காட்டு யானை ஆக்ரோஷமாக துரத்தியபோது விவசாயி செய்த காரியம்! இந்த விஷயம் இவ்ளோ நாளா யாருக்கும் தெரியாம போச்சே!
விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது தற்போது அடிக்கடி நடக்க கூடிய ஒரு விஷயமாக மாறி விட்டது. குறிப்பாக தென் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு (Tamil Nadu), கேரளா (Kerala) மற்றும் கர்நாடகா (Karnataka) ஆகிய மாநிலங்களில், மனிதர்கள்-விலங்குகள் மோதல் அதிகமாக நடைபெற்று வருகிறது.
வன விலங்குகளை பொறுத்தவரையில், யானைகளால்தான் (Elephants) மனிதர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. யானைகள் பயிர்களை நாசம் செய்வதுடன், வாகனங்களையும் சேதப்படுத்துகின்றன. கூடவே மனித உயிர்களை எடுக்கும் எமனாகவும் யானைகள் உருவெடுத்துள்ளன. இந்த வரிசையில் கர்நாடக மாநிலம் ஹசன் (Hassan) பகுதியில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை யானை தாக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக யானையிடம் இருந்து தப்பித்துள்ளார். இதுகுறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வைரல் வீடியோவில், யானை ஒன்று தோட்டத்திற்குள் வேகமாக வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது அங்கு ஒரு நபர் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் விவசாயி என கூறப்படுகிறது. ஆனால் யானை அருகே நெருங்கும் வரை, அவருக்கு யானை வருவது தெரியவில்லை.

எனினும் யானையை பார்த்த உடனேயே அவர் ஓட்டம் எடுக்க தொடங்கி விட்டார். இங்கே அவர் புத்திசாலித்தனமான காரியம் ஒன்றை செய்தார். அவர் யானையின் முன்னால் நேராக ஓடவில்லை. வளைந்து ஓடி தப்பித்து விட்டார். பொதுவாக யானைகள் நேராக ஓடுவதென்றால், வேகமாக ஓடும். ஆனால் மற்ற விலங்குகளை போல் அவைகளால் திசையை வேகமாக மாற்ற முடியாது.
இதை அந்த நபர் அனேகமாக தெரிந்து வைத்துள்ளார் என்றுதான் தோன்றுகிறது. இதன் காரணமாகவே நேராக ஓடாமல் திசையை மாற்றி ஓடி அவர் தப்பி விட்டார். ஆனால் காட்சிகள் இன்னும் முடியவில்லை. யானையிடம் இருந்து முழுமையாக தப்பிப்பதற்காக அந்த தோட்டத்தில் இருந்த வீட்டிற்குள் நுழைய அவர் முயற்சி செய்தார்.
ஆனால் அந்த வீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த வீட்டின் முன்னால் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த காரின் கீழே சென்று அவர் பதுங்கி கொண்டார். இதன்பின் யானை அந்த இடத்தை விட்டு செல்லும் வரை காத்திருந்த அவர், சற்று நேரம் கழித்து வெளியே வந்தார். உண்மையில் யானையிடம் இருந்து காயங்கள் எதுவும் இன்றி அவர் தப்பியிருப்பதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: யானையிடம் இருந்து தப்பிக்க வளைந்து ஓடியதை புத்திசாலித்தனம் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் காருக்கு அடியில் பதுங்கி தப்பியதை அதிர்ஷ்டம் என்றுதான் நாங்கள் கூறுவோம். ஏனெனில் யானைகளிடம் இருந்து தப்பிக்க காருக்கு அடியில் பதுங்குவது உண்மையில் புத்திசாலித்தனம் கிடையாது.
யானைகளுக்கு மோப்ப சக்தி மிகவும் அதிகம். காருக்கு அடியில் பதுங்கும் நபர்களை அவை மிகவும் எளிதாக மோப்பம் பிடித்து விடும். ஒருவேளை தாக்க வேண்டும் என அவை முடிவு செய்து விட்டால், காரையே திருப்பி போட்டு விடும். அந்த உடல் வலிமையும் யானைகளுக்கு உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயமே!
யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் ஊர்களுக்குள் புகுந்து, மனிதர்களையும், வாகனங்களையும் தாக்குவது ஒரு ரகம் என்றால், வனப்பகுதிகள் வழியாக செல்லும் வாகனங்களையும், மனிதர்களையும் தாக்குவது மற்றொரு ரகம். இதற்கு முன்பாக வனப்பகுதிகள் வழியாக சென்ற வாகனங்கள் பலவற்றை யானைகள் தாக்கிய சம்பவங்களை நாம் கேள்விபட்டுள்ளோம்.
எனவே வனப்பகுதிகள் வழியாக வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருங்கள். வாகனங்களை மெதுவாக இயக்குவது, தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதை தவிர்ப்பது போன்ற எளிமையான விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் வனப்பகுதிகளில் மனிதர்கள்-விலங்குகள் மோதலை தவிர்க்க முடியும் என்பதை அனைவரும் மனதில் வைத்து கொள்வது சிறந்தது.


Click it and Unblock the Notifications








