டூவீலரை ஓட்டிக்கொண்டே இந்த நபர் செய்த காரியத்தை பாருங்க... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ!
இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே ஒருவர் செய்துள்ள காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தொலைக்காட்சி சீரியல்களை பார்ப்பதில் பெண்கள் எப்போதும் வேற லெவல்தான். ஆனால் பெண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் ஆண்களும் தற்போது தொலைக்காட்சி சீரியல்களை அதிகமாக பார்க்க தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

வீட்டில் தொலைக்காட்சி சீரியல்களை பார்ப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதில் நாம் யாரும் தலையிட முடியாது. ஆனால் கோவையில் ஒருவர் பொது இடத்தில் சீரியல் பார்த்துள்ளார். அதுவும் தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே சீரியல் பார்த்துள்ளார். தற்போது இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்போன்களை வைப்பதற்கு என பிரத்யேகமாக ஸ்டாண்டு கிடைக்கிறது.

இதில் தங்களது செல்போன்களை பொருத்தி கொள்ளும் பலர் கூகுள் மேப்பை பார்த்து கொண்டே சென்று சேர வேண்டிய இடத்திற்கு செல்கின்றனர். ஆனால் இந்த நபர் அந்த ஸ்டாண்டில் செல்போனை பொருத்தி கொண்டு, சீரியல் பார்த்தபடியே தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் நடைபெற்றதாக தெரிகிறது. அவ்வழியே வந்த மற்றொரு வாகன ஓட்டி இந்த சம்பவத்தை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்து சமூக வலை தளங்களிலும் இந்த வீடியோதான் வைரலாக பரவி வருகிறது. கோவை காவல் துறையினரும் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

இரு சக்கர வாகனம் ஓட்டும்போது செல்போனில் சீரியல் பார்ப்பது விபத்திற்கு வழிவகுக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட நபரை பிடிக்கும் பணியில் காவல் துறையினர் உடனடியாக களமிறங்கினர். இறுதியில் அந்த நபரை பிடித்தும் விட்டனர். சீரியல் பார்த்து கொண்டே இரு சக்கர வாகனத்தை ஓட்டிய நபரின் பெயர் முத்துசாமி என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவருக்கு காவல் துறையினர் 1,200 ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர். பெண்கள்தான் சீரியல்களுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள் என்றால், அதற்கு இணையாக ஆண்களும், அதுவும் இரு சக்கர வாகனம் ஓட்டும்போதும் கூட சீரியல் பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அபாயகரமானது. சாலை விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளை இது அதிகரித்து விடும். நீங்கள் வாகனம் ஓட்டும்போது செல்போனில் வீடியோக்களை பார்த்து கொண்டே வந்தால், உங்களுக்கு மட்டுமல்லாது, சாலையில் பயணம் செய்யும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் ஆபத்து ஏற்படலாம்.
எனவே வாகனம் ஓட்டும்போது சாலையில் முழுமையாக கவனம் செலுத்துங்கள். அத்துடன் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுங்கள். அப்போதுதான் சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும். சிறு அலட்சியம் கூட பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடும் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








