ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்ற கார் ஓட்டுனர்!! வழக்குமேல் வழக்கு போட்டு தூக்கிய போலீஸார்!
தற்போதைய காலக்கட்டத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோக்களினால் தான் பெரும்பாலானோர் போலீஸாரிடம் சிக்குகின்றனர். அந்த அளவிற்கு இணையம் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறியுள்ளது.

இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், ஆம்புலன்ஸை வழி மறுத்தவாறு ஒருவர் தனது எர்டிகா காரை ஓட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து எர்டிகா கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் டக்ஷினா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-66 இல் கடந்த ஜூலை 19ஆம் தேதி மாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு அடி கூட நகர முடியாத கடுமையான போக்குவரத்து நெரிசலின்போதும் ஆம்புலன்ஸிற்கு வழிவிட முயற்சிக்க வேண்டும் என்பது மனிதநேயம் உள்ள அனைவரும் பின்பற்றும் விஷயமாகும்.

ஏனெனில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் ஏதேனும் ஒரு விஷயத்திற்காகவே சென்று கொண்டிருப்பர். ஆனால் ஆம்புலன்ஸ் ஒருவரது உயிரை காப்பாற்ற இயங்கி கொண்டிருக்கும். இருப்பினும் ஊருக்கு நான்கு பேர் மனிதநேயமற்று இருக்க தானே செய்வார்கள்.

அத்தகைய ஒருவரே தற்போது மங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நெடுஞ்சாலையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த ஆம்புலன்ஸை வழிமறிப்பது போல் ஓட்டியது அனைத்தையும் ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் வீடியோவாக படம் பிடித்துள்ளனர்.
அதனை சமூக வலைத்தளங்களில் பரப்ப விட்டு தற்போது அந்த எர்டிகா கார் ஓட்டுனருக்கு தண்டனையையும் வாங்கி கொடுத்துள்ளனர். கனாச்சுர் மருத்துவமனை செல்வதற்காக அந்த ஆம்புலன்ஸ் தேசிய நெடுஞ்சாலை 66-இல் சென்று கொண்டிருந்தது.

மாருதி சுஸுகி எர்டிகா காரை ஓட்டி வந்த 31 வயதான ஓட்டுனர் சரண் என்பவர் கும்பளா பைபாஸ் அருகே கைது செய்யப்பட்டுள்ளதாக மங்களூர் நகர தெற்கு போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஐபிசியின் பிரிவு 279 மற்றும் 1988 மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194(இ) ஆகியவற்றின் கீழ் பொது சாலையில் ஆக்ரோஷமாக வாகன ஓட்டியதற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் இதன் பிறகே இவர் இது மட்டுமில்லாமல் வழியில் ஆம்புலன்ஸை வழி மறித்தவாறும் ஓட்டி வந்துள்ளார் என்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதனால் சரணின் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவசரகால வாகனத்தின் செயல்பாட்டிற்கு இடையூறு விதித்ததற்காக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மங்களூர் நகர போலீஸ் கமிஷ்னர் என் சாஷி குமார் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ளவர் ஆல்கஹால் அல்லது வேறு ஏதேனும் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

மேலும், பொது மக்களிடம், அவசரகால வாகனங்களை சீராக செல்ல அனுமதிக்கவும் என வேண்டுகோள் ஒன்றையும் போலீஸ் கமிஷ்னர் விடுத்துள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், கார் ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அவருக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








