ரீல்ஸ் மோகம்... ரோட்ல போகும்போது இனி உஷாரா போகனும் போலயே!! எங்கிருந்துதான் வருவார்களோ!
டெல்லி (Delhi)-இன் பிரபலமான மேம்பாலம் ஒன்றில் இளைஞர் ஒருவர் ஓடும் ஆட்டோவில் தொங்கியப்படி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். ஆனால், இறுதியாக அந்த வீடியோ ஓர் சோகத்தில் சென்று முடிந்துள்ளது. அப்படி என்ன நடந்தது என்பதை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இன்றைய காலத்தில் இணைய மோகம் நம் அனைவரையும் நன்றாக ஆட்டிப் படைத்து வருகிறது. சோசியல் மீடியாக்களில் இல்லை என்றாலே நம்மை ஓர் ஏலியன் போலவே நிறைய பேர் பார்க்கின்றனர். சோசியல் மீடியாக்களில் லைக்ஸையும், கமெண்ட்ஸையும் பெறுவதற்காக வித்தியாசமான, வித்தியாசமான செயல்களில் இளைஞர்கள் ஈடுப்படுவதை தினந்தோறும் பார்க்க முடிகிறது.

இதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயாராக உள்ளனர். லைக்ஸ் மோகத்தால் அவ்வாறு செய்யப்படும் செயல்கள் சில சமயங்களில் ஆபத்துகளிலும் சென்று முடிந்துள்ளன. அவ்வாறு ரீல்ஸ் வீடியோவுக்காக, ஆபத்தில் சென்று முடிந்த இளைஞர் ஒருவரது செயலை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
தேசிய தலைநகர் டெல்லியில் ஓர் பிரபலமான மேம்பாலம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பிரபலமான மேம்பாலத்தின் பெயர் 'சிக்னெச்சர் பிரிட்ஜ்' ஆகும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த மேம்பாலத்தில், இளைஞர் ஒருவர் ஆட்டோவில் தொங்கியப்படி சென்றுள்ளார். இதனை ஆட்டோவுக்கு பின்னால் வந்தவர்கள் படமாக்கிக் கொண்டிருந்தனர்.

அந்த இளைஞரும், ஏதோ பாடலுக்கு நடனமாடுவது போல, ஆட்டோவில் இருந்து வெளியே தொங்கியப்படி உணர்ச்சி பொங்க தலையையும், கை, கால்களையும் அசைத்தவாறு இருந்துள்ளார். சரியாக அந்த சமயத்தில், அந்த ஆட்டோவிற்கு அருகாமையில் ஒரு சைக்கிள் ஓட்டி வந்துள்ளார். இதனை ஆட்டோ டிரைவரும் கவனிக்கவில்லை, அந்த இளைஞரும் கவனிக்கவில்லை.
முன்னால் சென்றுக் கொண்டிருந்த அந்த சைக்கிள் ஓட்டியை இவர்களது ஆட்டோ முந்தி சென்றதால், இவ்வாறு ஒருவர் ஆட்டோவில் தொங்கியப்படி வருகிறார் என்பதை அந்த சைக்கிள் ஓட்டியாலும் கவனிக்க முடியவில்லை. பிறகு என்ன... மோதல்தான். அந்த இளைஞர் ஆட்டோவில் இருந்து கொஞ்சம் ஓவராக வெளியே சாய, சைக்கிள் ஓட்டியின் மீது மோதிவிட்டார்.

இந்த மோதலில் சைக்கிள் ஓட்டி நடு ரோட்டிலேயே தடுமாறி விழுந்தார். ஆட்டோவில் தொங்கியப்படி சென்ற அந்த இளைஞரும் தடுமாற்றம் அடைந்ததை இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோவில் காணலாம். சைக்கிள் ஓட்டுனர் கீழே விழுந்ததை அடுத்து, கொஞ்ச நேரத்தில் அந்த பகுதி பரபரப்பாகியது. இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை வைத்து, சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த ஆட்டோ டிரைவரின் பெயர் சிவா. காஸியாபாத்தில் வசித்து வருகிறார். சிவாவிடம் ஆட்டோ ஓட்டுவதற்கு முறையான டிரைவிங் லைசன்ஸ் கூட இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, மோட்டார் வாகன சட்டத்தின்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது உள்பட வழக்குகள் சிவா மீது பதியப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோ டிரைவரை அடையாளம் கண்டதன் மூலம், தொங்கியப்படி பயணித்த இளைஞரையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவம், சிக்னெச்சர் மேம்பாலம் பகுதியில் மட்டுமின்றி, வீடியோவின் மூலமாக இணையத்திலும் பலரது கண்டனங்களை பெற்றுள்ளது. இதில் இருந்து, லைக்ஸ் மோகம் நம்மை எந்த அளவிற்கு ஆட்கொண்டுள்ளது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









