நானும் இந்த கார்ல தான் இருக்கேன்!! டிரைவிங்கின் போது கார் ஓட்டுனரை கிடுகிடுக்க வைத்த பாம்பு!
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலைக்கு பின் தற்போது தான் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மக்கள், மிகவும் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளியூருக்கு செல்வது எல்லாம் வழக்கம்போல் அதிகரித்துவிட்டன. அவ்வாறு மத்திய பிரதேசத்திற்கு மாருதி எர்டிகா காரில் சென்று கொண்டிருந்தவருக்கு நடந்த சம்பவத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

ரத்தன் தீப் என பெயர் கொண்ட இந்த நபருக்கு அந்த பயணத்தின் போது எல்லாமே நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. அவர் பாம்பு ஒன்றை காரின் முன் காற்று தடுப்பு கண்ணாடியில் பார்க்கும் வரை. இதுதொடர்பாக அபிபி நியுஸ் டிவி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.
ரத்தன் தீப் மஹாராஷ்டிராவில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு தனது எர்டிகா காரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரின் முன்பக்க விண்ட்ஷீல்டில் நெழிந்த கயிறு போன்ற ஒன்று வழுக்கி கொண்டு கீழே விழுந்துள்ளது.

பிறகு பாம்பு என தெரிய வர, பாம்பிற்கு பயப்படாதவர்கள் யாரு தான் இருப்பார்கள். முதலில் பயத்தில் காரை நிறுத்தி விட்டார். ஆனால் நெடுஞ்சாலை என்பதால் அருகில் யாரும், எந்தவொரு கடையும் இல்லை.
இதனால் தொடர்ந்து காரை ஓட்ட தீர்மானித்தார். அப்படியே பாம்பை முன்பக்கத்தில் பார்த்தவாறே கிட்டத்தட்ட 2 கிமீ தூரத்திற்கு சென்றுள்ளார். சந்தை பகுதி ஒன்று வந்துள்ளது, பாம்பு இறங்கி செல்லட்டும் என தைரியமாக காரை நிறுத்தியுள்ளார்.

மழைக்காலம் துவங்கிவிட்டது என்பது தினந்தோறும் விடாமல் பெய்கின்ற மழைகளிலேயே தெரிகிறது. இந்தியா முழுவதும் இதே நிலை தாங்க. அப்போ மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் என்ன வித்தியாசமாகவா இருக்க போகிறது?
மழை காலத்தில் இவ்வாறான ஊர்வன விலங்குகள் காருக்குள் குடிப்பெயர வருவது சஜகமான ஒன்றாகும். ஏனெனில் அவற்றிற்கு குளிர்ச்சியான காலத்தின் போது வெதுவெதுப்பாக்கி கொள்ள சூடான பகுதி தேவைப்படுகிறது.

காரில் தான் என்ஜின் பகுதி உள்ளதே. இதனால் நீண்ட நாட்கள் கழித்து காரையோ அல்லது பைக்கையோ வெளியே எடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் மட்டும் தான் அந்த வாகனத்தில் பயணிக்கிறீர்களா அல்லது மற்றொரு பயணியும் உள்ளாரா என்பதை ஆராய்ந்து பார்த்து கொள்ளுங்கள்.

ஆனால் சில பாம்புகள் அந்த சூடான என்ஜின் பகுதி பிடித்து போக, அங்கிருந்து நகரவே நகராது. ரத்தன் தீப்பின் காரில் இருந்த பாம்பும் அப்படி தான் போல. ரத்தன் தீப் காரை நிறுத்தியதும் வேகமாக அடிப்பகுதிக்கு சென்று பின் சக்கரத்திற்கு அருகில் பதுங்கி கொண்டது.

இந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் சிறிது பயம் தொற்றிக்கொள்ளும். ஏனெனில் பாம்பு கண் முன் இருந்தால் பரவாயில்லை, அதன் செயல்பாடுகள் அனைத்தையும் கவனித்து கொண்டே இருக்கலாம். இவ்வாறு அடிப்பகுதிக்கோ அல்லது பின்பகுதிக்கோ டிரைவிங்கின் போது சென்றால் பிரச்சனை தான்.

ஏனென்றால் எப்போது வருமோ என பயந்தப்படி அதன்மீதும் ஒரு கண் வைக்க வேண்டிவரும். சாலையில் இருந்து கவனம் சிதறும். இதனால் மிகவும் மெதுவாக காரை ஓட்டி சென்றப்படி ஒரு கார் சேவை மையத்தினை ரத்தன் தீப் அடைந்துள்ளார். அங்கு வாகனத்தில் இருந்து பாம்பு வெளியே எடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








