மானமே போச்சு! போலீஸ் கண்ணில் மண்ணை தூவி கொள்ளையன் செய்த காரியம்! கண்ணு முன்னாடியே நடந்தும் கோட்ட விட்டுட்டாங்க
இந்தியாவில் என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து விட்டாலும் கூட, வாகன திருட்டு சம்பவங்கள் இன்னும் கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. வாகன நிறுவனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு சவால் விடும் வகையில், கொள்ளையர்கள் புதுப்புது வழிகளை பயன்படுத்தி வாகனங்களை தொடர்ச்சியாக கொள்ளையடித்து கொண்டேதான் உள்ளனர்.
இந்த வரிசையில் குஜராத் (Gujarat) மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள புனித தலங்களில் ஒன்றான துவாரகாவில் (Dwarka) காவல் துறையின் கார் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அந்த கார் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது!

கொள்ளையடிக்கப்பட்ட கார் மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) ஆகும். மோஹித் சர்மா என்ற நபர்தான் இந்த துணிகரமான காரியத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன் தினம் (வியாழன்) காலை 8.15 மணியளவில், துவாரகா நகரில் இருந்த ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு மோஹித் சர்மா வந்துள்ளார்.
கோயிலில் வழிபாடு நடத்த செல்கிறேன் என குடும்பத்தினரிடம் கூறி விட்டு, பைக்கில் அவர் வந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திற்குள் சென்ற அவர் மஹிந்திரா பொலிரோ காரை எடுத்து கொண்டு தப்பியுள்ளார். ஆனால் அதே நாள் மதியம் 2.30 மணிக்குள் அவர் பிடிபட்டு விட்டார்.

சுமார் 6 மணி நேரத்திற்குள்ளாக மோஹித் சர்மாவை பிடித்து, காவல் துறை தனது மரியாதையை காப்பாற்றி கொண்டுள்ளது. இடையில் மோஹித் சர்மா சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் எரிபொருள் நிரப்புவதற்காக எங்குமே காரை நிறுத்தவில்லை. ஏனெனில் எரிபொருள் முழுமையாக இருந்தது.
இந்த 200 கிலோ மீட்டர் தூர பயணத்தில், மோஹித் சர்மா பல்வேறு அட்டகாசங்களை செய்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட மஹிந்திரா பொலிரோ காருடன் செல்ஃபி எடுத்து, பல்வேறு சமூக வலை தளங்களில் பதிவிட்டதை இதற்கு ஒரு உதாரணமாக சொல்ல முடியும். மோஹித் சர்மா மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
போதாக்குறைக்கு அவருக்கு போதை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் வேறு இருக்கிறதாம். ஆனால் இந்த காரை கொள்ளையடித்த சமயத்தில், அவர் போதையில் இருந்தாரா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்தே கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், துவாரகா புனித நகரம் என்பதால், பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். எனவே அவசர சூழல்களின்போது, காவல் துறை ஊழியர்கள் கார்களை அடிக்கடி எடுத்து கொண்டு வெளியே செல்வார்கள். காவல் நிலைய அதிகாரியிடம் தகவல் சொல்லி விட்டுதான் காரை எடுத்து செல்ல வேண்டும்.
ஆனால் துவாரகா நகரில் அடிக்கடி கார்கள் வெளியே எடுத்து செல்லப்படும் என்பதால், அவரும் கவனிக்காமல் விட்டு விட்டார். உண்மையில் கார் வெளியே செல்வதை அவர் பார்த்துள்ளார். ஆனால் யார் ஓட்டி கொண்டு செல்கிறார்? என்பதை கவனிக்காமல் விட்டு விட்டார். இருப்பினும் காரை கொள்ளையடித்து சென்ற மோஹித் சர்மாவை நாங்கள் உடனடியாக கைது செய்து விட்டோம்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காரை கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் வந்தாரா? அல்லது சந்தர்ப்ப சூழல்களை பயன்படுத்தி காரை கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு திடீரென உருவானதா? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் இந்த காரை தனித்தனி பாகங்களாக பிரித்து விற்பனை செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்துள்ளது'' என்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் காவல் துறை வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக கர்நாடக (Karnataka) மாநிலத்தில் ஒரு முறை ஒரு கொள்ளையனால் காவல் துறைக்கு சொந்தமான மஹிந்திரா பொலிரோ கொள்ளையடிக்கப்பட்டது. காவல் துறை வாகனங்களை ஓட்டி பார்க்க வேண்டும் என்ற அந்த கொள்ளையனின் வினோதமான ஆசைதான் இதற்கு காரணம்.
இது போன்ற சம்பவங்கள் சற்று வேடிக்கையாக தெரிந்தாலும், ஆபத்தானவை. எனவே காவல் துறை அதிகாரிகள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பதற்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் மத்தியில் காவல் துறையின் மீது நம்பிக்கை பெருகும். இல்லாவிட்டால் காவல் துறை மீது கொண்டுள்ள நம்பிக்கையை பொதுமக்கள் இழக்க நேரிடலாம் என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








