இவன் இவ்ளோ நல்லவன் இல்லையே.. ஃபுல் லோடு கற்களுடன் லாரி சாய்ந்தும் பாகுபலி மாதிரி அசராம நின்ற ஸ்விஃப்ட்..
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார் பாதுகாப்பான பயணத்திற்கு துளியும் உகந்ததல்ல என்கிற தகவலையே இதுவரை நாம் கேட்டிருப்போம். ஆனால், இப்போது கிடைத்திருக்கும் தகவல் உங்களுக்கு பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். வண்டி நிறைய பாறை கற்கள் லோடை ஏற்றி வந்த மினி லாரி ஒன்று ஸ்விஃப்ட் காரின் மீது சாய்ந்தும், அந்த காருக்கு ஒன்றுமே ஆகவில்லை என்கிற தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. தகவல் மட்டுமல்ல, அத்துடன், ஸ்விஃப்ட் கார் மீது லோடு வண்டி சாய்ந்திருக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.
இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்திலேயே அரங்கேறி இருக்கின்றது. மேலும், விபத்தைச் சந்தித்து இருப்பது புத்தம் புதிய ஸ்விஃப்ட் கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக டெலிவரி கொடுக்கும்போது ஒட்டப்பட்ட ரிப்பன் அந்த காரின் பான்னெட் மீது இப்போதும் அப்படியே இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

இதை அகற்றக்கூட இல்லாத நிலையிலேயே விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அதுமட்டுமல்ல வாகனத்தை பதிவுகூட செய்யாத நிலையே காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக காரில் பதிவெண் பிளேட் இல்லாமல் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. வீடியோவில் டிரக் முழுமையாக சாய்ந்துவிடாமல் அப்படியே நிறுத்தப்பட்டு இருப்பதையும் பார்க்க முடிகின்றது.
டிரக் மட்டுமல்ல காரின்மீது சில பாறை கற்களும் கொட்டியிருப்பதை நம்மால் காண முடிகின்றது. சேதம் சற்றும் அதிகம் என்றாலும், கார் அதிக உறுதித் தன்மையுடன் நிற்கின்றது. இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சமீபத்ததிலேயே புதிய மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) கார் அதிக பாதுகாப்பு திறன்மிக்கது என்கிற மகுடத்தை சூடியது.

அது, குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் அது ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றது. இந்த நிலையிலேயே தானும் ஓர் பாதுகாப்பான கார் என்பதை விபத்தின் வாயிலாக ஸ்விஃப்ட் வெளிக்காட்டி இருக்கின்றது. ஆனால், இந்த கார் பாதுகாப்பான பயணத்திற்கு உகந்த வாகனம் என்கிற எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த விபத்தினால் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. இது பலருக்கும் ஆறுதல் அளிக்கும் தகவலாக அமைந்திருக்கின்றது. விபத்திற்கான துள்ளியமான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. இரண்டு வாகனங்களும் குறுகிய பாதைக்குள் ஒரே நேரத்தில் நுழைந்ததால் இந்த விபத்து அரங்கேறி இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.
ஸ்விஃப்ட் வழிவிட்டு போகும் விதமாக லோடு ஏற்றி வந்த டிரக் மேடான பகுதி மீது ஏறியபோது இந்த விபத்து அரங்கேறியிருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகின்றது. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள் கார்கள் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றன.
இந்த மாதிரியான விபத்துகளின்போது பெரும்பாலும் உயிரிழப்புகள் மற்றும் பெருத்த சேதங்களே ஏற்படும். இதற்கு மிக சிறந்த உதாரணமாக சமீபத்தில் பெங்களூருவில் அரங்கேறிய வால்வோ கார் விபத்தைக் கூறலாம். காரில் பயணித்த அனைவரும் கன்டெய்னர் சாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் இங்கே ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
அதேநேரத்தில், காரின் முன் பக்கம் மிகப் பெரிய சேதத்திற்கு ஆளாகி இருக்கின்றது. இது புத்தம் புதிய கார் என்பதால் விபத்து சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. புதிய ஸ்விஃப்ட் கார் மிக அதிக பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கிய காராக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா என ஏகப்பட்ட அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இந்தியாவில் புதிய ஸ்விஃப்ட் கார் ரூ. 7 லட்சத்திற்கும் குறைவான ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்விஃப்ட் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், அதில் பாதுகாப்பு குறைவு என்கிற கருத்து பரவலாக காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சில நேரங்களில் நானும் உயிரை காப்பாற்றுவேன் என இந்த விபத்தின் வாயிலாக சொல்லாமல் சொல்லியிருக்கின்றது ஸ்விஃப்ட்.


Click it and Unblock the Notifications








