வேயில் செல்லாது. இந்தியா முழுவதும் இயங்கும் அத்தனை ரயில்களுக்கும் பிஎன்ஆர் எண் உள்ள டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களாக கருதப்படும். மற்ற அனைத்தும் போலியான டிக்கெட் தான்.
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கான டிக்கெட்டை நேரடியாக டிக்கெட் கவுண்டர் மூலமோ அல்லது யுடிஎஸ் ஆப் மூலமோ பெற முடியும். இந்த இரண்டும் ரயில்வே ஸ்டேஷனில் நேரடியாகச் சென்றால் மட்டுமே கிடைக்கும். ஆப் மூலம் புக் செய்யப்படும் டிக்கெட்களும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புக் செய்தால் மட்டுமே புக் ஆகும். இதனால் நீங்கள் இப்படியான போலியான டிக்கெட்களை எடுத்து ஏமாறாதீர்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னதான் தொழில்நுட்பம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டாலும், இப்படியாக ரயில் டிக்கெட் குறித்த அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லாத மக்கள் அதிகம் இருக்கின்றனர். இவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த ரயில்வே ஸ்டேஷன்களில் இது குறித்த விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகளை வைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









