தவறு என்று தெரியாமலேயே இத்தனை நாள் இதை செய்கிறாரா? பெங்களூரில் டிரைவர் இல்லாமல் ஓடும் ‘அமானுஷ்ய’ கார்!!
பெங்களூரில் ஆளில்லாமல் தானாக இயங்கும் மஹிந்திரா கார் ஒன்று சோதனை ஓட்டமாக மக்கள் செல்லும் சாலையில் இயக்கி பார்க்கப்பட்டுள்ளது. காருக்குள் டிரைவர் இல்லாததை அறிந்த மற்ற வாகன ஓட்டிகள் காரை ஆச்சிரியத்துடன் பார்த்தப்படி சென்றனர். நாங்களும் ஆரம்பத்தில் இவ்வாறுதான் ஆச்சிரியப்பட்டோம். ஆனால், அதன் பின்பே இதில் உள்ள தில்லுமுல்லு வேலை தெரிய வந்தது.
'நோ டிரைவர்' என்கிற நோட்டீஸ் ஒட்டப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ கார் ஒன்று பெங்களூரில் சாலையில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. காரை சுற்றிலும் நாலாப்புறமும் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், காரின் டிரைவர் இருக்கையில் யாரும் இல்லை. டிரைவர் சீட்டிற்கு அருகே இருக்கும் இருக்கையில் மட்டும் ஒருவர் அமர்ந்துள்ளார்.

காரின் பின் இருக்கைகளில் யாரும் அமர்ந்திருப்பது போல் தெரியவில்லை. சாதாரணமாக கார் ஒன்று சாலையில் செல்கிறது என்றால், காருக்குள் டிரைவர் இருக்கிறாரா என யாரும் ஆராய்ந்து பார்க்க போவதில்லை. ஆனால், இந்த மஹிந்திரா காரை சுற்றிலும் 'நோ டிரைவர்' நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால், நோட்டீஸை பார்க்கும் மற்ற வாகன ஓட்டிகளின் கவனம் அடுத்ததாக காருக்குள் டிரைவர் இருக்கையின் மீதே விழுகிறது.
டிரைவர் இருக்கையில் யாரும் இல்லை என்பதை பார்த்தவுடன் அனைவரும் பெரிய ஆச்சிரியமாகின்றனர். ஏனெனில், இந்தியாவை பொறுத்தவரையில் ஆட்டோபைலட் கார்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகலாம். அமெரிக்காவிலேயே ஆட்டோபைலட் கார்கள் இன்னும் ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளன. இந்த மஹிந்திரா காருக்குள் டிரைவர் இல்லை என்பதை அறிந்ததும் அருகில் வாகனங்களில் சென்றவர்கள் தங்களது போனில் படமெடுக்க ஆரம்பித்தனர்.

ஒரு சிலர், காருக்குள் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபரிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பினர். மலையாளிஸ் பெங்களூர் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இதுகுறித்த வீடியோ லைக்ஸையும், கமெண்ட்ஸையும் குவித்துக்கொண்டு வருகிறது. ஆனால், இதில் மிக பெரிய ஏமாற்று வேலை ஒளிந்துள்ளது. ஏமாற்று வேலை என சொல்வதை காட்டிலும், சட்டத்திற்கு புறம்பான வேலை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், காருக்குள் முன் இருக்கையில் அமர்ந்துள்ள அந்த நபர் தான் காரை இயக்குகிறார். இந்த நபர் 6 அடிக்கு மேல் நன்கு உயரம் கொண்டவராக இருக்கிறார். மராஸ்ஸோ எம்பிவி போன்ற அளவில் பெரியதான கார்களில் அதிக உயரம் கொண்டவர்கள் சவுகரியமாக அமர முடியும். இந்த நபர், காருக்குள் தனது இருக்கையில் அமர்ந்துக் கொண்டே டிரைவர் இருக்கைக்கு கீழ் இருக்கும் ஆக்ஸ்லரேட்டர் மற்றும் பிரேக் பெடல்களை அழுத்தி யாருக்கும் தெரியாதவாறு காரை ஓட்டியுள்ளார்.

மராஸ்ஸோ நன்கு உயரமான கார் என்பதால், இவரது கால் அசைவுகள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியவில்லை. அதையும் தாண்டி, தனது கால் அசைவுகள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, தனது மடி மீது ஒரு பையை இந்த நபர் வைத்துள்ளார். ஆக, இந்த ஸ்டண்ட் முழுக்க முழுக்க இணையத்தில் கவனத்தை பெறுவதற்கே. இந்த செயல் முற்றிலும் தண்டனைக்குரியது மற்றும் தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.
இந்த செயலில் ஈடுப்பட்டுள்ள இந்த நபரின் பெயர் ஃபரன். பெங்களூரின் ஜேபி நகரில் வசித்து வருகிறார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஃபரன் இந்த செயல்களில் இன்று, நேற்று இல்லை... கடந்த 10 வருடங்களாக ஈடுப்பட்டு வருகிறார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லையா அல்லது போலீசாரும் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டனரா என்பது தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் மேலும் ஷாக்கிங்கான விஷயம் என்னவென்றால், ஆக்ஸலரேட்டர் & பிரேக் பெடல்கள் மட்டுமின்றி, இந்த நபர் சில சமயங்களில் காரின் ஸ்டேரிங் சக்கரத்தையும் கால்களால் இயக்குகிறார். ஆனால், ஆரம்பத்தில் நாங்களும் இவரது மாயாஜாலத்தால் கார் தானாக இயங்குகிறது என நம்பிவிட்டோம். இத்தகைய நபர்களால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









