தேசிய நெடுஞ்சாலையையில் திடீரென பெரிய பள்ளம் தோண்டிய கிராமத்தினர்.. காரணம் இது தான்..!!
சாமியார் ஒருவர் கூறியதைக் கேட்டு நெடுஞ்சாலையில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர் கிராமத்தினர். எதற்காக என விரிவாக காணலாம்.
சினிமாக்காரர்கள், அரசியல் வாதிகள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் என அனைவரையும் தூக்கி கொண்டாடுவோம், நமக்கு அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும் அவர்கள் மீது கண்மூடித்தனமாக பைத்தியமாக இருப்போம். இதே போல தான் பக்தியும்.

மூட நம்பிக்கைக்கு பெயர் போனவர்கள் இந்தியாவில் தான் அதிகம் என்றால் அது மிகையாகாது. அதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது இந்த சம்பவம். என்ன நடந்தது என்று பார்க்கலாம் வாங்க..

தெலங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டத்தில் உள்ள பெம்பார்த்தி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் லக்கான் மனோஜ், இவர் ஒரு சாமியார் ஆவார். சிறுவயது முதலே சிவன் மீது கடுமையான பக்தி கொண்டவராக இருந்து வருகிறார். இவரின் வயது 30.

ஒரு நாள் மனோஜ் தன்னுடைய கனவில் கடவுள் சிவன் தோன்றியதாகவும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிவலிங்கம் மண்ணுக்கடியில் இருப்பதாகவும், அதனை தோண்டியெடுத்து அந்த இடத்தில் தனக்கு பெரிய கோவில் ஒன்று எழுப்ப வேண்டும் எனவும் கூறியதாகவும் கிராம மக்களிடம் கூறியுள்ளார்.

சாமியார் மனோஜ் கூறியதைக் கேட்டு நம்பிய ஊர்மக்கள், அவர் குறிப்பிட்ட இடத்திற்கு திரண்டு சென்றனர். அந்த இடம் ஒரு தேசிய நெடுஞ்சாலை என்பது பின்னர் தெரியவந்தது.

இருப்பினும் அந்த இடத்தில் சிவலிங்கம் இருக்கும் என நம்பிய கிராம மக்கள் மனோஜின் செயலுக்கு துணை புரிந்தனர். மனோஜ் சுட்டிக்காட்டிய இடத்தை தோண்டுவதற்கு முன்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

வாரங்கல் - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே போக்குவரத்தை நிறுத்திவிட்டு ஜேசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டு சாலையின் நடுவே பிரம்மாண்ட பள்ளம் தோண்டப்பட்டது. போதாக்குறைக்கு உள்ளூர் மக்களும் கத்தி, கடப்பாறை சகிதமாக களத்தில் இறங்கினர்.

மனோஜ் கூறியதை கிராமமக்கள் உட்பட அந்த ஊரின் தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்தின் துணைத்தலைவர் ஆகியோரும் நம்பினர். அவர்களும் இதில் பங்கெடுத்தனர்.

எனினும் தேசிய நெடுஞ்சாலையில் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியும் சிவலிங்கம் எதுவும் கிடைக்காததால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்குள், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு
விரைந்த காவல்துறையினர் மனோஜ், ஊர்த்தலைவர் மற்றும் உடந்தையாக செயல்பட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் அனைவர் மீதும் பொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாமியை நம்பாமல் ஆசாமிகளை நம்பும் மக்கள் இருக்கும் வரை இதைப்போன்ற செயல்கள் நிச்சயம் தொடர்கதையாக நடந்து வரவே செய்யும். எனவே இதைப் போன்ற ஆசாமிகள் சொல்வதை நம்பிவிடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
Via India Today


Click it and Unblock the Notifications








