இவருக்கு நடந்த விஷயம் தெரிஞ்சா இனி செயின்ல கை வைக்கவே மாட்டீங்க! நிறைய பேருக்கு இதுதான் ஒரு மாச சம்பளம்!
தொலை தூர பயணங்களை மேற்கொள்வதற்கு சௌகரியமான மற்றும் செலவு குறைந்த போக்குவரத்து முறையாக ரயில்கள் உள்ளன. எனவே இந்தியாவில் தினந்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய ரயில்வே துறைக்கு உள்ளது. எனவே ரயில்களில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில், பயணிகள் இழுக்க கூடிய வகையில் வழங்கப்பட்டிருக்கும் செயின்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவசர சூழல் ஏற்படும்பட்சத்தில், இந்த செயின்களை நீங்கள் இழுக்கலாம்.
அதாவது யாருக்காவது உடல்நிலை மோசம் அடைந்தாலோ அல்லது நீங்கள் பயணம் செய்யும் பெட்டியில் குற்ற செயல்கள் நடந்தாலோ அல்லது திடீரென தீ பிடித்தாலோ, இந்த செயினை நீங்கள் இழுக்கலாம். இதன் மூலம் ரயில் உடனடியாக நிற்கும். அத்துடன் உங்களுக்கான உதவியும் உடனடியாக கிடைக்கும்.

இது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் ரயில்களில் இந்த செயின் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் ரயில்களில் செயினை பிடித்து இழுக்கும்போது, பிரேக் ஏர் பைப்பில் உள்ள வால்வு திறந்து கொள்ளும். அத்துடன் காற்று வெளியேற்றப்படும்.
இதன் விளைவாக பிரேக்குகளில் காற்றழுத்தம் குறைய தொடங்கும். இறுதியில் ரயில் நிற்கும். பொதுவாக ரயில்களின் லோகோ பைலட்கள். பிரஷர் மீட்டரை சோதனை செய்து கொண்டிருப்பார்கள். எனவே காற்றழுத்தத்தில் ஏற்படும் இந்த மாற்றம் அவர்களுக்கும் தெரியும். இதன் மூலம் உங்களுக்கான உதவி உடனடியாக கிடைக்கும்.

ஆனால் காலம் செல்ல செல்ல ரயில்களின் செயின் சிஸ்டத்தில் மாற்றங்கள் நடந்து கொண்டே வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் ஒரு விஷயம் மட்டும் இன்றளவும் மாறாமல் உள்ளது. ரயில்களை செயின்களை தேவையில்லாமல் பிடித்து இழுப்பதுதான் அது. நாங்கள் மேலே குறிப்பிட்டபடி அவசர சூழல்களில் நீங்கள் தயங்காமல் செயினை இழுத்து ரயிலை நிறுத்தலாம்.
ஆனால் தேவையில்லாத காரணங்களுக்காக எல்லாம் செயினை இழுத்து ரயிலை நிறுத்த கூடாது. இந்திய ரயில்வே எவ்வளவுதான் எச்சரிக்கை செய்தாலும், இன்றளவும் ஒரு சிலர் தேவையில்லாத காரணங்களுக்காக எல்லாம் செயினை இழுத்து ரயிலை நிறுத்தி கொண்டுள்ளனர். அப்படி தேவையில்லாமல் ரயிலை நிறுத்திய ஒரு நபர் தற்போது கையும் களவுமாக சிக்கி கொண்டுள்ளார்.
அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 15ம் தேதி, அகர்தாலா-லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அன்றைய தினம் பயணி ஒருவர், பார்பெட்டா ரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே செயினை இழுத்து அந்த ரயிலை நிறுத்தியுள்ளார்.
ஆனால் ரயிலை நிறுத்தியது ஏன்? என்பதற்கு அவரிடம் போதுமான காரணங்கள் எதுவும் இல்லை. எனவே ரயிலின் பயணத்தில் தாமதம் மற்றும் இடையூறு ஏற்படுத்தியமைக்காக அந்த பயணிக்கு, ரயில்வே சட்ட பிரிவு 141-ன் கீழ், 8 ஆயிரம் ரூபாய் அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தேவையில்லாமல் ரயிலை நிறுத்தினால், அது மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே போதுமான காரணங்கள் எதுவும் இல்லாமல் ரயிலை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றுதான். அகர்தாலா-லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, மற்றவர்களுக்கு எல்லாம் ஒரு பாடம்.


Click it and Unblock the Notifications








