இனமென பிரிந்தது போதும்... இளைஞரை ரவுண்ட் கட்டிய போலீஸார் - ஆதரவாக களத்தில் குதித்த பொது மக்கள்!!
காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த காவலரை இன்ஸ்பெக்டர் என்றும் பாராமல் தைரியமாக நடு ரோட்டில் நிறுத்தி இளைஞர் ஒருவர் நன்றாக கேள்வி கேட்டுள்ளார். இது தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோவை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எங்கே இந்த தரமான சம்பவம் நடந்துள்ளது என்பதை இனி பார்க்கலாம்.
கார் பயணங்களின் போது சீட் பெல்ட் அணிய வேண்டியது மிக அவசியமான ஒன்று. குறிப்பாக, நம் இந்தியா போன்ற சாலையில் எது எப்போது குறுக்கே வரும் என்பது தெரியாத நாட்டில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமானதாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. சீட் பெல்ட் அணியாததால் விபத்தில் பயணிகள் உயிரிழக்கும் துயர சம்பவங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

கடந்த ஆண்டில் கூட, டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் கார் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், சமீப காலங்களில் காரில் பின் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் கூட சீட் பெல்ட் அணிவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வுகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. அதேபோல், போலீஸாரும் சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் பொது மக்களுக்கு மட்டும்தானா... போலீஸார் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கலாமா? என பொது மக்களில் ஒருவர் போலீஸாரை பார்த்து ஆக்ரோஷமாக கேட்கும் சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளா மாநிலம் கன்னூரில் போலீஸார் சீட் பெல்ட் அணியாமல் காரில் வழக்கமான ரோந்து பணியில் வந்துள்ளனர்.

இதனை சாலை அருகே இருந்த இளைஞர் ஒருவர் கண்டுள்ளார். அந்த இளைஞர் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை, உடனடியாக போலீஸாரின் காருக்கு குறுக்கே வந்து காரை நிறுத்தியுள்ளார். அத்துடன், பொது மக்களுக்கு மட்டும் தான் சட்டமா? போலீஸாருக்கு இல்லையா? என காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த உயர் போலீஸ் அதிகாரியை பார்த்து கேள்வியெழுப்ப ஆரம்பித்துவிட்டார்.
இதில் கோபமடைந்த அந்த போலீஸ் அதிகாரி, "நீ யார் என்னை கேள்வி கேட்பது?" என மலையாளத்தில் கேட்டாலும், நமக்கு புரிகிறது. இந்த இளைஞரும் பின்வாங்குவது போல் இல்லை. தைரியமாக நடுரோட்டில் போலீஸார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இந்த வாக்குவாதத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த காவலர்களும் பின்னர் கலந்துக் கொள்வதை இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பார்க்க முடிகிறது.

பின்னர், போலீஸார் தங்களது வழக்கமான வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டனர். அதுதான், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது என்ற பிளா பிளா... பிளா. உடனடியாக காரில் இருந்து பேப்பரையும், பேனாவையும் எடுத்த போலீஸ்காரர் ஒருவர் இதுகுறித்த வழக்கை தன் கைப்பட எழுத ஆரம்பித்துவிட்டார். பின்னர், அந்த இளைஞரையும் கையெழுத்திட அவர்கள் வற்புறுத்துவதை வீடியோவில் காண முடிகிறது.
ஆனால், அப்போதுதான் ஓர் அதிசயம் நிகழ்கிறது. இனமென பிரிந்தது போதும்... மதமென பிரிந்தது போதும்... மனிதம் ஒன்றே தீர்வாகும் என்ற பாடலுக்கு ஏற்ப, இந்த சம்பவத்தை சுற்றி வேடிக்கை பார்த்தவர்கள் உடனே அந்த இளைஞருக்கு ஆதரவாக குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். இதில் பதறிப்போன போலீஸார், எப்படியோ அங்கிருந்து தங்களது வாகனத்தில் நழுவி சென்றுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் பயணத்திற்கு சீட் பெல்ட் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல், சமுதாயத்திற்கு குடிமக்கள் ஒற்றுமை மிக முக்கியமானது ஆகும். எப்போது உயர் அதிகாரம் படைத்தவர்கள் தவறு செய்கிறார்களோ அப்போது நாம் ஒன்றாய் இணைந்து கேள்விக் கேட்டால் மட்டுமே உரிய பதில் கிடைக்கும். கம்யூனிசம் சித்தாந்தம் ஊறிப்போன கேரளாவில் நடந்துள்ள இந்த சம்பவமும் அதை தான் கூறுகிறது.


Click it and Unblock the Notifications









