ரயில் எஞ்சின் சக்கரங்கள் வழுக்குவதை சமாளிக்க ஓட்டுனர்கள் கையாளும் எளிய யுக்தி!!
ரயில் எஞ்சின் சக்கரங்கள் வழுக்கும் பிரச்னையை சமாளிக்க ரயில் ஓட்டுனர்கள் ஓர் எளிய வழியை கடைபிடிக்கின்றனர்.
ரயில்களில் இரும்பு சக்கரங்கள் பயன்படுத்தப்படுவதால் சில வேளைகளில் தண்டவாளத்துடன் போதிய பிடிப்பு கிடைக்காமல் சக்கரங்கள் வழுக்குவது அவ்வப்போது நிகழும் விஷயம்.

அதிக பாரம் கொண்ட பெட்டிகளை இழுக்கும்போதும், மேடான பகுதியை நோக்கி செல்லும்போதும் ரயில் எஞ்சின் சக்கரங்களுக்கும், தண்டவாளங்களுக்குமான பிடிப்புத்தன்மை இழந்து சக்கரங்கள் வழுக்கியபடியே இருக்கும்.

காய்ந்த மரைத் தழைகள், இலைகள் தண்டவாளங்களில் உதிர்ந்து, சக்கரங்களை வழுக்கச் செய்யும். தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கும்போது, மழை நேரத்திலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

இதனால், ரயில் முன்னோக்கிச் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. பொதுவாக ரயில் எஞ்சின்கள் பெட்டிகளை இழுக்கும்போது கொடுக்கப்படும் சக்தியானது அபரிதமாக செல்லும்பட்சத்தில் ரயில் சக்கரங்கள் பிடிப்புத் தன்மையை இழந்து வெறுமனே வழுக்க ஆரம்பித்துவிடும்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் ரயில் எஞ்சின்களில் ஸ்லிப் கன்ட்ரோல் என்ற சாதனத்தை பொருத்தினர். 1976ம் ஆண்டு இந்த சாதனத்தை கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்தினர். இந்த முறையில், ரயில் சக்கரங்கள் வழுக்கும் பிரச்னைக்கு ஓரளவு பலன் கிடைத்தது. இது சாதாரணமாக சமதளத்தில் இருந்த தண்டவாளங்களுக்கு பலன் கொடுத்தது.

முழுமையான பலன் தருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தது. இந்த நிலையில், ரயில் சக்கரங்களுக்கு அளிக்கப்படும் முறுக்குவிசையை கூட்டுவதற்கான டிராக்ஷன் கன்ட்ரோலர் சாதனங்களும் பொருத்தப்பட்டன. மேடான பகுதிகளை நோக்கி இயக்கும்போது, அதிகபட்ச வேகத்தில் எஞ்சின் இயக்கப்படும்.

எனினும், மிக ஏற்றமான மலைப்பகுதிகளில் ரயில் செல்லும்போது, அதிகபட்ச வேகத்தில் இயக்கினாலும், பாரம் மற்றும் ஈர்ப்பு விசை காரணமாக, எஞ்சின் வழுக்கும் பிரச்னை தொடர்ந்தது. இதற்கு ஓர் எளிய வழியை ரயில் எஞ்சின்களில் கொடுக்கப்படுகிறது.

ரயில் எஞ்சின்களின் மணல் நிரப்பப்பட்ட தொட்டி கொடுக்கப்படுகிறது. இந்த தொட்டியிலிருந்து இணைக்கப்பட்ட சிறிய குழாய் சக்கரங்களுக்கு அருகாமையில் பொருத்தப்பட்டு இருக்கும்.

ரயில் எஞ்சின் சக்கரங்கள் வழுக்கும்போது, ஒரு பட்டன் மூலமாக இயக்கும்போது அந்த தொட்டியிலிருந்து மணல் சிறிது சிறிதாக சக்கரங்களுக்கு முன் தண்டவாளத்தில் தூவப்படுகிறது.

அப்போது ரயில் சக்கரங்களுக்கு போதிய பிடிப்பு கிடைத்து மெல்ல ரயில் நகர்த்தப்படுகிறது. மேலும், சில ரயில் எஞ்சின்களில் சிறிய மூட்டையில் மணல் எடுத்துச் செல்லப்படும்.

ரயில் சக்கரங்கள் வழுக்கும்போது உதவி ரயில் ஓட்டுனர் இந்த மணலை சக்கரங்களில் கைகளால் தூவுவார். அப்போது ரயில் எஞ்சின் டிரைவர் மெதுவாக ரயிலை முன்னோக்கி இயக்குவார். இந்த சமயத்தில் ரயில் பின்னோக்கி செல்லாத வகையில், பிரேக்குகளும் பயன்படுத்தப்படும்.

இதுபோன்ற சமயங்களில் ரயில் தாமதமவது குறித்து ரயில் எஞ்சின் ஓட்டுனர் மற்றும் கார்டு வைத்திருக்கும் டியூட்டி புக்கில் பதிவு செய்யப்படும்.
Photo credit: Wiki Commons
ரயில் எஞ்சின் சக்கரங்கள் வழுக்கும்போது சேண்டர் என்ற மணல் தொட்டியிலிருந்து குழாய் வழியாக ரயில் எஞ்சின் சக்கரங்களுக்கு முன்னதாக தண்டவாளத்தில் மணல் தூவப்படுவதை வீடியோவில் காணலாம்.


Click it and Unblock the Notifications