சுதந்திர தினத்தின்போது கூட சாலையில் இப்படி நடந்துக் கொள்வதா? போலீஸாருக்கு தான் ஓவர் ட்யூட்டி!
நொய்டாவில், பரபரப்பான சாலை ஒன்றில் காரில் சாகசம் காட்டியவருக்கு போலீஸார் அதிரடியாக ஓர் பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளனர். இந்த செயலில் ஈடுப்பட்ட அந்த நபர் யார்? என்பதையும், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை பற்றியும் இனி முழுமையாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
நாள்தோறும் நம் நாட்டில் நூற்றுக்கணக்கான சாலை விபத்துகள் நடக்குகின்றன. செய்தியை திறந்தாலே சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் குறித்த செய்திகள் தான் அதிகமாக தென்படுகின்றன. இவ்வாறான சூழல் நிலவினாலும், சிலர் சாலைகளில் தங்களது வாகனங்களில் அலட்சியமாக நடந்து கொள்வதை அவ்வப்போது பார்க்க முடிகிறது.

இத்தகைய செயல்களை குறைக்க போலீஸார் எவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்தாலும், ஒருபக்கம் இவ்வாறான செயல்களை செய்பவர்கள் செய்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வாறு, தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் பொது சாலையில் சாகசத்தில் ஈடுப்பட்டு, பின்னர் போலீஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட இளைஞரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.
டெல்லிக்கு அருகே அமைந்திருப்பதாலேயே, நொய்டா ஓர் பரபரப்பான மாநகரமாக விளங்குகிறது. உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள நொய்டாவில் பகுதி-18 என்ற பரபரப்பான சாலையில், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தின் மாலை நேரத்தில் ஓர் வெள்ளை நிற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், சாலையில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்தவாறு வந்துள்ளது. என்னவென்று பார்த்தால்... அந்த ஸ்விஃப்ட் காரின் பொனெட்டில் அமர்ந்தவாறு இளைஞர் ஒருவர் பயணித்துள்ளார்.
இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை தான் மேலே காண்கிறீர்கள். இந்த வீடியோ, சம்பந்தப்பட்ட ஸ்விஃப்ட் காரின் பின்னால் வேறொரு வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால், வீடியோவை பார்க்கும்போது ஆரம்பத்தில் ஓர் வெள்ளை நிற காரின் மேற்கூரையில் ஓர் இளைஞரது பாதி உடல் தெரிகிறது. இதனால், அவர் காரின் சன்ரூஃப் வழியாக எட்டி பார்த்தவாறு பயணம் செய்துள்ளார் என எங்களை போல் நீங்களும் நினைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
அதன்பின் வீடியோ எடுக்கும் கார், சம்மந்தப்பட்ட காரை நெருங்கும்போதுதான், அது மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் என்பதும், இந்த காரில்தான் சன்ரூஃப் வழங்கப்படுவது இல்லையே என்பதும் நமக்கு தெரிய வருகிறது. இதனால் வீடியோவை சற்று உற்று பார்த்தால், அந்த இளைஞர் காரின் பொனெட்டில் அமர்ந்தவாறு பயணம் செய்துள்ளார். அந்த இளைஞர் சம்பவத்தின் போது போதையில் இருப்பதுபோல் தெரிகிறது.

இயங்கும் காரின் சன்ரூஃப் வழியாக எட்டி பார்த்தவாறு பயணம் செய்வதே அபராதத்திற்குரிய குற்றம் எனும்போது, காரின் பொனெட்டில் அமர்ந்து பயணம் செய்தால் போலீஸார் சும்மா விடுவார்களா... டுவிட்டரில் வெளியான இதுகுறித்த வீடியோவை வைத்து சம்மந்தப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் காரையும், அதன் உரிமையாளரையும் அடையாளம் கண்டுவிட்டனர். அதன்பின் காரின் உரிமையாளர் மூலமாக, இந்த செயலில் ஈடுப்பட்ட இளைஞரையும் போலீஸார் கண்டுப்பிடித்து விட்டனர்.
டுவிட்டரில் வெளியிடப்பட்ட வீடியோவுக்கு கீழ், இந்த காருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் குறித்த விபரங்களை இ-செல்லானின் படத்துடன் நொய்டா போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, "மேலுள்ள புகாரை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட வாகனத்தின் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளின்படி, சம்பந்தப்பட்ட காருக்கு ரூ.26,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என கூறி, தங்களது அவசர கால மொபைல் எண்ணை நொய்டா போலீஸார் பதிவிட்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ரூ.26,000 என்பது சற்று அதிகமான அபராதம் என உங்களில் சிலர் நினைக்கலாம். ஆனால் இவ்வாறான செயல்களை தடுக்க இவ்வளவு பெரிய அபராதங்கள் அவசியமாகின்றன. அதுமட்டுமின்றி, இந்தியாவில் சமீப காலங்களில் இதை விட பெரிய தொகையை கூட போலீசார் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமாக விதித்துள்ளனர். அதனுடன் ஒப்பிடுகையில், ரூ.26,000 குறைவே.


Click it and Unblock the Notifications