காமராசருக்கே சவால்விடும் எளிமை... 28 வருஷமா ஒரே காரை பயன்படுத்தியதற்கு காரணம் என்னவா இருக்கும்?
மன்மோகன் சிங் (Manmohan Singh), முன்னாள் இந்திய பிரதமர் மற்றும் பொருளாதார நிபுணர். சீக்கிய சமூகத்தில் இருந்து இந்திய பிரதமராக பதவி வகித்த ஒரே நபர் மன்மோகன் சிங் ஆவார். அதற்குமுன் 1991-96 காலக்கட்டத்தில் மத்திய நிதி அமைச்சராகவும் இருந்தவர். 2004இல் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் நாட்டிற்கென பல சிறப்பான திட்டங்களை கொண்டுவந்தவர் மற்றும் அதற்கடுத்து வந்த அரசாங்கத்திற்கும் நிலையான எதிர்காலத்தை ஏற்படுத்திவிட்டு சென்றவர். மத்திய அரசாங்கத்தின் முக்கியமான திட்டமாக பார்க்கப்படும் ஆதார் அட்டை (Aadhaar Card) இவரது யோசனையில் உருவானதே.
இத்தகைய தொலைநோக்கு சிந்தனை உடன் செயல்பட்டுவந்த மதிப்புமிகு திரு.மன்மோகன் சிங் நேற்று (டிசம்பர் 26) இரவு உடல்நல குறைவினால் இயற்கை எய்தினார். மூச்சு திணறல் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் (Delhi AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மன்மோகன் சிங் தன்னுடைய 92வது வயதில் காலமாகினார்.

மன்மோகன் சிங் மீது சிலருக்கு சில குற்றச்சாட்டுகள் இருந்தாலும், உண்மையில் அவர் காமராசரை போல மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார். 2014 ராஜ்ஜிய சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த போது தனது வருடாந்திர வருமானமாக மன்மோகன் சிங் குறிப்பிட்டது வெறும் ரூ.40 லட்சத்து 51,964 ஆகும்.
அசையும் சொத்துகள் ரூ.3.87 கோடி மதிப்பில் இருப்பதாகவும், அசையா சொத்துக்கள் ரூ.7.52 கோடி மதிப்பில் இருப்பதாகவும் அந்த வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்தார். அசையா சொத்து மதிப்பு கொஞ்சம் அதிகமாக இருப்பதற்கு காரணம், மன்மோகன் சிங்கிற்கு டெல்லியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அசையும் சொத்து விபரத்தில், தன்னிடம் மாருதி 800 (Maruti 800) கார் ஒன்று மட்டுமே உள்ளதாக அவர் குறிப்பிட்டு இருந்தது அந்த சமயத்தில் ஆச்சிரியமாக பார்க்கப்பட்டது.
ஏனெனில், இவ்வளவு பெரிய நாட்டையே ஆண்டவரிடம் ஒரேயொரு ஒரு கார், அதுவும் மாருதி 800 போன்ற அளவில் சிறியதான & விலை குறைவான கார் மட்டுமே உள்ளது எனும்போது அது பலரால் நம்பவே முடியவில்லை. இதை விட ஆச்சிரியம் என்னவென்றால், மாருதி 800 காரை 1996ஆம் ஆண்டில் மனைவி உடன் ஷோரூமுக்கு சென்று வாங்கிய மன்மோகன் சிங், தன்னுடைய இறப்பு வரையில் சுமார் 28 வருடங்களாக பத்திரமாக பாதுகாத்து, பராமரித்து வந்துள்ளார்.

2014 தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது மாருதி 800 காரின் அப்போதைய மதிப்பாக மன்மோகன் சிங் குறிப்பிட்டு இருந்தது ரூ.21,033 ஆகும். 1996இல் மன்மோகன் சிங் வாங்கியது மாருதி எம்800 கார் ஆகும். இந்தியாவின் மாருதியும், ஜப்பானின் சுஸுகி மோட்டாரும் ஒன்றாக இணைந்த பின் 1983இல் வெளிவந்த முதல் கார், எம்800 ஆகும்.
இத்தகைய சிறப்புமிக்க எம்800 காரை மன்மோகன் சிங் மட்டுமின்றி, கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கூட வைத்துள்ளார். 1980, 90 காலக்கட்டங்களில் பலரது ஃபேவரட் காராக மாருதி எம்800 விளங்கியது. இருப்பினும், அடுத்தடுத்து வந்த பாதுகாப்பு தரநிலைகளினாலும், மாசு உமிழ்வு விதிமுறைகளினாலும் 2010ஆம் ஆண்டு சமயத்தில் படிப்படியாக மாருதி 800 கார்களின் விற்பனை நிறுத்திக் கொள்ளப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் எளிமையான வாழ்க்கைக்கு சிறந்த உதாரணம், அவர் 28 வருடங்களாக பயன்படுத்திய அவரது மாருதி எம்800 கார் ஆகும். பிரதமராக இருந்த சமயத்தில் கூட தனக்கென பிரத்யேகமாக ஒரு கார் வேண்டுமென விரும்பாமல், அதற்குமுன் பிரதமராக இருந்த வாஜ்பாய் (Vajpayee) பயன்படுத்திய அதே பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series) காரை தனது அலுவலக பயன்பாட்டிற்காக மன்மோகன் சிங் பயன்படுத்தினார் என சொன்னால் நம்ப முடிகிறதா!!


Click it and Unblock the Notifications








