லைசன்ஸ் இனி அவ்வளவு ஈஸியா கிடைக்காது! தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதை செய்து கொடுத்த மாருதி சுஸுகி!
மாருதி சுஸுகி இந்தியா (Maruti Suzuki India) நிறுவனமும் தமிழ்நாடு அரசும் இணைந்து தன்னிச்சையாக செயல்படும் ஏழு ஓட்டுநர் தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அமைத்துள்ளன. இந்த மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நம்பர் ஒன் நிறுவனமான மாருதி சுஸுகியும் மற்ற தனியார் நிறுவனங்களை போல சமூக சேவைகளை செய்து வருகிறது. மத்திய அரசின் உதவியுடன் செயல்படுவதால், மாருதி சுஸுகியின் சமூக சேவைகள் கொஞ்சம் அதிகமாகவே உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். அதில் ஒரு பகுதியே இந்த தன்னிச்சையாக செயல்படும் ஓட்டுநர் தேர்வு மையங்கள் ஆகும்.

இந்த ஏழு புதிய மையங்கள் மூலம், தமிழ்நாட்டில் 10 தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்களை அமைக்கும் மாருதி சுஸுகியின் திட்டம் நிறைவேறியுள்ளது. மாருதி சுஸுகி மற்றும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மாநிலம் முழுவதும் 10 ஓட்டுநர் தேர்வு மையங்களை தானியங்கி (Automated) முறையில் செயல்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட 150 நாட்களுக்குள் அனைத்து 10 மையங்களும் தானியங்கி மயமாக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் இரு சக்கர வாகனம் மற்றும் இலகு ரக மோட்டார் வாகனங்களுக்கான உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்குப் பயன்படும். மத்திய சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மதுரை (வடக்கு), சிவகங்கை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி (மேற்கு) ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களில் இந்த ஏழு தானியங்கி தேர்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் உள்ள மூன்று மையங்கள் ஏற்கனவே முழுமையாகச் செயல்படத் தொடங்கிவிட்டன. இந்த தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்கள், உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள், RFID சென்சார்கள், முக அடையாளம் காணும் தொழில்நுட்பம், நிகழ்நேர பகுப்பாய்வு மற்றும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப அமைப்பு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய ஏழு மையங்களுடன் சேர்த்து, மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது எட்டு மாநிலங்களில் 56 தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்களை அமைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 17, டெல்லியில் 14, தமிழ்நாட்டில் 10, பீகாரில் 7, உத்தரகாண்டில் 4, ஹரியானாவில் 2, சத்தீஸ்கரில் 1 மற்றும் ஜம்மு காஷ்மீரில் 1 என இந்த மையங்கள் அமைந்துள்ளன.
மேலும், ராஜஸ்தானில் 21 மையங்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 4 மையங்களுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் மாருதி சுஸுகியின் மொத்த தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்களின் எண்ணிக்கையை 81 ஆக உயர்த்தும். இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 1.77 லட்சம் சாலை விபத்து இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதனை குறைக்க, தானியங்கி தேர்வு மையங்கள் தவிர, மாருதி சுஸுகி நிறுவனம் மாநில அரசுகளுடன் இணைந்து எட்டு ஓட்டுநர் மற்றும் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனங்கள் (IDTRs) மற்றும் 23 சாலை பாதுகாப்பு அறிவு மையங்களை (RSKCs) இயக்கி வருகிறது. மாருதி சுஸுகியின் விரிவான சாலை பாதுகாப்புத் திட்டத்தில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) திட்டங்கள் மற்றும் கமர்ஷியல் வாகன ஓட்டுநர்களுக்கு முதல் உதவி பயிற்சி வழங்குவது போன்றவையும் அடங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும், நாட்டின் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓட்டுநர் நடைமுறைகளை ஊக்குவிப்பதும், கடுமையான ஓட்டுநர் மதிப்பீட்டை உறுதி செய்வதும் மிகவும் முக்கியம். இதற்காக மாருதி சுஸுகி கொண்டுவரும் இந்த தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்கள் தரப்படுத்தப்பட்ட, தொழில்நுட்ப அடிப்படையிலான மற்றும் ஒருபக்கச் சார்பற்ற ஓட்டுநர் உரிமத் தேர்வு செயல்முறையை உறுதி செய்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, தேர்வு முடிவுகள் மனிதத் தலையீடு இல்லாமல் தானாகவே உருவாக்கப்படுகின்றன, இது மத்திய மோட்டார் வாகன விதிகள் (CMVR) படி செயல்படுகிறது.


Click it and Unblock the Notifications








