ஒரு ரயிலுக்கு 250 கோடி வருவாய் வழங்கும் சென்னை... ஆனால் லாபத்தை மோடி அள்ளி கொடுப்பது இவர்களுக்குதான்
சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்படும் ஒரு ரயில் மூலம் ரூ.250 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் இதன் பலனை மோடி யாருக்கு அள்ளி கொடுக்கிறார் என தெரிந்தால் நீங்கள் கோவப்படக்கூடும்.

இந்திய ரயில்வே இயக்கி வரும் ரயில்கள் மீது ஏராளமான புகார்கள் கூறப்படுகின்றன. கழிப்பிடம், குடிநீர், இருக்கை வசதிகள் முறையாக இல்லை, ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன, சரியான நேரத்திற்கு வருவதில்லை என இந்திய ரயில்கள் மீதான குற்றச்சாட்டு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் டிரெயின்-18 (Train 18). இந்தியாவின் முதல் அதிவேக ரயில் என்ற பெருமையை டிரெயின்-18 பெறுகிறது. டிரெயின்-18 ரயில், சோதனை ஓட்டத்தின்போது, மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து புதிய சாதனை படைத்தது.

சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில்தான் (ICF-Integral Coach Factory), டிரெயின்-18 ரயில் தயாரிக்கப்பட்டது. சென்னை ஐசிஎப் பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் வெறும் 18 மாதங்களில், டிரெயின்-18 ரயிலை தயாரித்துள்ளனர்.

டிரெயின்-18 ரயிலில் தனியாக இன்ஜின் இருக்காது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அதற்கு பதிலாக இதன் பெட்டிகளில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் உந்து சக்தியில்தான் டிரெயின்-18 ரயில் இயங்கும். இதன் காரணமாக டிரெயின்-18 ரயில் மிக விரைவில் வேகம் எடுக்கும்.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

ஆக மொத்தத்தில் மிக சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவதில், டிரெயின்-18 ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தானியங்கி கதவு, டிவி திரை, சொகுசான இருக்கை, சிசிடிவி கேமரா, ஏசி என பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர சுகாதாரமான கழிவறை உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் டிரெயின்-18 ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள டிரெயின்-18 அதிவேக சொகுசு ரயிலுக்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுதவிர உலக நாடுகள் பலவற்றின் கவனத்தையும் டிரெயின்-18 ரயில் ஈர்த்துள்ளது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள டிரெயின்-18 ரயிலை வாங்க உலகின் பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''சிங்கப்பூர், மலேசியா, பெரு, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் டிரெயின்-18 ரயிலை வாங்க மிகவும் ஆர்வமாக உள்ளன. அத்துடன் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள சில நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

இதுதவிர டிரெயின்-18 ரயிலை வாங்க வேண்டும் என்ற ஆர்வம், ஐரோப்பிய நாடுகளிடமும் காணப்படுகிறது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட டிரெயின்-18 ரயிலை வாங்க உலகின் பல்வேறு நாடுகள் போட்டி போடுவது பெருமையாக உள்ளது.

டிரெயின்-18 ரயில் மிகவும் குறைவான செலவில், அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டிருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். டிரெயின்-18 ரயிலில் பயணிப்பதன் மூலமாக பயண நேரம் 15 சதவீதம் வரை குறையும்'' என்றார்.

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில், டிரெயின்-18 ரயில் சுமார் ரூ.100 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் வெளிநாடுகளுக்கு ஒரு ரயில் 250 கோடி ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவிற்கு பெருமளவு லாபம் கிடைக்கும்.

அதிவேகம், அதிநவீன வசதிகள் மற்றும் வெளிநாடுகளிடம் இருந்து கிடைத்த அமோக வரவேற்பு உள்ளிட்ட காரணங்களால் டிரெயின்-18 ரயில் இந்தியாவின் பெருமையாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு ரயில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான்.

ஆனால் டிரெயின்-18 விஷயத்திலும், தமிழகம், தென் மாநிலங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வஞ்சித்து விடும் என தெரிகிறது. அதாவது அடுத்த 2 ஆண்டுகளில் தயாரிக்கப்படவுள்ள டிரெயின்-18 ரயில்களில் ஒன்று கூட தமிழகத்திற்கோ அல்லது தென் இந்தியாவிற்கோ கிடையாது என கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக அனைத்து டிரெயின்-18 ரயில்களும் வட இந்திய பகுதிகளில்தான் இயக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அடுத்த 2 ஆண்டுகளுக்கு தமிழகம் மற்றும் தென் இந்திய பகுதிகளில் டிரெயின்-18 ரயில் இயக்கப்படாது.

2 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட வட இந்திய பகுதிகளுக்கே முக்கியத்துவம் தரப்படும் என கூறப்படுகிறது. தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் போதிய அளவிற்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, சென்னையில் தயாரிக்கப்படும் டிரெயின்-18 ரயில் நமது பயன்பாட்டிற்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








