வேண்டுதல் நிறைவேறியதால் கோயிலில் இளைஞர் செய்த காரியம்! இதை பாத்து சாமிக்கே ஷாக் அடிச்சிருக்கும்!
கடவுளிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உண்டியலில் காணிக்கை செலுத்துவது, தலையில் மொட்டை அடித்து கொள்வது மற்றும் கிடா வெட்டுவது போன்றவைதான், வேண்டுதல் நிறைவேறினால் நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் விஷயங்களாக இருக்கும். ஆனால் இங்கே ஒருவர் மிகவும் வித்தியாசமான காரியம் ஒன்றை செய்திருக்கிறார்.
சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதில் மலைக்கோயில் ஒன்றின் படிகளில், மஹிந்திரா தார் (Mahindra Thar) கார் ஏறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டார் என்னும் பகுதியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த வீடியோ வைரல் ஆனதையடுத்து, சம்பந்தப்பட்ட நபரை தேடும் பணிகளில் காவல் துறை அதிகாரிகள் இறங்கினர். இதன் மூலம், கோயில் படிக்கட்டுகளில் மஹிந்திரா தார் காரை ஏற்றிய இளைஞரை காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இது மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் இருந்த காரணத்தால், அந்த கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் அந்த இளைஞருக்கு மத நம்பிக்கைகளை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. மாறாக கடவுள் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றினால், தனது காரை கோயிலுக்கு கொண்டு வருவேன் என அந்த இளைஞர் வேண்டியிருந்தாராம். இதன் காரணமாகவே இந்த வினோதமான காரியத்தை அவர் செய்துள்ளார்.

இந்திய சந்தையில் மஹிந்திரா தார் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இது ஆஃப்ரோடு எஸ்யூவி (Off-Road SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே சவாலான பயணங்களை செய்யும் திறனை மஹிந்திரா தார் பெற்றுள்ளது. மஹிந்திரா தார் படிக்கட்டுகளில் ஏறுவது இது முதல் முறை அல்ல.
இதற்கு முன்பாக யூடியூபர்கள் போன்ற ஒரு சிலர், மஹிந்திரா தார் காரை படிக்கட்டுகளில் ஏற்றி காட்டியுள்ளனர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் காரின் ஆரம்ப விலை 10.98 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 16.94 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்களில், மஹிந்திரா தார் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) மற்றும் ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) போன்ற கார்களுடன், மஹிந்திரா தார் கார் போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கோயில் படிக்கட்டுகளில் இப்படி காரை ஏற்றுவது ஆபத்தானது. இது போன்ற விபரீத செயல்கள், கார்களில் இருந்தவர்களுக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நல்ல வேளையாக அப்படி எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








