மாருதி சுஸுகி நிர்வாக இயக்குனருக்கு மீண்டும் கோவிட்-19... குடும்பம் ஜப்பானில் உள்ளதால் மருத்துவமனையில் அனுமதி
மாருதி சுஸுகி நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கு மீண்டும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கெனிச்சி அயுகவா மீண்டும் ஒரு முறை கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. பரிசோதனையில் அவருக்கு பாஸிட்டிவ் வந்துள்ளது.

எனவே குர்கான் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு செய்தி வெளியிட்டுள்ளது. கெனிச்சி அயுகவா இந்தியாவில் தனியாகதான் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் ஜப்பானில் வசிக்கின்றனர். இதன் காரணமாக தன்னை மருத்துவமனையில் அனுமதித்து கொள்வது என கெனிச்சி அயுகவா முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''கடந்த முறை கோவிட்-19 தொற்று ஏற்பட்டபோதும் அவருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இம்முறையும் அப்படிதான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் ஜப்பானில் உள்ளதால், மருத்துவமனையில் சேர்ந்து கொள்வது என்று கெனிச்சி அயுகவா முடிவெடுத்துள்ளார்'' என்றார்.

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பிரச்னை தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த ஆண்டை விட இம்முறை இரண்டாவது அலையில் இந்தியா மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக கோவிட்-19 நோயாளிகளுக்கு மிக கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

டெல்லி, உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் பாதிப்பு கடுமையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது முழுமையான ஊரடங்கு, இரவு நேரடங்குகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பாதிப்பை பொறுத்து மேலும் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்துவது குறித்த அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. இதில், எம்ஜி மோட்டார், டொயோட்டா, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது ஆலையில் 3 ஷிப்ட்கள் இயங்குவதை வெறும் ஒன்றாக குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார், பைக் உள்ளிட்ட நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், அவற்றின் காத்திருப்பு காலம் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏற்கனவே செமி கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னையால் ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டுள்ளது.

செமி கண்டக்டர்களுக்கான தட்டுப்பாடு இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் துறையை பாதித்துள்ளது. இந்த சூழலில், இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையும் வேகம் எடுத்துள்ளதால், ஆட்டோமொபைல் துறை இன்னும் கடுமையான பாதிப்புகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








