"தயவு செய்து இத மட்டும் செய்யாதீங்க" -வாகனங்களை பறிகொடுத்து நிற்கும் உரிமையாளர்கள் புலம்பல்...
விதிமீறியவர்களின் அனைத்து வாகனங்களைப் பறிமுதல் செய்யுமாறு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பணியில் இருந்த மற்ற காவலர்களிடத்தில் கூறும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவில் கொரோனா வைரல் பரவலின் இரண்டாம் அலை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் வெறும் ஆயிரக் கணக்கில் மட்டுமே பரவல் எண்ணிக்கைக் காணப்பட்டு வந்தநிலையில், தற்போது லட்சக் கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிப்படையத் தொடங்கியுள்ளனர்.

அதேசமயம், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 1,68,912 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 904 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுமட்டுமின்றி, தற்போது வரை கொரோனா பாதித்த 92 ஆயிரத்து 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோன்று வைரஸ் தனது தீவிர தன்மையைக் காட்டி வருவதால் இந்தியாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அதிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா உள்ளது.

இங்கு இரவு நேர பொதுமுடக்கம் மீண்டும் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு தொடங்கி விடியற்காலை 5 மணி வரை முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நேரங்களில் தேவையில்லாமல் மக்கள் வெளியில் வர வேண்டாம் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, அத்தியாவசியம் இன்றி வெளியில் வருவோர் மீது காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனடிப்படையில், கர்நாடகா மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான மங்களூருவில் மட்டும் 68 வாகனங்களைப் போலீஸார் போலீஸார் பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து வாகனங்களும் இரவு பொதுமுடக்கத்தை மீறியதன் காரணத்தினால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. உரிய ஆவணம் மற்றும் காரணங்களுடன் வெளியில் வருபவர்களை போலீஸார் எந்தவொரு நடவடிக்கையும் இன்றி மேற்கொண்டு செல்ல அனுமதித்து வருகின்றனர்.

நகரம் முழுவதிலும் 42க்கும் மேற்பட்ட செக்போஸ்டுகளை அமைத்து போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் அமைக்கப்பட்ட ஓர் செக்பாயிண்டிலேயே காவல்துறை முக்கிய அதிகாரி ஒருவர் அனைத்து வாகனங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக பறிமுதல் செய்யும்படி உத்தரிவட்டு செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
Image Courtesy: e mungaru
அதேசமயம், உரிய ஆவணம் இருக்கும் வாகனங்களை அறிவுருத்தி விட்டு அனுப்பி வைக்கும்படியும் அவர் கூறுகின்றார். இந்த நடவடிக்கையின் அதிகம் இருசக்கர வாகனங்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். அதாவது, தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் வாகனங்களில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்களாக மட்டுமே இருக்கின்றன.

தாங்கள் பணி முடித்துவிட்டு திரும்புவதாக அடையாள அட்டைக் காண்பித்த பின்னரும் காவலர்கள் தங்களின் நடவடிக்கை எடுத்திருப்பதாக, தங்களின் வாகனங்களை போலீஸாரிடத்தில் பறிகொடுத்து நிற்கும் உரிமையாளர்கள் புலம்பியுள்ளனர். குறிப்பாக, வாகனங்கள் சிறிதும் நகராத வண்ணம் தடுப்புகளை போலீஸார் அமைத்திருந்ததால் நகரத்தின் முக்கிய சாலைகள் வாகன நெரிசலில் சிக்கி தவித்தன என்றும் காவலர்கள் மீது நகரவாசிகள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

தற்போது கர்நாடகா மாநிலத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றில் பொதுபோக்குவரத்து வாகனங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவோர் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, கடைகள் வைத்திருப்போர் போலீஸாரின் கெடுபிடியால் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

பொதுமுடக்க நேரம் ஆரம்பிப்பதற்கு முன்னரே போலீஸாரால் கடையை அடைக்கும்படி தாங்கள் நிர்பந்திக்கப்படுவதாக புகாரை முன் வைத்திருக்கின்றனர். இருப்பினும், காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் வாகன உரிமையாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








