தென் துருவத்தில் சைக்கிளில் பயணித்த முதல் பெண் சாதனையாளர்!!
தென் துருவத்தில் சைக்கிளில் பயணித்த முதல் பெண்மணி என்ற பெருமையை இங்கிலாந்தை சேர்ந்த மரியா லீஜெர்ஸ்டாம் பெற்றுள்ளார். அண்டார்டிகாவின் ராஸ் ஐஸ் செல்ஃப் என்ற இடத்திலிருந்து சுமார் 650 கிமீ தூரத்துக்கு மிக மோசமான சீதோஷ்ண நிலைகளில் அவர் சைக்கிளில் கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜூவான் மெண்டிஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த டேனியல் பர்டன் ஆகியோரும் மரியாவுடன் பயணித்தனர். ஆனால், மரியாதான் தனது பயண இலக்கை முதலாவதாக கடந்தார். தென் துருவத்தில் பயணிப்பதற்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ட்ரை சைக்கிளை அவர் பயன்படுத்தினார்.

விசேஷ ட்ரை சைக்கிள்
மரியாவுக்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ட்ரை சைக்கிளுக்கு போலார் சைக்கிள் என்று பெயரிட்டிருந்தனர். இங்கிலாந்தை சேர்ந்த Inspired Cycle Engineering நிறுவனம் அந்த சைக்கிளை வடிவமைத்துக் கொடுத்தது. டிரிக்கி எனப்படும் சாதாரண சைக்கிளில் பல்வேறு மாறுதல்களை செய்திருந்தனர்.

சைக்கிள் பாகங்கள்
போலார் ட்ரை சைக்கிளில் விமானங்களில் பயன்படுத்தப்படும் தரத்திற்கு இணையான உலோக பாகங்களை பயன்படுத்தியுள்ளனர். மேலும், பனித் தரைகளில் எளிதாக செல்லும் தகவமைப்பு கொண்ட 4.5 இஞ்ச் டயர்களும் பொருத்தப்பட்டப்பட்டிருந்தது. இந்த டயர்கள் மிக சிறப்பான தரைப் பிடிப்பு கொண்டதாகும்.

பல சவால்கள்
தென் துருவத்தில் 80 கிமீ வேகத்தில் வீசிய பனிக் காற்று, திடீரென உருவாகும் பனிக் குன்றுகள் உள்ளிட்ட மிக மோசமான சீதோஷ்ண நிலைகளை கடந்து தனது பயணத்தை 12 நாட்களில் நிறைவு செய்தார். தினமும் ட்ரை சைக்கிளில் சராசரியாக 40- 60 கிமீ வரை சராசரியாக பயணித்துள்ளார்.

வசதி
சரிவான பனிக் குன்றுகள் மற்றும் வழுக்கு பனிப் பாறைகளில் டிரிக்கி சைக்கிள் மிகச் சிறப்பாக ஒத்துழைத்தாக மரியா தெரிவித்தார். மேலும், முதல் 5 நாட்கள் மிக கடுமையாக இருந்தது என்றும், வானிலையை கணிக்க முடியாமல் திணறியதாகவும் கூறியுள்ளார்.

சாதனை
கடைசி நாளன்று தன்னுடன் வந்த இரு சாகச வீரர்களை விட சில கிமீ தூரம் மரியா முன்னே சென்று இந்த சாதனையை படைத்துள்ளார். அவர்கள் சாதாரண சைக்கிளையும், பைக்கையும் பயன்படுத்தி வந்தனர். அதைவிட மரியா பயன்படுத்திய ட்ரை சைக்கிள் அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்த புதிய சாதனைக்கு உதவியதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








