ஒருத்தரையும் போலீசார் விடல... இன்ஸ்டாகிராமில் பிரபலமாக நினைத்தவர் ஜெயிலில்!! ஆசை, ஆசையாய் வாங்கிய வாகனம்...
இன்ஸ்டாகிராம் மோகம் நாளுக்கு நாள் நம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல, யூடியூப் ரீல்ஸ் போன்றவற்றை பதிவிடவும் அதிக பேர் விரும்புகின்றனர். ஏனெனில், அதற்கேற்ப ரீல்ஸ் வீடியோக்களை மணி கணக்கில் பார்ப்பவர்களும் இருக்கின்றனர். வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு இணையாக, வீடியோக்களை பதிவிடுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், போட்டி அதிகமாகிவிட்டது. இதனால், வித்தியாசமான கான்செப்ட்களில் வீடியோக்களை பதிவிட வேண்டியுள்ளது. அந்த வகையில், ஆபத்தான முறையில் வாகனத்தின் மேற்கூரையில் நின்றுக் கொண்டு பயணம் செய்து அதனை வீடியோவாக வெளியிட்ட இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
பைக் வீலிங், கார் டிரிஃபிட், கார் ரேசிங் போன்றவற்றை நம் தமிழ்நாட்டில் அவ்வப்போது பார்க்கலாம். இவ்வாறான செயல்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பானது தான் என்றாலும், வாகனத்தின் மேற்கூரையில் நின்றுக் கொண்டு பயணம் செய்வது போன்ற செயல்களை நம் தமிழ்நாட்டில் காண முடியாது. இவ்வாறான செயல்களை வட இந்தியாவில்தான் பரவலாக காண முடியும்.

இதற்கு காரணம், பாலிவுட் திரைப்படங்களின் தாக்கம் ஆகும். வாகனத்தின் மேற்கூரையின் மீது நின்றப்படி பயணம் செய்வது போன்றவை கெத்து என பல வட இந்திய இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், திரைப்பட காட்சியை போன்று தாங்களும் செய்து பார்க்கின்றனர். அந்த வகையில், நெடுஞ்சாலையில் 2 மஹிந்திரா தார் வாகனங்களின் மேற்கூரையில் நின்றவாறு பயணம் செய்த இளைஞர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞரது பெயர் இஸ்மாயில் சௌத்ரி. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மஹிந்திரா தார் வாகனத்துடன் இவர் இருக்கும் வீடியோக்களும், படங்களும் நிறைய பதிவிடப்பட்டுள்ளன. அதில் ஒரு வீடியோவில், இரு மஹிந்திரா தார் வாகனங்களின் மேற்கூரை மீது நின்றப்படி இஸ்மாயில் சௌத்ரி பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் சுரங்க பாதைக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சுரங்க பாதைக்குள் கண்கவர் விளக்குகள் வரிசையாக உள்ளதால், இங்கு ரீல்ஸ் வீடியோ எடுத்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்து இஸ்மாயில் சௌத்ரி இவ்வாறான செயலில் ஈடுப்பட்டுள்ளார். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஹைவேயில், இரு தார் வாகனங்களை மெதுவாக இருவர் ஓட்டி செல்ல, அவற்றிற்கு மேலே ஸ்டைலாக கைகளை விரித்து நின்றப்படி, இஸ்மாயில் சௌத்ரி சென்றுள்ளார்.
கடந்த மே 17ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை ஆராய்ந்த போலீசார் வீடியோவில் தெரியும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை வைத்து உரிமையாளர்களை கண்டறிந்து, இஸ்மாயில் சௌத்ரியை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மஹிந்திரா தார் வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தின் வாசலில் இஸ்மாயில் சௌத்ரி அமர்ந்திருக்க, சுற்றிலும் போலீசார் நின்றிருக்கும் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஜாலாவார் போலீஸ் அதிகாரி ரிச்சா டோமர் பேசுகையில், "இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த துவங்கியுள்ளோம். காவல் நிலைய அதிகாரி கோட்வாலி சந்திரஜோதி சர்மா தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்ட அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
அதாவது, இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவோரை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலமாக அடையாளம் காணுவதை இந்த குழு நோக்கமாக கொண்டுள்ளது. மஹிந்திரா தார், இத்தகைய செயல்களில் ஈடுப்படுவர்கள் மத்தியில் பிரபலமான வாகனமாக விளங்குகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் இதேபோன்று, மஹிந்திரா தாரில் சில இளைஞர்கள் ட்ரிஃப்ட் செய்ய முயன்ற போது வாகனம் கவிழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டின் அனைத்து குடிமகனும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இவ்வாறான செயல்களினால், உங்களுக்கு மட்டுமின்றி, மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம். இதில் மேலும் நம்மை கவலைக்கு உள்ளாக்கும் விஷயம் என்னவென்றால், இவ்வாறான செயல்களை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிடுவதுதான். ஏனெனில், இதனை பார்த்து மேலும் சிலர் இவ்வாறான செயல்களில் ஈடுப்பட கூடும்.


Click it and Unblock the Notifications









