விற்பனை செய்த காரை திருடி மீண்டும் விற்க முயன்ற ஜெகஜால கில்லாடி!
நாள்தோறும் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களை படித்தும், பார்த்தும் போரடித்து விட்டது. வழக்கமான வழிப்பறி, நகை திருட்டு என செய்தித்தாள்களிலும் ஒரே செய்திதான் திரும்பத் திரும்ப வருகின்றன.
ஆனால், சமீப காலமாக அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நூதன முறையில் திருடும் சில சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அமேஸான், ஃபிளிப்கார்ட் போன்ற இணைய வர்த்தகத்தின் வாயிலாக வாங்கும் பொருளை இடையில் உள்ள டெலிவரி பாய்கள் மாற்றி வேறு பொருளை வைத்து ஏமாற்றுவது அதில் ஒரு வகை.

தற்போது இன்னும் நூதனமாக காரை விற்றுவிட்டு, அதை வாங்கியவரிடமிருந்தே திருடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தில்லியைச் சேர்ந்தவர் மின்ட்டு குமார் (28). ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மகனான இவர், அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நூதனமான திருட்டை மின்ட்டு குமார் அரங்கேற்றியுள்ளார்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடல் கார் ஒன்றை வாடைக்கு எடுத்த அவர், தனது பெயரில் போலியாக ஆர்.சி. புத்தகம் தயாரித்து இணைய வர்த்தகம் வாயிலாக அந்த காரை விற்பனை செய்துள்ளார்.

அதோடு விட்டிருந்தால், ஒரு மோசடியுடன் போயிருக்கும். ஆனால், அடுத்து அவர் என்ன செய்தார் தெரியுமா? காரை வாங்கிய நபரிடமிருந்தே அதனை மின்ட்டு குமார் திருடியுள்ளார்.
திருடிய பிறகு மீண்டும் அதே காரை இணைய வர்த்தகத்தின் வாயிலாக விற்பனை செய்ய முயன்றுள்ளார். காரைப் பறிகொடுத்தவர் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில், அவர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் மின்ட்டு குமாரின் இந்த நூதனத் திருட்டு வெளிப்பட்டிருக்கிறது. உடனடியாக அவரைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஏமாற்ற நினைத்த மின்ட்டு குமார், வெளியே வர கேப்பே இல்லாத கம்பிகளுக்குப் பின்னால் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications








