படத்தை பாக்கும்போதே ஒடம்பெல்லாம் ஒதறுது! ஆனா உள்ள இருந்தவங்களுக்கு ஒன்னுமே ஆகலயா! அந்த நிறுவனத்தின் காரா இது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த 2005ம் ஆண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, சுமார் 20 வருடங்கள் ஆகப்போகிறது. இவ்வளவு காலம் ஒரு கார் பிரபலமாக இருக்க வேண்டும் என்றால், சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டே இருப்பது மிகவும் அவசியமான விஷயமாகும்.
மாருதி சுஸுகி நிறுவனம் இதை கச்சிதமாக செய்து கொண்டுள்ளது. கடந்த மே மாதத்திற்கு முன்பு வரை இந்திய சந்தையில் விற்பனையில் இருந்தது, 3வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஆகும். ஆனால் இந்த காரின் 4வது தலைமுறை மாடல், கடந்த மே மாத தொடக்கத்தில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

மாருதி சுஸுகி நிறுவனம் செயல்திறன், டிசைன் மற்றும் வசதிகள் ஆகிய அம்சங்களில் மட்டும், ஸ்விஃப்ட் காரை மேம்படுத்தவில்லை. கூடவே பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்தே மேம்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் தற்போது மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இதை உண்மை என நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று சமீபத்தில் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் சமீபத்தில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் ஆட்டோ ஒன்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த ஆட்டோ தவறான திசையில் வந்துள்ளது. எனினும் விபத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் டிரைவர் காரை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், அங்கிருந்த டிவைடர் மீது மோதியது.
டிவைடர் மீது மோதிய வேகத்தில், இந்த காரில் இருந்த 6 ஏர்பேக்குகளும் விரிவடைந்துள்ளன. இதன் காரணமாக காருக்கு உள்ளே இருந்தவர்களுக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) தற்போது யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் பெரிய அளவிலான விபத்து ஒன்றில் சிக்கியிருப்பது அனேகமாக இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. ஆனால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி, காருக்கு உள்ளே இருந்த அனைவரையும் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் காப்பாற்றியுள்ளது.
இதற்கு ஏர்பேக்குகள் சரியான நேரத்தில் விரிவடைந்தது முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை 6.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.59 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் தற்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் பாதுகாப்பிற்காக வழங்கப்படுகின்றன. அதாவது விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் விலை உயர்ந்த டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருக்கும்.
இது புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் பாதுகாப்பை வெகுவாக உயர்த்தியுள்ளது. முன்பு மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் மீது பாதுகாப்பு விஷயத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








