ஜிஎஸ்டி-இல் இருந்து தப்பிக்க மாருதி சுஸுகி இந்த வேலையை எல்லாம் செய்யுதா!! மத்திய அரசு வைத்த செக்மேட்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் குறிப்பிட்ட சேவைகளில் வரியை தவிர்க்க முயன்றதாக கூறி, மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி ஆணையம் அதிரடியாக, காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த காரணம் கேட்பு நோட்டீஸுக்கு பதில் அளிக்கவில்லை எனில், மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி ஆட்டோமொபைல் சார்ந்து பல்வேறு வணிகங்களிலும் ஈடுப்பட்டு வருகிறது. அவற்றுள் குறிப்பிட்ட வணிக சேவைகளுக்கான வரி பொறுப்பை ஏற்க மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு ரிவர்ஸ் கட்டண அடிப்படையில் இந்த நோட்டீஸை ஜிஎஸ்டி ஆணையம் அனுப்பி உள்ளது.

2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2022 ஆகஸ்ட் மாதம் வரையில் மாருதி சுஸுகி மேற்கொண்ட சில சேவைகளுக்கு வரி தவிர்க்கப்பட்டு உள்ளதாக இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில் செலுத்தியிருக்க வேண்டிய வரி தொகையான ரூ.139.3 கோடியை ஏற்கனவே மாருதி சுஸுகி நிறுவனம் செலுத்துவிட்டது. அதாவது, சற்று காலத்தாமதமாகவே வரியை மாருதி சுஸுகி செலுத்தியது.
வரியை தவிர்க்க காரணம் என்ன என்பதை இந்த நோட்டீஸ் மூலமாக ஜிஎஸ்டி ஆணையம் கேள்வி கேட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் தவிர்க்க முயன்ற வரிக்கான வட்டியையும், தவிர்க்க முயன்ற குற்றத்திற்கான அபராதத்தையும் பெறுவதே இந்த நோட்டீஸின் நோக்கம் ஆகும். ஆனால், மாருதி சுஸுகி நிறுவனமோ சேவையை பெறுவோர் தான் வரியை செலுத்த வேண்டும் எனவும், சேவையை வழங்கும் நாங்கள் செலுத்த வேண்டியதில்லை என கடந்த செப்.29ஆம் தேதி இதுகுறித்து ஓர் அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாக்கல் செய்துள்ளது.

இருப்பினும், ஜிஎஸ்டி ஆணையத்தின் இந்த காரணம் கேட்பு நோட்டீஸுக்கு தீர்ப்பாணையத்தின் முன்பு தங்களது பதிலை ஆவணங்களாக தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள மாருதி சுஸுகி நிறுவனம், இந்த நோட்டீஸினால் தங்களது பொருளாதாரம், செயல்பாடுகள் மற்றும் மற்ற நடவடிக்கைகளுக்கு எந்தவொரு பிரச்சனையும், இடையூறும் இல்லை என உறுதிப்பட கூறியுள்ளது.
ஜிஎஸ்டி ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளில் இருந்து மாருதி சுஸுகி மீளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் இவ்வாறான மத்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளில் இருந்து இந்த நிறுவனம் மீண்டு வந்துள்ளது. ஜிஎஸ்டி ஆணையம் தற்போது அனுப்பியுள்ள நோட்டீஸை போன்று, மத்திய கலால் வரி துறை 2016இல் தாக்கல் செய்த வழக்கை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2006 ஜூன் முதல் 2011 மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் செலுத்த வேண்டிய வரி தொடர்பான வழக்காக அது இருந்தது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம் ரூ.57.2 கோடி தொகையை மாருதி சுஸுகி செலுத்த வேண்டியது ரத்து செய்யப்பட்டது. இந்த தொகையில் மேற்கூறப்பட்ட காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வரி மட்டுமின்றி, அபராத தொகையும் அடங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2016இல் மத்திய கலால் வரி துறையால் உத்தரவிடப்பட்ட தொகையை விட தற்போது ஜிஎஸ்டி ஆணையம் உத்தவிட்டுள்ள தொகை பெரியது ஆகும். அந்த சமயத்தில் மேற்கொண்டதை போல், நீதிமன்றத்தை நாடி இந்த பிரச்சனையை மாருதி சுஸுகி முடித்துக் கொள்ளுமா? அல்லது உத்தரவிடப்பட்டுள்ளதன் படி மொத்த அபராத தொகையை செலுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









