இனி கார்ல ஒருத்தர் இந்த தப்ப செஞ்சாலும் ஓனர் சோலி முடிஞ்சுது! ரோட்ல போலீஸ் இல்லேனாலும் ஏஐ கேமரா கண்காணிக்கும்!
உலகில் போக்குவரத்து விதிமுறைகள் அதிகம் மீறப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் காரணமாக சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது. எனவே சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க இந்தியாவின் மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கார்களில் பயணம் செய்யும் அனைவரும் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான சமயங்களில் கார்களின் முன் பகுதியில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மட்டுமே சீட்பெல்ட் அணிகின்றனர். பின் பகுதியில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் சீட்பெல்ட் அணிவதில்லை.

பின் பகுதியில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் சீட்பெல்ட் அணிய தேவையில்லை என பலர் நினைக்கின்றனர். ஆனால் இது தவறு. காரில் பயணம் செய்யும் அனைவரும் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிய வேண்டும். இந்த விதிமுறையை இனி கடுமையாக அமல்படுத்த கர்நாடக மாநிலம் மங்களூர் காவல் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தற்போதைய நிலையில் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இது முதல் முறை செய்யும் விதிமுறை மீறலுக்கான அபராதம் ஆகும். இதை தவறை தொடர்ச்சியாக செய்தால், அபராத தொகை 2,000 ரூபாயாக உயர்ந்து விடும்.

ஆனால் இனி மங்களூர் நகரில் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்களிடம் இருந்து 2 மடங்கு அதிக அபராத தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி பார்த்தால், இனி கார்களில் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஏஐ கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
மங்களூர் நகரின் பல்வேறு இடங்களில் ஏராளமான ஏஐ கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. அவை கார்களை கண்காணித்து, துல்லியமான புகைப்படங்களை எடுக்கும். அந்த புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு, சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்தவர்கள் அமர்ந்திருந்த காரின் உரிமையாளருக்கு, அபராத ரசீது அனுப்பி வைக்கப்படும்.
காரில் உள்ள ஒருவர் சீட்பெல்ட் அணியாவிட்டாலும் கூட, காரின் உரிமையாளருக்கு 2 மடங்கு அபராத தொகை விதிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதன் காரணமாக மங்களூர் நகரில், கார்களில் சீட்பெல்ட் அணிந்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இது குறித்து மங்களூர் காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''கார்களில் பயணம் செய்யும் அனைவரும் சீட்பெல்ட் அணிவது கட்டாயம். இதை மீறும் நபர்களை ஏஐ கேமராக்கள் அடையாளம் காணும். அதன் பின் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் தங்களின் சொந்த பாதுகாப்பை மனதில் வைத்து, போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்'' என்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே, தவறுகள் குறையும். எனவே மங்களூர் காவல் துறையினர் முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் ஏஐ கேமராக்கள் போன்ற அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். தொழில்நுட்ப ரீதியாக தவறுகள் எதுவும் நடந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு காவல் துறை அதிகாரிகளுக்கு உள்ளது.
அதேபோல் சீட்பெல்ட் விதிமுறையை முறையாக பின்பற்ற பொதுமக்கள் தாங்களாகவே முன்வர வேண்டும். ஏனெனில் இது அவர்களின் சொந்த பாதுகாப்பு தொடர்புடையது. கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும்போது சீட்பெல்ட் அணிந்திருந்தால், உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








