டீலரிடம் கொடுத்த பணத்தை கோர்டு உதவியுடன் திரும்ப பெறும் வாடிக்கையாளர்!! மொத்தம் ரூ.7.43 லட்சமாம்!
தேசிய நுகர்வோர் குறைத்தீர்க்கும் ஆணையம் சமீபத்தில் மனுதாரருக்கு ரூ.7.43 லட்சம் திருப்பி செலுத்த வேண்டும் என ஃபோர்டு டீலர் ஒருவருக்கு அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வாகன தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை சில்லறை வணிகமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுதான் டீலர்களின் முக்கிய பணி. தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து பத்திரமாக வாகனத்தை பெற்று வந்து எந்தவொரு சேதமும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு டீலர்கள் வழங்குகின்றனர்.

மற்ற இதர பணிகள் என்று பார்த்தால், விற்கப்பட்ட வாகனத்திற்கான பராமரிப்பு & சேவையினை தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதியுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது, வாகனத்தை வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பது, விற்கப்படும் வாகனங்களை சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்வது, வாகனத்தை டெஸ்ட் ட்ரைவ் கொடுப்பது மற்றும் இன்ஸ்சூரன்ஸிற்குள் வாகனத்தை கொண்டுவருவது உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

இதற்காக டீலர்ஷிப் மையங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கின்றன. இருப்பினும் இந்த தொகை போதாது என எண்ணும் டீலர்கள் விற்கப்படும் வாகனத்தில் மோசடி செய்து மாட்டிக்கொண்ட செய்திகளை இதற்கு முன் பார்த்துள்ளோம். இவ்வாறு தான் நாம் இந்த செய்தியில் பார்க்கும் ஃபோர்டு டீலரும் நீதிமன்ற வழக்கில் சிக்கி கொண்டுள்ளார்.

இந்த ஃபோர்டு டீலர் விற்கப்பட்ட வாகனத்தில் எந்த குளறுபடியையும் செய்யவில்லை. மாறாக வாகனத்தை விற்பனை செய்த போது வாடிக்கையாளருக்கு தவறான மைலேஜ் உத்தரவாதத்தை அளித்துள்ளார் என அவர் மீது NCDRC (நுகர்வோர் குறைத்தீர்க்கும் ஆணையம்)-இல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது கார் லிட்டருக்கு சராசரியாக 31 கிமீ மைலேஜை வழங்கும் என தனக்கு உறுதியளிக்கப்பட்டதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஃபோர்டு நிறுவனம் தேசிய செய்தித்தாள்களில் 31.4 கிமீ மைலேஜ் என்று விளம்பரங்களை வெளியிட்டதாகவும் வாடிக்கையாளர் தன் மனுவில் தெரிவித்துள்ளார். ஆனால் இவர் டேராடூனில் உள்ள ஏபி மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற டீலர்ஷிப் மையத்தில் இருந்து வாங்கியிருப்பதோ ஃபோர்டு ஃபீஸ்டா காராகும். இது 15 kmpl-இல் இருந்து 16 kmpl வரையிலான மைலேஜையே வழங்குவதாக புகார் கூறினார்.

இதனை விசாரித்த NCDRC, தயாரிப்பு நிறுவனம் & டீலர், வாங்கப்பட்ட வாகனம் திருப்பி அளிக்கப்பட்ட பின்பு வாடிக்கையாளருக்கு ரூ.7.43 லட்ச இழப்பீட்டு தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, மாநில ஆணையத்தில் ஃபோர்டு மேல்முறையீடு செய்தது.

ஆனால் ஃபோர்டின் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேநேரம் இழப்பீட்டு தொகையை செலுத்தும் பொறுப்பு டீலர் மீது தான் விழுந்தாலும், ஃபோர்டின் மறுசீராய்வு மனுவை NCDRC அனுமதித்தது. இவ்வாறு இந்த வழக்கு NCDRC மற்றும் மாவட்ட/ மாநில தீர்ப்பாயங்கள் என சுற்றி திரிந்து இறுதியில் டெல்லி உச்சநீதி மன்றத்தை சென்றடைந்தது.

உச்சநீதிமன்றத்தில் இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், NCDRC 2007, ஜூன் 20ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டதாக கூறப்படும் தவறான விளம்பரத்தை பதிவு செய்துள்ளது என்று கூறியது. ஆனால் இந்த வாடிக்கையாளர் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அதாவது 2007, மார்ச் 9ஆம் தேதி வாங்கியுள்ளார்.

புதியதாக விற்பனைக்கு வரும் பயணிகள் வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களின் மைலேஜ் அளவுகளாக தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவது அவற்றில் மிக அதிகப்பட்சமாக கிடைக்கும் மைலேஜ் அளவுகளை ஆகும். அதாவது ஒரு பைக் 40kmpl மைலேஜை வழங்கும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் கூறினால் அதற்கு மேல் நிச்சயமாக மைலேஜை பெற முடியாது.

இவ்வளவு ஏன், இந்த 40kmpl என்பதே வாகனத்தை வாங்கிய புதியதில் எப்போவாவது அபூர்வமாகவே கிடைக்கும். ஏனெனில் நிஜ உலகில் வாகனத்தின் மைலேஜை பாதிக்கக்கூடிய காரணிகள் ஏகப்பட்டவை உள்ளன. சோதனைகளின் மூலம் கிடைக்கும் மைலேஜ் அளவையே தயாரிப்பு நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது. இருப்பினும் அந்த சோதனைகளானது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் நடத்தப்படுகின்றன.

டேராடூனில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் சுமார் 14 வருடங்கள் பழமையானது. அப்போதில் இருந்து இது தொடர்பான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் நடைபெற்று வந்துள்ளன. தற்போது இந்தியாவை விட்டு வெளியேறவுள்ளதாக ஃபோர்டு அறிவித்துள்ளதால் இந்த வழக்கு இனி எவ்வாறு செல்லும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








