மாருதி கார் என்றால் தகர டப்பா என இனி யாராலும் சொல்ல முடியாது!! அப்படியொரு தரமான சம்பவம் நடந்திருக்கு!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் கார்களுள் ஒன்று ஃப்ரான்க்ஸ் (Fronx) ஆகும். பிரபலமான பலேனோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக ஃப்ரான்க்ஸ் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை வாடிக்கையாளர்கள் பலர் வாங்கியுள்ளனர். அத்தகைய ஃப்ரான்க்ஸ் கார் வாடிக்கையாளர்களுள் ஒருவர் மணிக்கு 100கிமீ வேகத்தில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளார். இருப்பினும், காரின் வலிமையான உடலமைப்பினால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி கார்கள் என்றாலே விலை குறைவானதாக இருக்கும், நல்ல மைலேஜ் தரும்; ஆனால் பாதுகாப்பு தரத்தை பெரியதாக எதிர்பார்க்க முடியாது என்கிற கருத்து பரவலாக மக்களிடத்தில் உள்ளது. ஆனால், மக்களின் இந்த பார்வை சமீப காலமாக மெல்ல, மெல்ல மாறி வருகிறது. இதற்கேற்றவாறு மாருதி சுஸுகியும் அதன் கார்களை முன்பை விட வலிமையானதாக உருவாக்க ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக, மாருதி சுஸுகியின் ஹார்டெக்ட் பிளாட்ஃபாரம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு மாருதி கார்களின் தரம் மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஹார்டெக்ட் பிளாட்ஃபாரத்தில் பலேனோ கார் வடிவமைக்கப்பட்ட நிலையில், அதே ஹார்டெக்ட் பிளாட்ஃபாரத்தை உபயோகித்து ஃப்ரான்க்ஸ் காரை மாருதி சுஸுகி உருவாக்கியது. ஃப்ரான்க்ஸ் காரின் உடல் வலிமையை வெளிக்காட்டும் வகையில் தற்போது ஒரு விபத்து நடந்துள்ளது.
புவனேஷ்வர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை-16இல் ஒருவர் தனது ஃப்ரான்க்ஸ் காரில் மணிக்கு 100கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். இவரது காருக்கு அருகே கனரக லாரி ஒன்று சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக லாரி உடன் கார் மோதி உள்ளது. மணிக்கு 100கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததால், விபத்தில் சிக்கிய கார் பலத்த சேதங்களை சந்தித்துள்ளது. இதனை படங்களில் காணலாம்.

ஃப்ரான்க்ஸ் காரின் முன்பக்கத்தின் வலதுப்பக்கம் அப்பளம் போல் நசுங்கியுள்ளதை பார்க்க முடிகிறது. காரின் முன்பக்க பம்பர், கிரில், பொனெட், ஃபெண்டர், ஹெட்லேம்ப் மற்றும் டயர்கள் உள்ளிட்டவை அதிக சேதங்களை சந்தித்துள்ளன. இது தவிர்த்து, காரின் மற்ற இடங்களில் எந்த பாதிப்பும் இல்லை. லாரி உடன் மோதலுக்குள்ளான உடனேயே காரை டிரைவர் நிறுத்தியதால் கார் கவிழ்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த விபத்து சில வினாடிகளில் நடந்து முடிந்துள்ளது. சம்பவத்தின்போது, காருக்குள் 3 பேர் இருந்துள்ளனர். கார் பலத்த சேதாரங்களை சந்தித்துள்ள போதிலும், காரினுள் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதற்கு காரணம், விபத்து நடந்த உடனேயே ஏர்பேக் விரிவடைந்துள்ளது. காரின் பில்லர்கள் வலிமையானதாக இருந்ததால், விபத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள் உட்புற கேபின் வரையில் செல்லவில்லை.
பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு அதிவேக பயணம் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதற்காக, நெடுஞ்சாலையில் 100kmph வேகத்தில் கூட செல்லாமல் இருக்க முடியாது. ஆதலால், இவ்வாறான விபத்துகளை தவிர்க்க வேண்டுமென்றால், அதிவேக பயணத்தின்போது வழக்கத்தை காட்டிலும் இன்னும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு அருகே செல்லும்போது இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்தில் உள்ளே இருந்த பயணிகளை காப்பாற்றியது நிச்சயமாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் வலிமையான உடலமைப்பு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஏனெனில், காரின் முன்பக்கத்தை தவிர்த்து மற்ற இடங்கள் யாவும் நல்லப்படியாகவே உள்ளன. இதில் இருந்து சமீப காலங்களில் மாருதி சுஸுகி கார்களின் தரம் மேம்பட்டுள்ளதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








