இந்த ஆல்டோ காரை ரெட்மி செல்போன் வாயிலாக கன்ட்ரோல் செஞ்சுக்கலாம்! வாயை பிளக்காதீங்க இன்னும் நிறைய இருக்கு!
மாருதியின் ஆல்டோ கார் டிரைவரே இல்லாமல் இயங்குமா? என்ன இந்த காரை செல்போன் வாயிலாக ஓட்டிக் கொள்ள முடியுமா? இந்த அனைத்தையும் செய்யக் கூடிய காராகவே ஆல்டோவை மாற்றி இருக்கின்றார் இந்தியர் ஒருவர். இந்த மாற்றம் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியர்களின், குறிப்பாக, பட்ஜெட் கார் காதலர்களின் பிரியமான கார் மாடலாக மாருதி சுஸுகியின் ஆல்டோ இருக்கின்றது. இதன் விலைக் குறைவு, பராமரிப்பு செலவும் மிக மிக குறைவே. மேலும், அதிக மைலேஜையும் இந்த கார் வாரி வழங்கும். இந்த காரணத்தினால் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஆல்டோ முன்னணியில் உள்ளது.

இந்த காரை விலை குறைவாக விற்பனைக்கு வழங்க வேண்டும் என்கிற காரணத்திற்காகவே நவீன கால அம்சங்களை மிகவும் குறைவாகவே ஆல்டோவில் வழங்கி இருக்கின்றது, மாருதி சுஸுகி. அத்தியாவசிய தேவைகளுக்கான அம்சங்களை மட்டுமே இந்த காரில் அது வழங்கி இருக்கின்றது. ஆகையால், ஆடம்பர கார்களில் காணப்படும் நவீன கால அம்சங்களை இந்த காரில் பார்க்க முடியாது.
இந்த மாதிரியான சூழலிலேயே ஆல்டோ கார் மாடல் ஒன்று டிரைவரே இல்லாமல் இயங்கும் திறனைப் பெற்றிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ரெட்மி நோட்9 ப்ரோ செல்போன் ஒன்று இருந்தால், அதன் வாயிலாக அக்காரைக் கன்ட்ரோல் செய்துக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகின்றது.
இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகிக் கொண்டு இருக்கின்றது. இது எப்படி சாத்தியம் ஆகும் என்பதே பலரின் கேள்வியாக மாறி இருக்கின்றது. ஆனால் மாடிஃபிகேஷன் வாயிலாக இது சாத்தியமே ஆகும். ஆமாங்க, மாருதி சுஸுகி ஆல்டோ மாடிஃபிகேஷன் வாயிலாக டிரைவரே இல்லாமல் இயங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது.
சமீபத்தில்கூட கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டொயோட்டா இன்னோவா காரை டிரைவர் தேவைப்படா வாகனமாக மாற்றி இருந்தார். சோதனை ஓட்டத்தின் அடிப்படையிலே இந்த காரை அவர் தயார் செய்துள்ளார். இந்த நிலையிலேயே ஆல்டோ சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த காரை தயார் செய்தவர் மன்கரன் சிங் ஆவார்.

இவர் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆர்வலர் ஆவார். தன்னுடைய இந்த ஆர்வத்தின் வாயிலாகவே அவர் ஆல்டோ கே10 தானியங்கி வாகனமாக மாற்றி இருக்கின்றார். மன்கரன் சிங், இவரே ஃப்ளோ டிரைவ் (FlowDrive) நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இந்த காரை தானியங்கி வாகனமாக மாற்றுவதற்கு என்று தனி ஓபன் பைலட் எனும் மென்பொருளை அவர் தயார் செய்திருக்கின்றார்.
இதனை ரெட்மி நோட் ப்ரோ-விலும் இன்ஸ்டால் செய்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக இந்த காரை செல்போனை ரிமோட்டாக பயன்படுத்தி இயக்கிக் கொள்ள முடியும். இதுமட்டுமில்லைங்க, இந்த காரை தானியங்கி வாகனமாக மாறுவதற்காக எலெக்ட்ரிக்கல்லி அசிஸ்ட் செய்யக் கூடிய ஸ்டியரிங்கையும் அவர் சேர்த்திருக்கின்றார்.
இந்த அம்சமே காரை டிரைவரே தேவைப்படாத வாகனமாக மாற்றி இருக்கின்றது. இத்துடன், மோட்டாரை கன்ட்ரோல் செய்வதற்கான கருவிகளும் இந்த காரில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, காரில் கண்களைபோல் இருந்து செயல்படும் விதமாக கேமிராக்கள் சென்சார் வசதியுடன் பொருத்தப்பட்டு இருக்கின்றது. மனிதனின் கண்கள்கூட பார்வைகூட கவன சிதறல் காரணமாக இலக்கை மாற்றலாம்.
ஆனால், இந்த கேமிராக்கள் தன்னுடைய துள்ளியமான பார்வை திறன் வாயிலாக சாலைக் கண்கானித்து அதற்கேற்ப செயல்படும். இவற்றுடனேயே காரின் பெடல்களைக் கன்ட்ரோல் செய்வதற்கான அசிஸ்ட் கருவிகளும் ஆல்டோவில் சேர்க்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் மன்கரன் சிங்கால் தயார் செய்யப்பட்டவையே ஆகும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தானாக இயங்கும் திறன் கொண்ட கார்கள், அதாவது, டிரைவர் தேவைப்படா வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இப்போது ஆளும் அரசு இந்த வகை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்தால் நாட்டில் உள்ள வாடகை வாகன ஓட்டுநர்கள் தொழில் பாதிக்கும் என்கிற காரணத்திற்காக அவற்றிற்கு அனுமதி வழங்க மாட்டோம் உறுதி அளித்துள்ளன. அதேவேளையில், தனி நபர் பயன்பாட்டிற்கு இந்த வகை கார்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








