மாருதி ஜிப்ஸியா இருந்தாலும் இப்படியா!! ஜம்மூ காஷ்மீரில் இராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்ட சுற்றுலா பயணிகள்!
4 சுற்றுலா பயணிகளுடன் சென்ற மாருதி ஜிப்ஸி வாகனம் ஆர்பரித்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்டு, பின்னர் இராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் தற்சமயம் கோடைக்காலம் முடியும் தருவாயில் உள்ளதால், இயற்கை வளங்கள் செழித்த ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் வரத்து கடந்த சில வாரங்களாக அதிகமாக இருந்து வருகிறது. இதனாலேயே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஆற்றிலோ அல்லது மணல் குன்றுகளிலோ சிக்கிக்கொள்ளும் சம்பவங்களை சமீப நாட்களாக அடிக்கடி பார்த்து வருகிறோம்.

சமீபத்தில் கூட, லடாக் பகுதியில் டெல்லியை சேர்ந்த தம்பதியின் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மணல் பரப்பில் சிக்கிக்கொண்டதை பற்றி பார்த்திருந்தோம். வாகனத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதால் இதில் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு அதிரடியாக ரூ.50,000-ஐ அபராதமாக லடாக் போலீஸார் விதித்திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது ஜம்மூ-காஷ்மீரில் சோனாமார்க் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

4 பயணிகளுடன் பயணித்த மாருதி ஜிப்ஸி வாகனம் சோனாமார்க்கில் உள்ள சிந்த் நதியில் சிக்கிக்கொண்டுள்ளது. இதற்கு முந்தைய சம்பவத்திலாவது உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அந்த ஃபார்ச்சூனர் கார் மீட்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் அபாயகரமான ஆர்பரித்து ஓடும் ஆறு என்பதால், இந்திய இராணுவத்தின் உதவியை நாடியுள்ளனர். இதுகுறித்து இணையத்தில் வைரலாகிவரும் வீடியோவினை கீழே காணலாம்.
உண்மையில் சிந்த் நதியில் இராணுவத்தின் வாகனத்தை தவிர்த்து வேறெந்த வாகனமும் செல்ல முடியாத அளவிற்கு நீர் ஆர்பரித்து செல்வதை இந்த வீடியோவில் காணலாம். ஒருவேளை, சுற்றுலா பயணிகளின் மாருதி ஜிப்ஸி வாகனம் செல்லும்போது இந்த அளவிற்கு நீர் வரவில்லையோ என்னவோ. ஆனால் எப்படியிருந்தாலும், ஜம்மூ-காஷ்மீர் போன்ற இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியில் இவ்வாறு ஆற்றில் வாகனத்தை இறக்கி பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாததே.

இந்த வீடியோவில், இராணுவத்தின் லாரி நிற்பதை வைத்தும், கற்கள் வெளியே தெரிவதை வைத்தும் பார்க்கும்போது ஆற்றில் அவ்வளவாக ஆழம் இல்லாத போன்றே தோன்றுகிறது. இதே நினைப்பில்தான் இந்த 4 சுற்றுலா பயணிகளும் தங்களது ஜிப்ஸியை ஆற்றில் இறக்கியிருப்பர். ஆனால் இந்த வீடியோவில் நீங்கள் நன்றாக உற்று கவனித்து பார்த்தீர்களேயானால், ஜிப்ஸியின் பின்பகுதி சற்று சாய்வாகவும், பின் சக்கரங்களை முழுவதுமாக மூழ்கடிக்கும் அளவிற்கு ஆற்றின் நீர் செல்வதையும் காணலாம்.

இதன் காரணமாக வாகனத்திற்குள் நீர் புகுந்து மறுபக்கம் வெளிவருகிறது. அப்படியென்றால், அந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஆழம் சற்று அதிகமாக உள்ளது. இதனை வாகனத்திற்குள் இருந்து ஓட்டுனர் அடையாளம் காணுவது என்பது முடியாத காரியம். இதனாலேயே ஆறுகளில் கண்மூடித்தனமாக வாகனத்தை இறக்காதீர்கள் என்று கார் ஆர்வலர்களும், போலீஸாரும் தெரிவிக்கின்றனர்.

ஆற்றை கடந்தே தான் ஆக வேண்டுமெனில், அசம்பாவிதம் ஏற்பட்டாலும் உடனடியாக உதவி கிடைக்கும்பட்சத்தில் வாகனத்தை இறக்கலாம். அப்போதும் ஆற்றில் நீர்வரத்தின் நிலையையும், ஆழத்தையும் முன்கூட்டியே அறிதல் அவசியம். ஆனால் ஜம்மூ-காஷ்மீர் போன்ற உதவிகள் உடனடியாக கிடைக்காத, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இவ்வாறு வாகனத்தை இறக்குவது முற்றிலுமாக தவறானது.

குறைந்தப்பட்சம் ஆற்றில் எந்தெந்த பகுதிகளில் ஆழம் அதிகமாக உள்ளது என்பதை அறிய ஒருவரை வாகனத்துடன் கயிற்றை கட்டி முன்னால் அனுப்பியிருக்கலாம். இந்த சம்பவத்தில் ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், 4 பயணிகளும் பயத்தில் வாகனத்திற்குள்ளேயே இருந்துள்ளனர். பின்னர் அவர்களை ஒருவர்பின் ஒருவராக கிரேனின் உதவியுடன் இராணுவத்தினர் மீட்பதை மேலுள்ள வீடியோவில் காணலாம்.

இந்த விஷயத்தில் சுற்றுலா பயணிகள் செய்த ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், மாருதி ஜிப்ஸி போன்ற ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் ஏற்ற வாகனத்தை ஆற்றில் இறக்கியதே ஆகும். வேறெந்த சாதாரண சாலைக்கான காராக இருப்பின், ஆற்றில் இறக்கிய சில வினாடிகளிலேயே ஆஃப்-ஆகி இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. மாருதி ஜிப்ஸியில் இத்தகைய கரடு முரடான பாறாங்கற்களை கொண்ட ஆற்றை கடக்க இயலும். ஆனால் அதற்கு நிறைய ஓட்டுனர் திறன்கள் தேவை.

இதற்கு முன் நாம் பார்த்த சம்பவங்களில் எல்லாம் பயணிகள் தங்களது வாகனங்களின் திறன்களை அதிகமாக மதிப்பிட்டு இருந்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் வாகனம் என்னமோ சரியாகவே இருந்தது, ஆனால் சுற்றுலா பயணிகள் தங்களது ஓட்டுனர் திறன்களை அதிகமாக மதிப்பிட்டுவிட்டனர். ஆதலால் இவ்வாறான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு செல்கிறீர்கள் எனில், அனுபவம் வாய்ந்த ஒருவரை கூடவே அழைத்து செல்தல் அவசியமாகும்.


Click it and Unblock the Notifications








