சாலை பாதுகாப்பில் இந்தியாவிலேயே சிறந்த நகரம் எது தெரியுமா?
சாலைப்பாதுகாப்பில் சிறந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது மாருதி சுசுகி நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.
இந்திய நகரங்களில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்ட இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான 'மாருதிசுசுகி இந்தியா' தற்போது இந்திய நகரங்களின் சாலைப் பாதுகப்பு பற்றிய ஆய்வுத் தகவல்களையும் தரவரிசையையும் வெளியிட்டுள்ளது.

சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய 8 நகரங்களில் சாலை பாதுகாப்பு குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சியுடன் இணைந்து மாருதி நிறுவனம் ஆய்வு நடத்தியது.

மாருதி நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் சாலை வசதிகள், அவற்றின் பராமரிப்பு, தரம், ஒளி வசதி, தூய்மை, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு போன்ற அம்சங்கள் அடிப்படையிலும், மற்றும் சாலையை பயன்படுத்தும் பல்வேறு தரப்பினரின் கருத்துகள் அடிப்படையிலும் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

இந்த அம்சங்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் சாலைப் பாதுகாப்பில் இந்திய நகரங்கள் வகிக்கும் நிலை குறித்த குறியீட்டை வெளியிட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு நகரங்களின் சாலைப் பாதுகாப்பு பட்டியலை வெளியிட்டார்.

முடிவுகள்
- இதன்படி நாட்டிலேயே சாலைப்போக்குவரத்தில் சிறந்த நகரமாகவும், முதல் இடத்தையும் பெங்களூரு நகரம் பிடித்துள்ளது.
- குஜராத்தின் அகமதாபாத் நகர் தூய்மை அடிப்படையில் முதல் இடம் வகிக்கிறது.
- சாலைகளில் அவசர கால உதவி கிடைப்பதில் நம் சென்னை முதல் இடம் பெற்றுள்ளது.
- உள்கட்டமைப்பு, சாலையின் தரம் மற்றும் பரவலான சாலை வசதிகளில் தலைநகர் டெல்லி முதல் இடத்தை பிடித்துள்ளது.
- இதே போல மாற்றுத்திறனாளிகள், பாதசாரிகளுக்கான உரிமை, மோட்டார் சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அடிப்படையில் மும்பை நாட்டில் முதல் இடம் பிடித்துள்ள நகராக உள்ளது.
- புகை மாசு கட்டுப்பாட்டில் மகராஷ்டிராவில் உள்ள புனே நகர் சிறந்து விளங்குகிறது. இங்கு கடுமையான மாசு கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


சாலைகளில் சிறந்த ஒளிவசதி மற்றும் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் மற்ற நகரங்களை கொல்கத்தா முந்துகிறது.


நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த ஆய்வு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ். கல்சி பேசுகையில், "சாலைப் பாதுகாப்பு நாட்டின் அதிமுக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. சாலைப்பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்துகள், உயிரிழப்புகள் நொடிக்கு நொடி ஏற்பட்டு வருகின்றன"

"ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியாக உள்ள மாருதி நிறுவனம் இப்பிரச்சனையை தீவிரமாக கையில் எடுத்துள்ளது, ஓட்டுநர் பயிற்சியின் ஒரு அங்கமாக பாதுகாப்பான வாகன இயக்கும் முறைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம்" என்றார்.

இதன் ஒரு அங்கமாகவே தற்போது இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலைப் பாதுகாப்பில் நகரங்களின் நிலையும், தொய்வாக உள்ள அம்சங்களை அடையாளம் காணவும் நகர நிர்வாகத்தினருக்கு இது உதவும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசு அமைப்புகள், தன்னார்வு அமைப்புகள் மற்றும் கார்ப்பரேட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலைப் பாதுகாப்பை உயர்த்தும் முயற்சியில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்த அறிக்கை வெளிட்டதன் நோக்கமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








