ரோட்ல ஒரு வாகனமும் கிட்ட நெருங்கல! லாரி வாடகை மிச்சம்... மாருதி 800 கார்கள் எல்லாம் இன்னும் ஓடுதா?
மாருதி 800 (Maruti 800), இந்தியாவின் தேசிய கார் என அறிவிக்கும் அளவிற்கு ஒரு சமயத்தில் மக்கள் நிறைய பேர் போட்டி போட்டு வாங்கிய கார். இப்போது விற்பனையில் இல்லாவிடினும், தற்போதும் நிறைய பேர் மாருதி 800 காரை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு பழமையான மாருதி 800 காரை பயன்படுத்தி வரும் ஒருவர் தனது காரில் சுமார் 24 பிளாஸ்டிக் பேரல்களை (Barrel) கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ, மாருதி 800 காரின் சுமக்கும் திறனை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருந்தாலும், இந்த மாருதி 800 கார் டிரைவரின் செயலுக்கு பல தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
மாருதி 800 காரை மக்கள் நிறைய பேர் வாங்கியதற்கு முக்கியமான காரணம், அதன் காம்பெக்ட்டான உடலமைப்பாகும். இதனால் குறைந்த விலையில் இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனத்தால் விற்க முடிந்தது. மேலும், மாருதி 800 கார்களின் நீடித்து உழைக்கும் ஆயுட்காலமும் அதிகம். மற்றும் பராமரிப்பு செலவும் பெரியதாக இருந்ததில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமாக, எடை குறைவான கார் என்பதால் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக மைலேஜை மாருதி 800 கார்கள் வழங்குகின்றன.

இவை எல்லாம் சேர்ந்துதான், நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள மக்களை மாருதி 800 கார் பக்கம் படையெடுக்க வைத்தது. என்னதான், மாருதி 800 காரின் திறன் அதிகமாக இருந்தாலும், சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை மறந்து செயல்பட கூடாது. ஆனால், இங்கு ஒரு மாருதி 800 கார் டிரைவர் அவை எல்லாவற்றையும் மறந்து செயல்பட்டுள்ளார். பரபரப்பான சாலையில், காரின் மேற்கூரையில் ஒரு பலகையை அமைத்து, அதன்மீது 24 பேரல்களை ஒன்றன்மீது ஒன்றாக கட்டி வைத்து கொண்டு சென்றுள்ளார்.
காரின் நீளத்தையும், உயரத்தையும் காட்டிலும், இந்த பேரல் செட்-அப் பிரம்மாண்டமாக உள்ளது. இதனால், சாலையில் செல்லும் அனைவரது கவனமும் இந்த மாருதி 800 கார் மீதுதான் இருந்தது. மேற்கூரையில் 24 பிளாஸ்டிக் பேரல்கள் மட்டுமில்லாமல், காருக்குள் 1 பேரல் என இந்த சிறிய அளவிலான மாருதி 800 காரில் மொத்தம் 25 பேரல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சாலையில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை வைத்து பார்க்கும்போது இந்த சம்பவம் மஹாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. இந்த மாருதி 800 கார் மீது அடுக்கப்பட்டிருப்பவை பிளாஸ்டிக் பேரல்களாக இருந்தாலும், அவற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நிச்சயமாக அதிக எடையை கார் சுமந்து சென்றுள்ளது. இதனை காட்டிலும், இந்த செயலில் உள்ள ஆபத்து என்னவென்றால், வாகனத்தின் அளவு ஆகும்.
அதாவது, பேரல்கள் அடுக்கப்பட்டு இருப்பதால் காரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், சாலையில் செல்லும்போது விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பேரல்கள் அனைத்தும் இறுக்கமாக கட்டப்பட்டுள்ளன என்றாலும், அதிக காற்று வீசும் சாலையில் செல்லும்போது ஏதேனும் ஒரு பேரல் கழன்று விழுந்தால் கூட மற்றவை அனைத்தும் தானாக கீழே விழ ஆரம்பித்துவிட்டோம். அப்படி மட்டும் நடந்தால், காருக்கு பின்னால் வரும் வாகனங்கள் அனைத்தும் விபத்தில் சிக்க நேரிடும்.

இதற்கு ஏற்றவாறு, இந்த மாருதி 800 கார் டிரைவர் அதிவேகமாக சென்றுள்ளார். இதனால், கார் வளைவுகளில் திரும்பும்போது, பேரல்கள் ஒருபக்கமாக சாய்வதையும், இதற்கு பயந்து மற்ற வாகன ஓட்டிகள் இந்த மாருதி 800 கார் அருகே செல்ல அஞ்சுவதையும் இதுகுறித்த வீடியோவில் காணலாம். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், "போலீசார் பிடித்தால், மாருதி 800 காரின் விலையை காட்டிலும் அதிக தொகையில் அபராதத்தை விதிப்பர்" என நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார்.
மாருதி 800 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், விற்பனை நிறுத்தப்பட்ட சமயத்தில் இதன் விலை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.38 லட்சமாக இருந்தது. இது அந்த சமயத்திலும் குறைவான விலையாகும். இவ்வளவு குறைவான விலைக்கு காரணம், மாருதி 800 காரில் அளவில் சிறியதான 796சிசி என்ஜின் பொருத்தப்பட்டது. மாருதி 800 காரின் இடத்தை நிரப்பும் பொருட்டே மாருதி ஆல்டோ கார் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹாராஷ்டிராவில் நடந்துள்ள இந்த நிகழ்வு முற்றிலும் கண்டிக்கத்தக்கது ஆகும். ஏனெனில், ஒருவேளை விபத்து நடந்தால் அது இந்த மாருதி 800 காருக்கு மட்டுமின்றி, பின்னால் வரும் அனைத்து வாகனங்களுக்கும் பெரிய பிரச்சனையாக முடிந்துவிடும். இவ்வாறு அளவுக்கடந்த பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் மாருதி 800 டிரைவரை சாலையில் ஒருவர் கூட இடைமறித்து கேள்வி கேட்காதது ஆச்சிரியமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









