ஆப்போசிட்ல ஏறி வந்து ஓவரா பேசன கார் டிரைவர் ஆயுசுக்கும் இத மறக்க மாட்டாரு! பைக் ரைடர் செஞ்ச சம்பவம் அப்படி!
இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பது கிடையாது. இதனால் தினமும் கணக்கிட முடியாத அளவிற்கு சாலை விபத்துக்களை நாம் காண நேரிடுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால், சாலை விபத்துக்களுடன் சேர்த்து, மற்றொரு பிரச்னையையும் நாம் சாலைகளில் பார்த்து கொண்டுள்ளோம். வாகன ஓட்டிகளுக்கு இடையேயான சண்டைதான் அது. கடந்த காலங்களில், சாலைகளில் பயங்கரமாக சண்டையிட்டு கொண்ட பல்வேறு வாகன ஓட்டிகள் குறித்த செய்திகளை, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த வரிசையில் மற்றொரு மோதல் குறித்த செய்தி நமது கவனத்திற்கு வந்துள்ளது.
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி கொண்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், பைக் ரைடர் ஒருவரும், மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் டிரைவர் ஒருவரும் பயங்கரமாக சண்டையிட்டு கொள்வதை நாம் பார்க்கலாம்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? யார் மீது தவறு? என இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம். இந்த வைரல் வீடியோவில், சிங்கிள் லேன் சாலையில், பைக் ரைடர் ஒருவர் இடது பக்கத்தில் சென்று கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது எதிர் திசையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் டிரைவர் ஒருவர், மற்றொரு காரை ஓவர்டேக் செய்து வந்தார்.
அப்போதுதான் எதிர் திசையில் பைக் வந்து கொண்டிருப்பதை அவர் பார்த்தார். எனவே அவர் மீது மோதாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, உடனடியாக பிரேக்கை பிடித்தார். அந்த சமயத்தில் பைக் ரைடரும் பிரேக் பிடித்து விட்டார். இதனால் நல்ல வேளையாக சாலை விபத்து நிகழவில்லை.

ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை வெடித்து விட்டது. ஆம், மாருதி சுஸுகி பலேனோ கார் டிரைவர் மீது தவறு இருப்பதாக பைக் ரைடர் குற்றம் சாட்டினார். அத்துடன் அவருக்கு வழி கொடுக்காமல், சாலையின் நடுவிலேயே பைக்கை நிறுத்தி கொண்டார். இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது.
பைக் ரைடரின் செயலால் கோபமடைந்த மாருதி சுஸுகி பலேனோ காரின் டிரைவர், ஒரு கட்டத்தில் நிதானத்தை இழந்தார். பயங்கரமாக கத்த தொடங்கினார். சிங்கிள் லேன் சாலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் டிரைவர் ஓவர்டேக் செய்திருக்க கூடாது என்பது பைக் ரைடரின் வாதம்.
மறுபக்கம் காரின் டிரைவரோ, சாலையின் நடுவே இடைவெளி விட்டு கோடுகள் (Broken Lines) வரையப்பட்டிருக்கும் இடங்களில், ஓவர்டேக் செய்ய அனுமதி உண்டு என வாதிட்டார். இப்படியாக வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் பைக் ரைடரை, மாருதி சுஸுகி பலேனோ காரின் டிரைவர் அச்சுறுத்தும் வகையில் பேசினார்.
இருப்பினும் இதற்கெல்லாம் பயப்படாத பைக் ரைடர், வழி விட கூடாது என்ற தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவ்வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அது நடக்கவில்லை. இருவரும் சண்டையை தொடர்ந்தனர்.
ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் மாருதி சுஸுகி பலேனோ காரின் டிரைவர் அங்கிருந்து புறப்பட தயாரானார். ஆனால் பைக் ரைடர் நகரவில்லை. எனவே வேறு வழியில்லாமல் காரை சற்று நகர்த்தி, அதாவது தான் வந்து கொண்டிருந்த லேனுக்கு சென்று, அங்கிருந்து புறப்பட்டார். இந்த வீடியோ பைக் ரைடரால் எடுக்கப்பட்டுள்ளது.
அனேகமாக அவரது ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம். இந்த வீடியோவின் இறுதியில், காவல் துறை அதிகாரி ஒருவரிடம், பைக் ரைடர் பேசுவதை நம்மால் பார்க்க முடிகிறது. சிங்கிள் லேன் சாலையில் ஓவர்டேக் செய்ய அனுமதி உள்ளதா? இல்லையா? என அந்த அதிகாரியிடம், பைக் ரைடர் கேட்கிறார்.
இதற்கு அந்த காவல் துறை அதிகாரி, சிங்கிள் லேன் சாலையில், கார் டிரைவர் ஓவர்டேக் செய்ய முடியாது என பதில் அளித்தார். இதன்பின் வீடியோ ஆதாரத்தை வைத்து கொண்டு, அந்த மாருதி சுஸுகி பலேனோ காரின் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என பைக் ரைடர் கேட்கிறார். இதற்கு காவல் துறை அதிகாரி 'ஆம்' என பதில் அளிப்பதுடன், வீடியோ நிறைவடைந்து விடுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த விஷயத்தில் யார் மீது தவறு உள்ளது? என்பதை விவாதிப்பதற்கு முன்னால் அனைவரும் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்த வரை, மைய பகுதியில் இடைவெளி விட்டு கோடுகள் வரையப்பட்டிருக்கும் சாலைகளில் ஓவர்டேக் செய்யலாம்.
ஆனால் அது சூழ்நிலையை பொறுத்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது எதிர் திசையில் வாகனங்கள் எதுவும் வராமல் இருக்க வேண்டும். ஆனால் இந்திய சாலைகளில் தற்போதைய நிலையில் இது கிட்டத்தட்ட சாத்தியம் இல்லாதது. அதாவது இந்தியாவில் வாகன போக்குவரத்து தற்போது அதிகரித்து விட்டது.
எனவே எதிர் திசையில் வாகனங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். இதன் காரணமாகவே ஒரு சில வாகன ஓட்டிகள், எதிர் திசையில் சாலை காலியாகும் வரை காத்திருக்க பொறுமை இல்லாமல் ஓவர்டேக் செய்கின்றனர். ஆனால் இது தவறு. மைய பகுதியில் இடைவெளி விட்டு கோடுகள் வரையப்பட்டிருக்கும் சாலைகளில், எதிர் திசையில் வாகனங்கள் வராவிட்டால் மட்டும்தான் ஓவர்டேக் செய்ய வேண்டும்.
இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி பலேனோ டிரைவர் மீது தவறு இருக்கவே செய்கிறது. ஏனெனில் எதிர் திசையில் பைக் ரைடர் வந்து கொண்டிருந்த சமயத்தில், அவர் ஓவர்டேக் செய்துள்ளார். அத்துடன் பைக் ரைடரை அவர் அச்சுறுத்தியும் உள்ளார். எனவே மாருதி சுஸுகி பலேனோ டிரைவர் மீதுதான் தவறு.
ஒருவேளை எதிர் திசையில் வாகனம் வரும்போது, ஓவர்டேக் செய்த காரணத்திற்காக அவர் மன்னிப்பு கேட்டிருக்கலாம். அப்படி மன்னிப்பு கேட்டிருந்தால், பிரச்னை சுமூகமாக முடிந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவர் அதற்கு எல்லாம் இடம் தராமல், பைக் ரைடர் உடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
இங்கே நாங்கள் தெரிவிக்கும் விஷயம் என்னவென்றால், முதலில் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை சாலையில் தவறாமல் பின்பற்றுங்கள். ஒருவேளை ஏதேனும் தவறு நிகழ்ந்தால், எதிர் தரப்பிடம் சண்மையிடுவதை காட்டிலும், மன்னிப்பு கேட்டு விட்டு இடத்தை காலி செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications








