பொறுப்புடனும், பொதுநலத்துடனும் நடந்து கொண்ட ஓலா டாக்ஸி ஓட்டுநரின் நெகிழ்ச்சியுரச் செய்த கதை இது..!!
மனிதநேயமற்ற டிரைவர்களுக்கு மத்தியில் பொறுப்புடனும், பொதுநலத்துடனும் நடந்து கொண்ட டாக்ஸ் ஓட்டுநர் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
கறார் ஆக பணம் வசூல் செய்யும் டாக்ஸ் ஓட்டுநர்கள் மத்தியில் வித்தியாசமான மனிதநேயமிக்க கொள்கை கொண்டிருக்கிறார் ஓலா டாக்ஸி டிரைவர் ஒருவர்.

தனியாகச் செல்லும் பெண்களை பாலியல் ரீதியாக துண்புறுத்துவது, மீட்டருக்கு மேல் காசு கேட்பது, சரியான நேரத்திற்கு வராமல் இருப்பது, பில் தொகையை விட கூடுதல் தொகை வசூல் செய்வது, டிரிப்பை கேன்சல் செய்துவிடுவது என ஓலா கேப் ஓட்டுநர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் சமீபத்தில் அதிகரித்திருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் பெங்களூரு நகரில் இரவு நேரத்தில் தனியாகச் சென்ற ஒரு பெண்ணை ஓலா டாக்ஸி ஓட்டுநர் தவறான பாதையில் அழைத்துச் சென்று பாலியல் ரீதியில் துண்புறுத்தலில் ஈடுபட முயன்றது பெரும் பரபரப்பையும் ஓலா நிறுவனம் மீதான நம்பகத்தன்மையையும் மங்கச் செய்தன.

தொடர்ந்து ஓட்டுநர்களால் ஓலா நிறுவனம் அவப்பெயரை சம்பாதித்து வந்த நிலையில், பொறுப்பு, பொதுநலன் என இரண்டையம் கண்ணாகக் கொண்டு கடமையாற்றி சமூக வலைத்தளங்களில் பாராட்டைப்பெற்றிருக்கிறார் ஓலா டாக்ஸி ஓட்டுநர் ஒருவர்.

மங்களூரைச் சேர்ந்த காவ்யா ராவ் என்ற பெண், தன்னுடைய வயதான பெற்றோர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஓலா டாக்ஸி ஒன்றை புக் செய்துள்ளார். அது ஒரு பிரைம் செடன் வகை கார் ஆகும்.

குறித்த நேரத்தில் மிகச் சரியான முறையில் காவ்யாவின் பெற்றோரை பிக் அப் செய்யச் சென்ற ஓட்டுநர் சுனில், அவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் இறக்கிவிட்டுள்ளார். அவர்களின் பயணத்திற்கான கட்டணம் 140 ரூபாய் ஆகும்.

காவ்யாவின் தாயார் ஓலா டாக்ஸி ஓட்டுநர் சுனிலிடம் பயணத்திற்கான பணத்தை கொடுத்த போது சுனில் அதனை வாங்க மறுத்துள்ளார். பொதுவாக மருத்துவமனை பயணங்களுக்கு காசு வாங்குவது இல்லை என்றும், இது சமூகத்திற்கு தன்னாலான உதவியாக செய்துவருவதாகவும் அவர்களிடத்தில் அந்த ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த காவ்யாவின் பெற்றோர் மிகவும் வற்புறுத்தி கூறியும் அந்த ஓட்டுநர் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை. சரி பரவாயில்லை குறைந்தபட்சம் டீசல் செலவிற்கான தொகையாவது வாங்கிக்கொள்ளுமாறு கூறியும் கூட அவர் அதனை மறுத்துவிட்டு கிளம்பிச் சென்றுள்ளார்.

பணம் படைத்தவர்களே உதவி செய்ய முன்வராத காலத்தில், கறாராக காசு பார்க்கும் ஓட்டுநர்களுக்கு மத்தியில் நடுத்தர வருவாய் கொண்ட சுனிலின் நடவடிக்கை அந்த வயதான தம்பதியரை மிகவும் நெகிழ்ச்சியுறச் செய்துள்ளது.

இது குறித்து கேள்விப்பட்ட அந்த வயதான தம்பதியரின் மகளான காவ்யா ராவ் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார், இது தொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சம்பவத்தை விளக்கி பதிவு ஒன்றினை பதிந்துள்ளார். "ஓலா நிறுவனம் மீது தனிப்பட்ட முறையில் பல்வேறு புகார்கள் இருந்தாலும் இது ஒரு அற்புதமான நிகழ்வு" என்ற தலைப்பில் அந்த பதிவினை அவர் செய்துள்ளார்.

மனிதநேயத்துடன் நடந்து கொண்ட ஓலா டாக்ஸி ஓட்டுநர் குறித்த அந்தப் பதிவு சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், ஓட்டுநர் சுனிலிற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








