வரும் டிசம்பர் 1 முதல் கட்டாயம்... இதுவரை எவ்வளவு பாஸ்ட்டேக்குகள் வினியோகிக்கப்பட்டுள்ளது தெரியுமா?
தற்போது வரை எவ்வளவு பாஸ்ட்டேக்குகள் வினியோகிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டோல்கேட் கட்டணத்தை வாகன ஓட்டிகள் ரொக்கமாக செலுத்தி செல்வதால், சில சமயங்களில் கால தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பது மட்டுமல்லாது, வாகனங்களின் தடையற்ற இயக்கத்தை உறுதி செய்வது மற்றும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பது உள்ளிட்ட முக்கியமான காரணங்களும் பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்படுவதன் பின்னணியில் உள்ளன. டிசம்பர் 1ம் தேதிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால், வாகன உரிமையாளர்கள் பாஸ்ட்டேக்கை பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.

இந்த சூழலில் தற்போது வரை 70 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்ட்டேக்குகள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று (நேற்று முன் தினம்) மட்டும் 1,35,583 பாஸ்ட்டேக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ஒரு சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ஒரே நாளில் இவ்வளவு அதிகமான பாஸ்ட்டேக்குகள் விற்பனை செய்யப்பட்டதில்லை.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தற்போது வரை 70 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்ட்டேக்குகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 26ம் தேதி ஒரே நாளில் 1,35,583 பாஸ்ட்டேக்குகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளில் வினியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கையில் இதுவே அதிகம். அதே சமயம் தினசரி வினியோகம் செய்யப்படும் பாஸ்ட்டேக்குகளின் அளவு 330 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஒரு நாளைக்கு சராசரியாக 8 ஆயிரம் பாஸ்ட்டேக்குகள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டன. ஆனால் 2019 நவம்பர் மாதம் ஒரு நாளைக்கு சராசரியாக 35,000 பாஸ்ட்டேக்குகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டோல்கேட்களில் பாஸ்ட்டேக்குகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் தொடங்கியது.

பாஸ்ட்டேக்கை வினியோகம் செய்யும் பணிகள் இதன்பின்பு வேகமெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடுவான டிசம்பர் 1ம் தேதிக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் உங்கள் வாகனத்திற்கு பாஸ்ட்டேக்கை பெற்று விட்டீர்களா? என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

முன்னதாக பாஸ்ட்டேக்கை இலவசமாக வழங்கும்படி ஒரு சில தனியார் வங்கிகளையும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற உத்தரவை மிகவும் கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவேதான் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








